கடந்த ஆகஸ்டு மாதத்தோடு நான் வேலைக்கு வந்து இருபத்தியேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்கத்தில் புதுச்சேரியில் ஓராண்டையும் பிறகு ஆந்திரத்தில் இரண்டு ஆண்டுகளையும் அதைத் தொடர்ந்து இருபத்திநான்கு ஆண்டுகளைக் கர்நாடகத்திலும் கழித்திருக்கிறேன்.
இந்த இடைவெளியில் பல ஊர்களில் பலவிதமான அதிகாரிகளிடம் வேலைபார்த்த அனுபவமுண்டு. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. சில அனுபவங்கள் மேன்மையானவை. சில அனுபவங்கள் மறக்கமுடியாத வடுக்களையும் வலியையும் தந்தவை. இன்னும் சிற்சில அனுபவங்கள் கசப்பையே பரிசாக வழங்கியவை. எழுதத் தொடங்கினால் ஒவ்வொன்றையும் ஒரு கதையாகச் சொல்லலாம்.