கடலைக் களவாடுபவள் என்னும் தலைப்பில் அமைந்த புதிய கவிதைத் தொகுதிக்கான தன் முன்னுரையை சுஜாதா செல்வராஜ் தன் அன்னையைப்பற்றிய ஒரு நினைவுக்குறிப்போடு தொடங்குகிறார். ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் அந்தக் காலத்தில் மூத்த மருமகளாக வாழ்க்கைப்பட்டவர் அவர். பெரிய குடும்பம் என்னும்போது பெரிய பெரிய பிரச்சினைகளும் இருந்திருக்கக்கூடும். அவருக்கும் பிறர் மீது சிற்சில சமயங்களில் கோபம் உருவாகியிருக்கக்கூடும். ஆனால் அந்த அன்னை யாரோடும் மோதி தன் இடத்தை நிறுவிக்கொள்ள முயற்சி செய்யவில்லை. யார்மீதும் கசப்பைக் கொட்டவில்லை. மாறாக, தினந்தோறும் அழுக்குத்துணிகளைத் துவைக்க உட்காரும் தருணங்களில் தன் நெஞ்சிலிருக்கும் ஆற்றாமைகளையும் கோபத்தையும் வருத்தத்தையும் சத்தமாகச் சொல்லிக்கொண்டே துணிகளைத் துவைகல் மீது ஓங்கி அடித்து அடித்துத் துவைத்து கரைத்துக்கொள்வதை ஒரு கலையாக கற்றுவைத்திருந்தார். தோட்டத்து பம்ப் செட்டின் தண்ணீரில், மோட்டார் ஓடும் சத்தத்தில் தன் மனக்குமுறல்களைக் கொட்டிக் கழுவிவிட்டு லேசான மனத்துடன் வீடு திரும்பிவிடுவார்.