Home

Showing posts with label ஜீவன் லீல. Show all posts
Showing posts with label ஜீவன் லீல. Show all posts

Sunday, 8 August 2021

காகா காலேல்கர் : மாபெரும் நாடோடி

17.02.1915 அன்று தாகூரைச் சந்திப்பதற்காக காந்தியடிகள் சாந்தி நிகேதன் பள்ளிக்குச் சென்றிருந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களை அண்ணா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, ஐயா என உறவுச்சொற்கள் வழியாக அழைப்பதையும் உரையாடுவதையும் கண்டு மகிழ்ந்தார். சார், மேடம் போன்ற மேற்கத்தியச் சொற்களைவிட இத்தகு உறவுச்சொற்கள் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நடுவில் இயல்பான வகையில் ஒரு நெருக்கத்தை உருவாக்குவதை அவர் கண்கூடாகக் கண்டுணர்ந்தார். அவரே தென்னாப்பிரிக்காவில் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட வழிமுறை அது. அன்று மாலையில் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அதையொட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்தார்.