கர்நாடகத்தைச் சேர்ந்த இந்துஸ்தானிக்கலைஞர் ஹானகல் கங்குபாய் சமீபத்தில் மறைந்ததையொட்டி எல்லா இதழ்களிலும் அவரைப்பற்றிய அஞ்சலிக்கட்டுரைகள் வெளிவந்தன. சில கட்டுரைகள் அவருக்கும் அவருடைய தாயாருக்கும் இருந்த நெருக்கமான உறவைச் சுட்டிக்காட்டியிருந்தன. கங்குபாய் சிறுமியாக இருந்தபோதே இசையில் ஆர்வமுடன் விளங்கினார். கங்குபாயின் தாயார் மிகச்சிறந்த கர்நாடக இசைக்கலைஞர். தாயின் செல்வாக்கு சிறுமியின் உள்ளத்தில் படிந்திருக்கக்கூடும். அதனால் சின்ன வயதிலேயே அவரும் இசையில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். மகளுடைய இசையார்வம் தாய்க்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது. கர்நாடக இசையின் பாதையில் தன்னையும் கடந்து மகள் செல்லவேண்டும் என்ற கனவு அவருக்குள் இருந்தது.