வண்ணதாசனின் சிறுகதைகளின்
மையங்கள் ஏறக்குறைய இளந்தூறலைப் போன்றவை. இளந்தூறலோடு இணைந்து வருகின்றன மண்ணின் மணமும்
மழையின் மணமும். மழை வலுக்கக்கூடும் என்ற எண்ணத்தால் பொங்குகிறது கிளர்ச்சி. வானெங்கும்
இருண்டு அடர்ந்த மேகத்திரள் அந்தக் கிளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டுகிறது. நனைந்தபடி
நடக்கவும் நடனமிடவும் தூண்டும் ஆசைக்கு அளவே இல்லை. வயலின் இசையென தூறலோடு சேர்ந்தொலிக்கிறது
ஒரு சிறு இசைக்கோர்வை. இசையின் காந்த இழுப்பில் தளைகளை விலக்கி மனிதர்கள் வாசலை விட்டிறங்கி
தூறலில் நனைகிறார்கள். எதிர்பாராத விதமாக திசைதெரியாமல் குழம்பி வீசும் காற்றின் வேகத்தில்
தூறல் சட்டென நிற்கிறது. இசையும் நிற்கிறது. கணநேர இன்பத்தை அல்லது இன்பம் போன்ற கனவை
மட்டுமே மனத்தில் நிரப்பிக்கொண்டு வாசலுக்குத் திரும்பி வந்து சேர்கிறார்கள். இளந்தூறல்
ஒரே நேரத்தில் இன்பத்தின் படிமமாகவும் இழப்பின் அல்லது வலியின் குறியீடாகவும் அமைந்துவிடுகிறது.