சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த இந்தி பிரச்சார சபையின் வெள்ளி விழாவுக்காகவும் தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் பழனி முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுவதற்காகவும் 22.01.1946 அன்று காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்தார். சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர் மதுரைக்கும் பழனிக்கும் சென்றார். அந்தப் பயணத்தில் ரயில் நின்ற எல்லா நிலையங்களிலும் அவரைக் காண்பதற்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். சில நிலையங்களில் அவர் பொதுமக்களைப் பார்த்து ஒருசில நிமிடங்கள் உரையாற்றினார். சில நிலையங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் பெட்டியைவிட்டு வெளியே வந்து நின்று கைகுவித்து வணங்கியபடி நின்றுவிட்டுச் சென்றார்.