சின்மயா மருத்துவமனைத் தெருவின் இறுதியில் இருக்கும் கிருஷ்ணன் கோயில்வரை சில ஞாயிறு மாலைகளில் நடந்துசெல்வதுண்டு. சாலையின் இருமருங்கிலும்
அடர்ந்திருக்கும் மழைமரங்களும் மேமலர் மரங்களும் அந்தச் சாலைக்கே குடை பிடிப்பதைப்போல
இருக்கும். அச்சாலையில் நடந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு தோப்புக்குள் நடக்கும் உணர்வை அடைந்திருக்கிறேன்.
பல பெயர் தெரியாத பறவைகள் ஏதோ ஒரு திசையிலிருந்து வந்து அம்மரங்களின் கிளைகளில் உட்கார்ந்திருக்கும் காட்சி, பகல்பொழுதின் அலுப்பைக் கழிப்பதற்காக அவையும் எங்கிருந்தோ பறந்துவந்து மனிதர்களையும் மரங்களையும் வேடிக்கை பார்ப்பதைப்போலத்
தோன்றும். பல வீட்டு முற்றங்களில் நந்தியாவட்டைகளும் செம்பருத்திகளும்
பூத்திருக்கும். கட்டடப்பணி தொடங்காத காலி வீட்டுமனைகளில் அஞ்சுமல்லி புதர்புதராகப் பூத்திருக்கும்.
கோயில் வாசலில் நாலைந்துபேர் பூக்கூடைகளுடன்
உட்கார்ந்து பூ விற்றுக்கொண்டிருப்பார்கள். இன்னொரு விளிம்பில் இளநீர்க்குலைகளைக்
குவித்துவைக்கப்பட்டிருக்கும். பக்கத்திலேயே கரும்புச்சாறு வியாபாரமும் பேல்பூரி வியாபாரமும் நடக்கும். நின்றகொண்டோ அல்லது அங்கங்கே சிதறிக்கிடக்கிற கற்களின்மீது உட்கார்ந்தோ சிறிது நேரம் பொழுதைப்போக்க எந்தத் தடையுமில்லை. பொழுது சாயும் வேளையும் இதமான காற்றும் உரையாடும் மனநிலைக்கு உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும். மனைவியோடு அல்லது நண்பர்களோடு செல்லும்போது அந்த இடத்தில் சற்றே நின்று உரையாடாமல் திரும்ப மனமே வராது. துணைக்கு யாரும் இல்லாத தருணங்களில்கூட அக்கம்பக்கத்தில்
வேடிக்கை பார்த்தபடி சிறிதுநேரம் நின்றிருந்துவிட்டுத்தான் திரும்புவேன்.