சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பேசுபொருளாக விளங்கும் புகழ்பெற்ற ஓவியங்களின் புகைப்படங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே பைபிள் கதைகளை மையமாகக் கொண்டவை. புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு சார்ந்த பல தருணங்களையே அந்த ஓவியங்கள் முன்வைத்திருந்தன. லியோனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்செலோ, பெலினி, எல் கிரெசோ என உலகப்புகழ் பெற்ற ஓவியக்கலைஞர்கள் தீட்டிய ஓவியங்கள். ஒருவகையில் உலக ஓவிய வரலாற்றை அந்தப் படங்களைக்கொண்டே ஒரு பார்வையாளரால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். இருபது முதல் இருபத்தைந்து படங்கள் மட்டுமே போதிய இடைவெளியுடன் அந்தக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.