Home

Monday, 27 July 2015

பிரயாணம்

பெஞ்சமின் முசே முனகும் சத்தம் கேட்டது.  ஆனால் கண்களைத் திறக்கவில்லை.  கிடத்தப்பட்ட சிலைபோல படுத்திருந்தார்.  வைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுச் சென்று மூன்றுமணி நேரத்துக்கும் மேல் கடந்துவிட்டது.  விரைவாகவே எழுந்துவிடுவார் என்றும் பசிக்கு ஏதாவது கேட்டால் சூடான கஞ்சித் தண்ணீர் மட்டும் தந்தால் போதும் என்றும் வைத்தியர் சொல்லியிருந்தார். சில கணங்களுக்குப் பிறகுவீர்ப்பா வீர்ப்பாஎன அவருடைய குரல் மட்டும் எழுந்தது. தரையில் உட்கார்ந்து அவருடைய பாதங்களைத் தேய்த்து சூடு உண்டாக்கியபடி இருந்த வீரப்பன் சட்டென்று துள்ளியெழுந்து முசேயின் முகத்தைப் பார்த்தான்.  அக்கணமே அவர் அசைவற்ற ஆழத்துக்குப் போய்விட்டார். காதில் விழுந்த அவருடைய குரல் கனவா அல்லது நனவா என்று தடுமாறியது அவன் மனம்.  மெதுவாகமுசே முசேஎன்று இரண்டு மூன்று முறை அழைத்தான்.  அவர் படுத்திருந்த கோலத்தில் துளிகூட மாற்றமில்லை.
பாலேடு நிறத்தைக் கொண்ட அவர் உடல் நலிவின் காரணமாக மேலும் வெளுத்துப் போயிருந்தது.  மூன்று நாட்களாக மழிக்கப்படாத முடி கன்னமெங்கும் படர்ந்திருந்தது. அடிப்பகுதி பருத்து செதுக்கப்பட்டதுபோல காணப்பட்ட முசேயின் மூக்கையே வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றான் வீரப்பன்.. மூச்சு சீரான அளவில் தன்னிச்சையாக உட்செல்வதும் வெளியேறுவதுமாக இருந்தது.  அறையின் திரைச்சீலையைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தபடி மதாம் மரியாகண் தெறந்தாரா வீர்ப்பா?” என்று கேட்டாள்.இல்ல மதாம்என்றபடி முசேயின் காலடியில் உட்கார்ந்து பாதத்தை அழுத்தித் தேய்க்கத் தொடங்கினான்.

Monday, 13 July 2015

அடைக்கலம்

                பொதுக்பொதுக்கென்று அழுந்தும் ஈரத்தரையில் கவனமாக அடியெடுத்து வைத்துக் கரையேறினான் சொக்கலிங்கம். அலைவேகத்துக்குத் தகுந்தமாதிரி தாவிக் குதித்தும் விழுந்தும் புரண்டும் கடலில் அரைமணிநேரமாக தொடர்ந்து குளித்ததில் இன்னும்கூட நிதானத்துக்கு வரமுடியாமல் மிதப்பதுபோலவே இருந்தது உடல். காதுக்கு வெகு அருகில் யாரோ உறுமுவதுபோன்ற ஓசை கேட்டது. வேகமாகப் பொங்கிவந்த அலையொன்று அவன் நடந்துவந்த காலடித்தடங்களை அழித்துவிட்டுச் சென்றது. உச்சிவெயிலில் கண்கள் கூசின.

கனவுகள் அடர்ந்த காடு - விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’

