கடந்த நூற்றாண்டில் நவீனத்துவத்தின் பார்வையை தமிழ்ச்சிறுகதைகளுக்கு வழங்கியவர் புதுமைப்பித்தன். நாற்பத்திரண்டு ஆண்டு காலம் மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் பலவேறு வகைமைகளில் ஏறத்தாழ நூற்றியெட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம் என பல தளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். இன்று, புதிதாக தமிழ்ச்சிறுகதையை வாசிக்கத் தொடங்கும் ஓர் இளம்வாசகனுக்கும் கூட நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குவதாகவும் புதுமைத்தோற்றம் அளிப்பதாகவும் அவருடைய கதைகள் அமைந்திருக்கின்றன.