ஏடன் தோட்டம் களிப்பின் உறைவிடம் என்பது ஒரு நம்பிக்கை. அழகான நிலப்பரப்பு, இனிமையான சூழல், விரிந்த வானம், மரங்களும் செடிகளும் கொடிகளுமாக அடர்ந்திருக்கும் பசுமை படர்ந்த இடம் என எங்கெங்கும் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் இடமாக அத்தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இணைப்பறவைகளாக பறந்து திரிந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். மலர்க்குவியலில் ஒரு மலராக, பறவைக்கூட்டத்தில் ஒரு பறவையாக, அச்சூழலின் ஒரு பகுதியாகவே உல்லாசமாக அலைகிறார்கள். ஏதோ ஒரு கணத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் நெஞ்சில் படரும் ஆசை அவர்களை அந்த உல்லாசநிலையிலிருந்து அவர்களை விழவைத்துவிடுகிறது. ஆசை இன்பத்தை வழங்கியபோதும், ஒருவித குற்ற உணர்வையும் வழங்குகிறது. ஆதாம் ஏவாள் காலத்தில் தொடங்கிய அந்த மாபெரும் வீழ்ச்சி நவீன மனிதனின் காலம் வரைக்கும் மீட்சியின்றி தொடர்ந்துகொண்டே உள்ளது.