Home

Showing posts with label துரை.அறிவழகன். Show all posts
Showing posts with label துரை.அறிவழகன். Show all posts

Sunday, 11 August 2024

ஆழ்மனத்தில் உள்ள கனவு

 

வீட்டில் வளரும் குழந்தைக்கு புற உலக அறிமுகமும் பிற உயிர்களைப்பற்றிய அறிமுகமும் முதன்முதலாக அந்தக் குழந்தையைச் சூழ்ந்து வாழும் பெரியவர்களின் சொற்கள் வழியாகவே அறிமுகமாகிறது. காக்கையை முதன்முதலாகப் பார்க்கும் எந்தக் குழந்தைக்கும் அதன் பெயர் காக்கை என்று தெரியாது. அதை ஒரு சொல்லாக முதலில் கேட்டுப் பழகி மனத்தில் இருத்திவைத்துக்கொள்கிறது. நேருக்கு நேராக ஒரு காக்கையைப் பார்த்துப் பரவசத்தோடு துள்ளிக் குதிக்கும்போது, அதற்கு அருகில் நிற்கும் யாரோ ஒருவர் அதை காக்கை என்று அடையாளப்படுத்துகிறார். அதற்குப் பிறகு அக்குழந்தை அந்தச் சொல்லையும் அந்தப் பறவையின் வடிவத்தையும் இணைத்து ஆழ்நெஞ்சில் பதிய வைத்துக்கொள்கிறது. ஒரு காட்சியனுபவமும் கேள்வியனுபவமும் இணைந்து அக்குழந்தையின் பிஞ்சு மனத்தில் அந்த வடிவம் பதிவாகிறது.  ஒவ்வொரு நாளும் அதன் ஞானம் எல்லையில்லாமல் வளர்ந்துகொண்டே போகிறது.

Sunday, 29 May 2022

அழிவின் சித்திரம்

 

கடந்த நூற்றாண்டின் முப்பதுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாடானைக்குக் கிழக்கே வலையக்குடிகள் வாழ்ந்த காட்டுப்பகுதியான பண்ணவயல் என்னும் சிற்றூருக்கு உழைப்புக்குத் தயங்காத பொய்யார் என்னும் பெயருடைய இளைஞரொருவர் குடியேறினார். கள்ளிக்காட்டையும் கருவேலங்காட்டையும் அழித்து தன் உழைப்பால் மண்ணை உயிர்பெறச் செய்தார். அவருடைய கொடிவழியினர் அனவரையும் அந்த ஊருக்கு வரவழைத்தார். அவரால் பண்ணவயல் செழித்தது. அவர் குடும்பமும் செழித்து ஓங்கியது. தக்க பருவத்தில் தன்னைப்போலவே உழைப்புக்குப் பின்வாங்காத பெண்ணைப் பார்த்து மணம்புரிந்துகொண்டார் பொய்யார். அவருக்குப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்களானார்கள். படித்த பிள்ளைகள் பண்ணவயலைவிட்டு வெளியேறி அருகிலிருக்கும் நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றார்கள். படிப்பில் நாட்டமின்றி பெற்றோருடன் விவசாயத்தைமட்டுமே பழகியவர்கள் பண்ணவயலிலேயே தங்கி அப்பாவுக்குத் துணையாக பயிர்த்தொழிலிலேயே ஈடுபட்டனர்.