சினிமா என்பது நல்லதொரு கலைவடிவம் என்றொரு கூற்று உண்டு. மாறாக, அதை ஒரு வணிகம் என்று சொல்லக்கூடிய கூற்றும் உண்டு. தொடர்ந்து நகரும் காட்சிகளை மிகச்செறிவாக ஒருங்கிணைத்து உருவாக்கும் சினிமாவில் ஒளி, ஒலி, நடிப்பு, ஒப்பனை, காட்சி, உரையாடல், மெளனம் என எல்லாவற்றையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி ஒரு படைப்பை உத்வேகத்துடன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. அதனால் அதை கலைவடிவம் என்று சொல்வதே பொருந்தும் என்பது முதல் அணியினரின் நிலைபாடு. ஒரு திரைப்படத்தின் தயாரிப்புக்காக ஏராளமான அளவில் பணத்தைச் செலவுசெய்யவேண்டியிருக்கிறது. ஏராளமாக முதலீடு செய்பவர்கள் ஏராளமாக லாபத்தை எதிர்பார்ப்பது இயற்கையானது. தன் லாபம் பாதிக்காதபடி கலையம்சங்கள் இடம்பெறுவதில் அவர்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஒருபோதும் அது தன் எல்லையைத் தாண்டிவிடக்கூடாது. அடிப்படையில் அது ஒரு வணிகம் மட்டுமே என்பது இரண்டாவது அணியினரின் நிலைபாடு. பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மீண்டும்மீண்டும் தம் நேர்காணல்களில்இது ஒரு வணிகம், இது ஒரு வணிகம்என்று அழுத்தம் கொடுத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்விரண்டு கருத்துகளும் தமிழ்ச்சினிமாவின் தொடக்கத்திலிருந்தே நிலவி வந்திருக்கின்றன. கலையாளுமை மிக்க இயக்குநர்களும் கலைவிருப்பம் கொண்ட தயாரிப்பாளர்களும் ஒன்றிணையும் தருணங்களில் கலையொருமை பொருந்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன. மற்ற தருணங்களில் வணிகநோக்கத்தை நிறைவேற்றுகிற திரைப்படங்களே அதிக அளவில் வெளிவருகின்றன. அவற்றை கலையொருமை குறைந்த படங்கள் என்று சொல்லலாம். தமிழில் முதன்முதலாக 1917-ல் மெளனப்படம் எடுக்கப்பட்டு, 1931 முதல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இன்றளவும் அது வெற்றிகரமாக தொடர்ந்தபடி இருக்கிறது.  தமிழ் சினிமாவின் வரலாறு ஒருவகையில் தமிழ் ரசனையின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவக்கூடும். விட்டல்ராவ் எழுதியிருக்கும்தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்அந்தப் பார்வையைத் தொகுத்துக்கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ள முக்கியமான புத்தகமாகும்.

Tuesday, 30 June 2015

பண்ணும் பாடலும்

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இசைக்கச்சேரிகள் நடைபெறும் ராமநவமி நாட்களையும் அனுமன் ஜெயந்தி நாட்களையும் இசையின்பத்தில் திளைக்கும் நாட்கள் என்றே சொல்லவேண்டும். சில இடங்களில் நுழைவுக்கட்டணம் வசூலிப்பார்கள். சில இடங்களில் இலவசமாகவே அனுமதிப்பார்கள். என்னால் எல்லாக் கச்சேரிகளுக்கும் செல்ல முடிந்ததில்லை. அலுவலகம் முடிந்து மாலை நேரங்களில் மட்டும் கலந்துகொண்டு கேட்பதுதான் வழக்கம். பாடல்களில் மயங்கியிருந்த தருணங்கள் எல்லாமே பொன்னான நேரங்கள். ஏதோ ஒரு கை வந்து நம்மை ஏந்திக்கொள்வதுபோல, ஏதோ ஒரு விரல் நீண்டு மென்மையாகத் தொட்டு வருடுவதுபோல, எங்கோ அந்தரத்தில் பறந்துசெல்வதுபோல, எங்கோ ஒரு கடலில் ஆழத்தை நோக்கி இறங்குவதுபோல ஒவ்வொரு கணத்திலும் அந்த அனுபவம் மாறிக்கொண்டே இருக்கும். சுருதி, சுரம், ராகம், தாளம் என எதுவுமே இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால் பாடும் கலைஞர் ஒரு ராகத்தைத் தொட்டு ஆலாபனை செய்யும்போது மழைச்சாரலில் நனைந்ததுபோல இருக்கும். ஒரு சொல்லை விதவிதமாக ஏற்றி இறக்கி குழைந்து நெளிந்து உச்சரிக்கும்போது உள்ளம் உருகிவிடும். கச்சேரியிலிருந்து திரும்பும்போது என் மனத்துடன் ஒட்டிக்கொண்டு வரும் அந்த இனிய அனுபவத்துக்காகவே மீண்டும் மீண்டும் கச்சேரிகளை நாடிச் சென்றுகொண்டே இருக்கிறேன்.

