தமிழில் நாவல்கள் உருவாகத் தொடங்கிய காலத்திலிருந்தே இல்லற வாழ்வின் சிக்கல்கள் ஒரு பேசுபொருளாக மாறிவிட்டது. பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் திருமணம் செய்துகொண்டதையும் சிக்கலில் சிக்கிக்கொண்டதையும் பிறகு மீண்டு வந்து இணைந்து வாழ்வாங்கு வாழ்ந்த கதையோடுதான் தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் அமைந்திருக்கிறது. இல்லற வாழ்க்கையைக் களமாகக் கொண்ட பல நாவல்கள், சிக்கல்கள், துன்பங்கள், இறுதியில் இணைந்து நிம்மதியை நாடுதல் என்னும் மூன்று புள்ளிகளுக்கு இடையிலான உலகத்திற்குள்ளேயே உலவிவந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரைக்கும் இதுதான் நிலைமை. புத்தாயிரத்தாண்டில் நிலைமை சற்றே மாறத் தொடங்கியது.