ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மைசூரிலிருந்து விஜயா ஹரன் என்பவர் தொலைபேசியில் என்னை அழைத்தார். மைசூர் வானொலி நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவைத் தன் ஆதர்ச எழுத்தாளராகக் கருதுபவர் என்றும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பைரப்பாவின் மீது தான் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய ஆக்கங்களைப்பற்றிய கட்டுரைகளை பிறரிடமிருந்து எழுதி வாங்கித் தொகுத்து இரு பெருந்தொகுதிகளாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னார். அதற்குரிய கட்டுரைகளைத் திரட்டிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.