அர்ச்சுனன் தபசு, புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும் என்கிற தலைப்பில் மாமல்லபுரம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய நூல்களை ஏற்கனவே எழுதி வெளியிட்ட முனைவர் சா.பாலுசாமி பொதுவாசகர்களுக்காக மாமல்லபுரம் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைத்தொகுதியை இந்திய அரசு நிறுவனமான பப்ளிகேஷன் டிவிஷன் தற்போது வெளியிட்டுள்ளது. வரலாறு சார்ந்தும் சிற்பக்கலை சார்ந்தும் ஆர்வம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு மாமல்லபுரம் பற்றிய குறுக்குவெட்டுத்தோற்றத்தை இந்தப் புத்தகத்தில் தெளிவாகச் சித்தரித்துள்ளார் பாலுசாமி. மாமல்லபுரத்தில் பார்க்கவேண்டிய எல்லா முக்கியச் சிற்பங்களின் படங்களும் எல்லாப் பக்கங்களிலும் கருப்புவெள்ளையில் இடம்பெற்றுள்ளன. ஒரு சிற்பத்தைப்பற்றிய குறிப்பைப் படிக்கும்போதே, அதன் படத்தை அருகிலேயே பார்ப்பது நல்ல அனுபவம். வாசிப்பவர்களின் தெளிவுக்கும் அது துணையாக இருக்கிறது.