30.01.1948 அன்று மாலை, தன்னுடைய இருப்பிடத்திலிருந்து பிரார்த்தனைக் கூடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த காந்தியடிகள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி மண்ணில் சாய்ந்தார். அன்று இரவு வானொலி வழியாக பிரதமராக இருந்த நேரு முதன்முதலாக தன் இரங்கலுரையை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து அன்றும் அதற்கடுத்த நாட்களிலும் சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், ஜகஜீவன்ராம், கிருபளானி, சரோஜினி நாயுடு, ராஜாஜி போன்ற பல தலைவர்களும் ஹோரஸ் அலெக்சான்டர், நார்மல் கிளிஃப் போன்ற அயல்நாட்டுப் பத்திரிகையாளர்களும் சி,வி,ராமன், தேவதாஸ் காந்தி, ஜி.டி.பிர்லா போன்றோரும் தொடர்ச்சியாக அஞ்சலியுரையை நிகழ்த்தினர். அவ்வுரைகளில் 33 ஆளுமைகளின் அஞ்சலியுரைகள் தொகுக்கப்பட்டு நேருவின் முன்னுரையோடு பப்ளிகேஷன் டிவிஷன் வழியாக நூலாக வெளிவந்தது. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்தகம் தமிழில் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்தது.