நவீன சிறுகதைக்கான பாதையை உருவாக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவர் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி 1884இல் வெளிவந்தது. கச்சிதமான வடிவ அமைப்பு, நுட்பமான சித்தரிப்பு, வசீகரமான மொழி ஆகியவற்றின் காரணமாக இலக்கிய உலகில் அவருடைய சிறுகதைகளுக்கான இடம் அப்போதே உறுதிப்பட்டுவிட்டது. அடுத்த இருபதாண்டுகளில் அவர் எழுதிய சிறுகதைகள் பதிமூன்று தொகுதிகளாக வெளிவந்தன. ரஷ்யாவுக்கு வெளியே பல மொழிகளில் அக்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றின் வழியாக உலகெங்கும் அவருக்கு வாசகர்கள் உருவானார்கள். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் புதிய தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படும் எழுத்தாளராகவும் மீண்டும் மீண்டும் மொழிபெயர்க்கப்படும் எழுத்தாளராகவும் விளங்குகிறார் ஆன்டன் செகாவ்.