வழக்கமாக நடைப்பயிற்சிக்கு நான் செல்லும் பூங்காவுக்கு அருகில் பழைய செய்தித்தாட்களையும் புத்தகங்களையும் வாங்கி விற்கக்கூடிய கடையொன்று உள்ளது. அதை நடத்தி வருபவர் ஒரு கன்னடியர். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அகராதியை மலிவான விலைக்கு அவர் எனக்குக் கொடுத்தார். அன்றுமுதல் எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் உருவாகிவிட்டது.
போன வாரம் ஞாயிறு அன்று மாலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு சிறிது நேரம் அவருடைய கடைக்குச் சென்று வழக்கம்போல உரையாடிகொண்டிருந்தேன். அவர் எடைக்கு வாங்கிய புத்தகங்களின் குவியல் கடைவாசலில் இருந்தது. அதை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துவிட்டு பக்கத்திலேயே அடுக்கி வைத்தபடி இருந்தேன். எல்லாமே கன்னட, தெலுங்கு புத்தகங்கள். சில தமிழ், வங்கமொழிப் புத்தகங்களும் இருந்தன. தன் மேசையில் இருந்த புத்தக அடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை இழுத்து, “இந்தாங்க, இத பாருங்க. தமிழ் புஸ்தகம்தான். ஒங்களுக்குப் புடிக்குமேன்னு எடுத்து வச்சேன்” என்றபடி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார் அவர்.