சூரியன் மறைந்து சரியத் தொடங்கிய வேளையில் காலணிகள் அழுத்தமாகப் பதிந்து நெருங்கி வரும் ஓசை கேட்டது. தலையைத் திருப்பி ஓசை வந்த திசையில் பார்க்க முயன்றான் துரியோதனன். பிடறி நரம்புகள் முறுக்கிக் கொண்டதில் வலி தாளாமல் உதட்டைக் கடித்தான். அதற்குள் நெருங்கி வந்துவிட்ட அஸ்வத்தாமன் அவன் தோள்களைப் பற்றினான். வலியில் சரிந்த துரியோதனனின் கண்களைச் சில கணங்களுக்கு மேல் பார்க்க இயலாமல் பதற்றத்துடன் “துரியோதனா” என்றபடி தரையில் உட்கார்ந்தான். புன்னகையுடன் “நீ பிழைத்திருக்கிறாயா அஸ்வத்தாமா?” என்று கேட்டான் துரியோதனன்.
Thursday, 2 September 2021
பிரிவு - சிறுகதை
சுகர் தன்னைவிட்டுப் பிரிவது உறுதி என்று புலப்படத் தொடங்கியதும் மனம் நொறுங்கிய வியாசர் கொழுகொம்பற்ற கொடிபோலத் துவண்டு சரஸ்வதி நதிக்கரையில் உட்கார்ந்திருந்தார். அவர் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கெங்கும் கவிந்திருந்த இருள் மட்டும்தான். நதிக்கு மறுபுறம் மலைச்சிகரமொன்று நின்றிருந்தது. வாழைப்பூமொக்கு போன்ற அதன் உச்சியின் பின்புறத்திலிருந்து நிலா ஊர்ந்து வரத் தொடங்கியது. அதற்கு முந்தைய தருணம் வரைக்கும் சிகரத்தின் மடியிலும் தோளிலும் விளையாடிய நிலா அது. இப்போது சிகரத்தைத் துறந்து மேகவெளியில் உருளத் தொடங்கியது. வியாசருக்கு மறுபடியும் சுகரின் ஞாபகம் வந்தது. அவனும் பிரிந்துவிட்டால் இந்தப் பரந்த உலகில் தான் மட்டும் தனிமையில் வீசப்பட்டுவிடுவோம் என்ற பிரமை எழுந்தது. சுகரைப்பற்றி இனி நினைக்கக்கூடாது என்று அந்நொடி முடிவு செய்தார் வியாசர். மறுநொடியே சுகரின் முகம், சுகரின் சிரிப்பு, சுகரின் பிஞ்சுக் கை, சுகரின் ஒளிவீசும் கண்கள் என அடுத்தடுத்து எல்லாமே மனத்தில் விரிந்தன. அவனைப்பற்றிய நினைவுகள் அவரைப் பாடாய்ப்படுத்தின. அவன் நாளை தன்னுடன் இருக்கமாட்டான். தன்னிடமிருந்து விலகி நெடுந்தூரம் சென்று விடுவான் என்கிற ஒரு குரல் சதாநேரமும் ஒலித்தபடி இருந்தது. அக்குரலை மறுத்து அவனை எப்படியும் தடுத்துவிடலாம் என்று அவர் மனம் நம்பியது. இது எல்லாம் கனவு. அவன் பிரியப் போவதும் இல்லை. நான் கெஞ்சப் போவதும் இல்லை என்றெல்லாம் இருந்தால் எவ்வளவு நல்லது என்று நினைத்துப் பார்த்தார் வியாசர்.
Thursday, 26 August 2021
புதிர் - சிறுகதை
குளித்து முடித்ததும் இருள் விலகாத கிழக்குத் திசையைப் பார்த்து “நாராயணா” என்று கணநேரம் கண்களை மூடி வணங்கிய பின்னர் குளத்திலிருந்து கரையேறினார் பெரியாழ்வார். பனி கவிழ்ந்திருந்தது. எனினும் உடல் முழுக்க வெப்பம் பரவியிருப்பதை உணர்ந்தார் அவர். கரையோரத்தில் பூச்செடிகள் அசைவற்று நின்றிருந்தன. ஒரு பக்கம் பனிமுத்துக்களைச் சுமந்த பூக்கள் மௌனமாகத் தலைகவிழ்ந்திருந்தன. “பல்லாண்டு பல்லாண்டு...” என்று முனகலுடன் முதல் பூவைக் கொய்து குடலையில் போட்டார். விரலிலும் மனத்திலும் வழக்கமான மலர்ச்சி எழாதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.