“வரட்டுமா பெரீம்மா. ராதிகா வந்துட்டா. காலையில நான் கஞ்சி எடுத்துகினு வரேன். எத நெனச்சியும் பயப்படக்கூடாது, தெரியுதா?” என்று சொல்லிக்கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்தார் அம்மா. புடவைச் சுருக்கங்களை நீவிச் சரிப்படுத்தியபடி, சரிவாக வைத்திருந்த தலையணையில் பொம்மைபோல படுத்திருந்த பெரியம்மாவின் மெலிந்த தோளைத் தொட்டு சில கணங்கள் அழுத்தினார். பிறகு, தலைமுடி உதிர்ந்து மொட்டையாகிவிட்டிருந்த தலையை மெதுவாக வருடிக் கொடுத்தார். அப்புறம், விரல்களைத் தாழ்த்தி ஒட்டிப் போயிருந்த வலது கன்னத்தைத் தட்டிக்கொடுத்தபடி புன்னகைத்தார்.
”நீங்க கெளம்புங்கம்மா. பெரீம்மாவ நான் பார்த்துக்கறேன்” என்றபடி ஓரமாக வைத்திருந்த கைப்பையை எடுத்துக் கொடுத்தேன் நான். அதை உடனே வாங்கிக்கொண்டார் அம்மா.
”இன்னும் ஒரு சிட்டிங்தான் பெரீம்மா. பல்ல கடிச்சிகினு தாங்கிக்குங்க. அப்பறமா நம்ம வீட்டுக்கு போயிடலாம். சரியா? ஐயனாரு, திரோபதயம்மா, முருகரு, பிள்ளையாருலாம் உங்கள சுத்தி காவலுக்கு நிக்கறாங்கன்னு நெனச்சிக்குங்க. என்ன புரியுதா?”