Home

Showing posts with label மாயாதீதம். Show all posts
Showing posts with label மாயாதீதம். Show all posts

Sunday, 17 March 2024

நான்கு கணங்கள்

  

அதீதம் என்பதற்கான வரையறையை வகுத்துக்கொண்டால் ஸ்ரீராமின் குறுநாவலை வாசிப்பது எளிதாகிவிடும். இயல்பான நிலையிலிருந்து மாறுபட்டது என்பது அதீதத்தின் முதல் குணம். அரைக்கணமோ ஒரு கணமோ மட்டும் நீடித்து உச்சத்தைத் தொட்டு மறைந்துபோவது என்பது இரண்டாவது குணம். உண்மையிலேயே அப்படி ஒரு கணம் நிகழ்ந்ததா என எண்ணித் துணுக்குறும் அளவுக்கு கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் நிகழ்ந்து முடிந்து இயல்பான நிலைக்குத் திரும்பி நிற்பது என்பது மூன்றாவது குணம். அதீதத்தால் நேர்ந்தது என சுட்டிக்காட்டிச் சொல்லத்தக்க வகையில் ஒரு விளைவை நம் கண் முன்னால் பார்க்கும்போது அதை நம்மால் முற்றிலும் மறுக்கவும் முடியாமல் முற்றிலும் ஏற்கவும் முடியாமல் தடுமாறி நின்றுவிடுகிறோம். அந்த மாயநிலை அதன் நான்காவது குணம். அத்தகு மாயத்தன்மை பொருந்திய ஒரு தருணமே மாயாதீதமான கணம். ஸ்ரீராம் தன் குறுநாவலில் அத்தகு ஒரு மாயாதீதமான கணத்தையும் அதன் தொடர்விளைவுகளையும் நிகழ்த்திக்காட்டுகிறார்.