ஆறாம் வகுப்பில் எங்களுக்கு ஆசிரியராக இருந்த
ராமசாமி சாரை நினைத்தால் எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்கு அவர்
எடுக்காத பாடமே இல்லை. தமிழ் நடத்துவார். கணக்கும் சொல்லித்தருவார். ஆங்கில எழுத்துகளை கூட்டி உச்சரிக்கும் விதங்களில்
இருக்கும் வேறுபாட்டை, மரங்களில் கொத்துக்கொத்தாகத் தொங்கும் புளியம்பழங்களைக் குறிபார்த்து
அடிக்கச் சொல்லித் தருகிற லாவகத்தோடும் சுவாரஸ்யத்தோடும் சொல்லித்தந்ததை மறக்கவே முடியாது.
ஒவ்வொரு நாளும் எங்கள் முன்னால் விலைமதிப்பற்ற புதையல்களை அவர் அள்ளிப்போட்டார் என்றுதான்
சொல்லவேண்டும். இந்தப் பாடங்களையெல்லாம் நடத்துகிற சமயத்தில் கொஞ்ச நேரம் புத்தகத்தைப்
புரட்டிப் பார்க்கவேண்டிய அவசியம் இருந்தது அவருக்கு. ஆனால், சரித்திரம், பூகோளம் நடத்துவதற்கு
எந்தப் புத்தகத்தையும் புரட்டிப் பார்க்கிற அவசியமே இருந்ததில்லை. அப்படியே நேரிடையாக
நினைவிலிருந்து அருவிபோலப் பொழியத் தொடங்கிவிடுவார்.