நேத்ராவதி
நதியில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது தர்மஸ்தலாவைப் பார்க்கவேண்டும் என்பது என்
நீண்டநாள் விருப்பம். மழைநாட்களில் சின்னச்சின்ன கிளைகளாக உருவாகி மலைப்பகுதிகளைத்
தழுவி ஓடிவந்து இணைந்து நேத்ராவதி என வடிவமெடுத்துப் பொங்கிப் புரளும்போதுதான் புதுவெள்ளம்
எழுச்சியோடு பாய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தைப்பற்றிய செய்தியைப் படிக்கும்போது
மனம் பரபரக்கும். அக்கணமே வண்டியைப் பிடித்துப்
பயணம்செய்து குளிர்மேங்கள் கவிந்திருக்கிற மலையடிவாரத்தில் நின்றுவிடவேண்டும் என்று
தோன்றும். ஆனால் வேலைநெருக்கடிகளால் அந்தக்கனவு அப்படியே நொறுங்கிவிடும். ஒரேஒரு முறை
எந்தக் குறுக்கீடும் இல்லாமல் என் ஆசைப்படியே புறப்பட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அன்று
இரவே வண்டியேறித் தூக்கமில்லாமல் பயணம் செய்து அடுத்த நாள் காலை தர்மஸ்தலாவில் இறங்கினேன்.