1944 ஆம் ஆண்டு. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு சொந்த ஊரான கோபிச்செட்டி பாளையத்துக்குத் திரும்பி வந்திருந்தார் இருபத்தேழு வயதான இளைஞரொருவர். ஒருநாள் தன் வயதையொத்த நண்பர்களுடன் சிறையனுபவங்களைப் பகிர்ந்தபடி உரையாடிக்கொண்டிருந்த தருணத்தில் கிரி என்னும் நண்பர் பேச்சோடு பேச்சாக ”காந்தியடிகளைச் சந்திக்கச் செல்லலாமா?” என்று கேட்டார். இளைஞரின் ஆழ்மனத்தில் கருவாக இருந்த அதே விருப்பம் அக்கணமே சுடர்விட்டு பெரிதானது. சென்னையில் உடல்நலம் குன்றியிருக்கும் நண்பரொருவரைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டினரிடம் தெரிவித்துவிட்டு இருவரும் புறப்பட்டனர். நேராக சென்னைக்குச் சென்று அங்கிருந்து வண்டி மாறி வார்தாவுக்குப் போனார்கள்.