1920இல் டிசம்பர் மாத இறுதியில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் காந்தியடிகள் முன்வைத்த ஒத்துழையாமைப் போராட்டத் திட்டங்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நீதிமன்றங்களை விலக்கவேண்டும், சட்டமன்றங்களை விலக்கவேண்டும், வெளிநாட்டுத் துணிகளை விலக்கவேண்டும் என்ற மூன்று விலக்குகளும் காந்தியடிகளுடைய தாரக மந்திரங்களாக இருந்தன. 1921 ஆம் ஆண்டு முழுதும் காந்தியடிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஓய்வில்லாமல் பயணம் செய்து மக்களுடைய கவனத்தை ஒத்துழையாமை இயக்கத்தின்பால் ஈர்த்தார். அவருடைய சொற்கள் வன்முறையில் ஈடுபடுவதற்குத் துடித்துக்கொண்டிருந்த மக்களுடைய மனப்பாங்கை மாற்றியது. நாட்டுக்காக தியாகம் செய்யத் தயங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டி ஏதேனும் ஒரு வகையில் நாட்டுக்குத் தொண்டாற்றும் எண்ணத்தை ஊட்டியது.