ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞராக எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் விஜயானந்தலட்சுமி. அதைத் தொடர்ந்து இன்றைய இணையகால வாசகர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கலித்தொகை, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு அழகான விளக்கநூல்களை எழுதினார். தேனி என்னும் நகரத்தின் வெவ்வேறு பரிமாணங்களை அழகான சொற்சித்திரங்களாகத் தீட்டி நூலாக வெளியிட்டார். இவான் துர்கனேவ், ஓ ஹென்றி ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவ்வாறாக, தன் படைப்புலகத்தை மெல்ல மெல்ல விரிவாக்கிக்கொண்டே செல்லும் விஜயானந்தலட்சுமி இப்போது தன் முதல் சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.