அன்புள்ள நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கம். ஒரு கன்னடக்கவிதையோடு இந்த உரையைத் தொடங்குகிறேன்.
வேகவேகமாக ஒருவரைத் தேடிக்கொண்டு ஓட்டமும் நடையுமாகச் செல்லும் ஒரு பெண்ணை ஒருகணம்
கற்பனை செய்துகொள்ளுங்கள். தேடல் ஒன்றையே அவள் இலக்காகக் கொண்டிருக்கிறாள். அவள் மனம்
முழுக்க அப்புள்ளியிலேயே குவிந்திருக்கிறது. நாலடி எடுத்துவைப்பதற்குள் அவள் முன் பசி
எழுந்துவந்து அவளைத் தடுத்து நிறுத்துகிறது. அந்தப் பசியிடம் அவள் சற்றுப் பொறுத்துக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறாள். இன்னும் சில அடிகள் கடப்பதற்குள் தாகம் அவளை வாட்டத் தொடங்குகிறது.
அவள் தாகத்திடமும் பொறுத்துக்கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறாள். மேலும் சில
அடிகள் எடுத்துவைப்பதற்குள் உறக்கம் அவள் முன்னால் வந்து நின்று தடுக்கிறது. அவள் அதனிடமும்
தன் இலக்கைப்பற்றி எடுத்துச் சொல்லி கெஞ்சி ஒதுக்கிவிட்டு பரபரப்பாக நடந்துபோகத் தொடங்குகிறாள்.