Home

Sunday, 15 September 2024

பறவைகளின் பயணம்

 

எங்கள் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் ஒரு பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு இருந்தது. பெங்களூர் ஐயர் என்பவருக்குச் சொந்தமான தோட்டம். அதன் மதிலை ஒட்டி ஏராளமான மரங்கள் இருந்தன. கொய்யா மரங்கள், கொடுக்காப்புளி மரங்கள், மாமரங்கள். அவை பழுத்துத் தொங்கும் காலங்களில் தரையில் விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்து உண்ணுவதற்காகக் காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் மதிலைச் சுற்றி வருவோம். சில துடுக்குப் பிள்ளைகள். மதிலோரமாகக் கற்களை அடுக்கி, அதன்மீது கவனமாக ஏறி, மதிலில் கால்பதித்து. பிறகு மரங்களுக்குத் தாவிவிடுவார்கள். ஐயரின் பார்வையில் பட்டுவிட்டால் சரியாக வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்.

சாதனைப் புள்ளியை நோக்கி...


கவிதை, சிறுகதை, நாவல்கள், மொழி பெயர்ப்புப்படைப்புகள் என தேடித் தேடிப் படிக்கத் தொடங்குகிற புதிய வாசகர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் படித்து முடித்து, தனக்குக் கிடைத்த வாசிப்பு அனுபவத்தை மீண்டும் மீண்டும் அசைபோட்டு, மகிழ்கிற ஒரு மாபெரும் படைப்பு வங்க மொழியில் அதீன் பந்தோபாத்யாய எழுதிய நாவலான ‘‘நீலகண்டப் பறவையைத் தேடி’’. சாலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லைப் போன்றது. ஒருவருடைய வாசிப்புப் பயணத்தில் அந்த நாவல் அப்புள்ளியை சிலர்  வெகுவிரைவில்  அடைவதுண்டு. சிலர் சற்றே தாமதமாக வந்து சேர்வதுண்டு. ஆனால் அந்தப் புள்ளியைக் கடக்காத இலக்கிய வாசகர்களே கிடையாது.

Monday, 9 September 2024

சார்புநிலை என்னும் திரை


ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு கடுமையான உழைப்பும் சார்பற்ற மனநிலையும் தேவைப்படுகின்றன. உழைப்பின் அளவில் குறை நேரும்போது போதுமான ஆதாரங்களுடன் ஒன்றை முன்வைக்கமுடியாத தடுமாற்றம் நேரும். சார்பற்றுப் பார்க்க முடியாதபோது, சொந்த விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு படைப்பை மதிப்பிடநேர்ந்துவிடும்

உண்மையின் ஒளியைநோக்கி


கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நாராயணகுரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நடராஜ குரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நித்ய சைதன்ய யதி. குரு சீடர் உரையாடல் வழியாக ஒருபோதும் வற்றாத காட்டாறாக சிந்தனை தன் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைகிறது. அடிப்படையில் நாராயண குரு வேதாந்தி. சங்கரரின் அத்வைத நோக்கை விரிவாக்கியவர். அனைத்து தரிசனங்களையும் தன் தனித்துவம் கொண்ட நோக்கின் அடிப்படையில் ஒன்றிணைத்து ஓர் இணைவைக் கொண்டுவந்தது அவருடைய பெரும்சாதனை. நாராயாண குருவின் அத்வைத சமன்வய நோக்கை மேலைத் தத்துவங்களுடன் இணைத்து வளர்த்தெடுத்தவர் அவருடைய மாணவர் நடராஜ குரு. அவருடைய மாணவர்களில் ஒருவரான நித்ய சைதன்ய யதி உயர்பௌதிகம், உளவியல் பின்னணியில் அப்பார்வையை இன்னும் விரிவாக்கிவைத்தார்.

அன்புள்ள விலங்குகள்


கால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன் மருத்துவமனை அனுபவங்களை இருபது கட்டுரைகளாக இத்தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும் பற்றும் மிகுதியாகும்போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒரு துறையில் வேலை செய்வது என்து ஒருவிதம். ஏன், எப்படி, எதனால் என்பவைபோன்ற கேள்விகளால் மனத்தை நிரப்பிக்கொண்டு ஒரு துறையில் வேலை செய்வது என்பது இன்னொரு விதம். இப்படிப்பட்டவர்களே அறிவியலாளர்களைப்போல ஆய்வுமனப்பான்மையோடு தனது துறையில் ஈடுபடுகிறார்கள். தொழிலிடங்களில் தமக்கு நேரும் அனுபவங்களை முன்வைத்து தம் கேள்விகளுக்கான விடைகளைத் தேடி அறிகிறார்கள். இவர்களுடைய அணுகுமுறை, இவர்களைத் திறமைசாலிகளாக உருமாற்றுகிறது. புதுப்புது அனுபவங்களின் வாசல்கள் அவர்களுக்காக திறந்து வழிவிடுகின்றன.