Thursday, 25 June 2015

கலையைத் தேடி வந்த கௌரவம்

தேசிய அளவில் மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படும் ஞானபீட விருது நம் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தனுக்குத் தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஞானபீட விருதைப் பெற்ற சிவராம காரந்த், தகழி சிவசங்கரன் பிள்ளை, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், மகாஸ்வேதா தேவி, குர் ஆதுலின் ஹைதர், நிர்மல் வர்மா போன்ற மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தனுடைய பெயரும் இடம்பெறுவது தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயமாகும். 

அடித்தட்டு மக்களுடைய வாழ்வியக்கங்களின் சித்திரங்களை எழுத்தில் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவருடைய எழுத்தும் உரையாடலும் விவரணை முறையும் அந்த அழகியல் தன்மைகளைக் கொண்டவையாகவே விளங்குகின்றன. பிச்சைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், ஆண்டிகள், சாமியார்கள், சாப்பாட்டுச்சுமை தூக்கிகள், தள்ளுவண்டிக்காரர்கள், மேஸ்திரிகள், சித்தாள்கள், விடுதிகளில் வேலை செய்பவர்கள், விலைமாதர்கள், நாடகக்காரர்கள், போதையில் திளைப்பவர்கள் என வாழும் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களுடைய வாழ்வியக்கச் சித்திரங்களையே ஜெயகாந்தன் தன் படைப்புகளில் தீட்டி வைத்திருக்கிறார். இவர்கள் வாழும் வேட்கை கொண்டவர்கள். பெரிதும் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுடைய கருத்தியல்களையும் விழுமியங்களையும் கதைகள் மூலம் கண்டடைய முயற்சி செய்தவர் ஜெயகாந்தன். 

Tuesday, 16 June 2015

மறைந்துபோன வரலாறு

நண்பரொருவருடைய வீட்டில் சில மாதங்களுக்கு முன்பாக திருடு நிகழ்ந்துவிட்டது. அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம். அலங்கோலமாகக் கலைந்து கிடந்தது அவர் வீடு. களவுபோன பொருட்களின் விவரங்களை விசாரித்து பட்டியல் தயாரித்து அப்போதுதான் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள் காவலர்கள். அந்தப் பட்டியலில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் முதல் குழந்தைக்கு பால் கொடுக்க உதவும் ஃபீடிங் பாட்டில்வரை இருந்தது. பெரிய பொருட்கள் களவாடப்பட்டதைக்கூட பொறுமையாகப் படித்த நண்பர்கள் ஃபீடிங் பாட்டில்  பெயரைப் படித்ததும் மனம் குமைந்து பேசினார்கள். “அயோக்கிய நாய்ங்க, அயோக்கிய நாய்ங்கஎன்று ஆத்திரத்துடன் திரும்பத் திரும்பச் சொன்னார் ஒருவர். ”குழந்தைக்கு பால் குடுக்கற பாட்டல்னு கூட நெனச்சிப் பார்க்கலையே அவனுங்க. சரியான மிருகமா இருப்பானுங்க போலஎன்பதையே வேறுவேறு சொற்களில் தம் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டார் இன்னொருவர். திருடுவதற்கு என வந்துவிட்டவனுக்கு அந்த எண்ணமெல்லாம் ஏன் வரப் போகிறது? குழந்தைக்குப் பயனளிப்பது, பெரியவர்களுக்குப் பயனளிப்பது என பிரித்துப்பிரித்துப் பார்த்தா திருடமுடியும்? திருடனுக்கு எல்லாப் பொருட்களும் திருடத்தக்கவையே. அத்தருணத்தில் மனச்சாட்சிக்கு இடமே இல்லை என்று சொன்னேன் நான். “ஆமா, அப்படி திருடித் தின்னறத விட எங்கயாவது போய் சாணிய தின்னுட்டு சாவலாம்என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு காறித் துப்பினார் நண்பர்.