Home

Showing posts with label யயாதி. Show all posts
Showing posts with label யயாதி. Show all posts

Saturday, 13 July 2019

கலை என்பதே கண்டறியும் சவால் அல்லவா? - அஞ்சலிக்கட்டுரை



1998 ஆம் ஆண்டில் கன்னட நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக கிரீஷ் கார்னாடுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதையொட்டி கர்நாடக அரசு அவரைக் கெளரவித்துப் பாராட்டும் வகையில் விழாவொன்றை ஏற்பாடு செய்ய விரும்பியது. ஆனால் கார்னாடுக்கு விழா நிகழ்ச்சிகளில் விருப்பமில்லை. அதனால் மறுத்துவிட்டார்.  பிறகு விழா வேறு வகையில் மாற்றியமைக்கப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ச்சியாக மாலை வேளைகளில்  கார்னாடின் நாடகங்கள் வெவ்வேறு குழுவினரால் மேடையேற்றப்பட்டன. பார்வையாளர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். ஏழாம் நாள் நாடகம் முடிந்ததும் கேள்வி பதில் நிகழ்ச்சியொன்று நடந்தது. பார்வையாளர்கள் கேள்விகளை ஒரு தாளில் எழுதி மேடைக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். ஏறத்தாழ ஒரு மணிநேரம் அனைவருடைய கேள்விகளுக்கும் விரிவான வகையில் கார்னாட் பொறுமையாக விடையளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பார்வையாளர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் கைதட்டி தம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்கள்.

அர்ப்பணிப்பு இருந்தால்தான் கலை வாழும் - அஞ்சலிக்கட்டுரை


10.06.2019 அன்று காலை எட்டரை மணியளவில் தேசிய அளவில் அனைத்து மொழி நாடக ஆர்வலர்களும் பார்வையாளர்களும் நெருக்கமாக அறிந்த கிரீஷ் கார்னாட் இயற்கையெய்தினார். ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகளாக உயிர்க்காற்றை நிரப்பியிருக்கும் உருளையுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறுகுழாய் மூக்கோடு பொருந்தியிருக்கும் நிலையிலேயே அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துவந்தார். அந்த நிலையில் அவரைப் பார்ப்பவர்கள் ஒருகணம் சற்றே பதற்றம் கொண்டு கலங்கிவிடுவார்கள். ஆனால் கார்னாட் வழக்கமான தன் ஒளிரும் புன்னகையோடு அரங்குக்கு வந்து அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு உரையாடிவிட்டுச் செல்வார். தன் முடிவு நெருங்கிவருவதை அப்போது அவர் அறிந்திருக்கக்கூடும். ஆனால் அதை எண்ணிக் கலங்கியவராக அவரை எங்கும் என்றும் கண்டதில்லை. நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, சில நாடகங்களைப் பார்ப்பதற்குக்கூட அவர் அந்தக் கோலத்திலேயே வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். நாடகமே அவருக்கு உலகமாகவும் உயிராகவும் இருந்தது. முதலில் ஓவியராக இருக்க விரும்பி, பிறகு கவிஞராக மலர நினைத்து, இறுதியில் நாடகமே தனக்குரிய களம் என்பதைக் கண்டுகொண்டவர் அவர்.