கல்யாணத்துக்கு சோறாக்கிப் பரப்பிவைத்தமாதிரி அம்பாரமாய் இருந்தன மல்லிகை அரும்புகள். பளிச் பளிச்சென்று கண்ணைப் பறிக்கிற நிறம். அவிழாமலேயே சுற்றி மணக்கிற வாசனை. என்ன சுகம் என்று மூச்சை இழுத்து இழுத்து அனுபவிக்கிற தருணங்களையெல்லாம் தாண்டி இந்த வாசனை வந்தாலே தலைவலி என்கிற நிலைமைக்கு வந்திருந்தார்கள் சுற்றி இருந்தவர்கள். எடுப்பதும் தெரியாமல் கட்டுவதும் தெரியாமல் அரக்கப்பரக்க அரும்பு கட்டிக்கொண்டிருந்த ராமாஞ்சம், சுப்ரமணி, சகாயமேரி, எஸ்தர், வரதன் ஐந்து பேர்தான் சுற்றி இருந்தவர்கள்.