கடலலைகளின் நடனக்கோலத்தைக் கண்டு கரைந்துபோன சூரியன். பாதையெங்கும்
செம்மண் சேறு. பாதையின் இடதுபக்கத்தில் விளைந்து நிற்கும் வயல்வெளிகள். வயல்வெளிக்கு நடுவில் நீண்டு செல்லும் ஒரு சின்னப் பாதை. பாதையோரத்தில் மேகத்தைத் தொட்டுவிடுவதுபோல உயர்ந்து நிற்கும் மரங்களின் வரிசை. மரங்களை ஒட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள். அங்கிருந்த மொத்த சூழலே காவி உடுத்திய தெய்வாம்சம் பொருந்திய துறவியைப்போல காணப்பட்டது. காயம்மா மிகுந்த கவனத்தோடு நடந்துகொண்டிருந்தார். முதுகு சற்றே வளைந்திருந்தது. ஆனால் கூனலில்லை. நெற்றி மீது இழுத்துவிடப்பட்டிருந்த புடவை முந்தானை காற்றில் சரிந்தபோதெல்லாம் இழுத்துத் தடுத்தபடி இருந்தார்.