மிகச் சிறந்த ஒரு பாடலை அல்லது படைப்பைப் படிக்கும்போது, வாசிப் பனுபவத்தின் பரவசத்தில் அது எப்படித்தான் எழுதப் பட்டிருக்குமோ என்றொரு கேள்வி தானாகவே பிறப்பது இயற்கை. இக்கேள்விக்கு விடை சொல்ல மிக விரிவான ஓர் ஆய்வையே நாம் நிகழ்த்தவேண்டும். பல தளங்களில் இந்த விடைக்கான தடயங்களைத் தேடித்தேடிச் சென்று, சேகரித்துத் தொகுத்து, பின்பு சில குறிப்பிட்ட அடிப்படைகளையொட்டிப் பகுத்து, அந்த ஆய்வு வழங்கக் கூடிய முடிவை அறிந்துகொள்ளலாம். அவ்வளவு நீண்ட கள ஆய்வை நிகழ்த்தி நிறுவ மிக நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. குறைந்த கால அவகாசத்தில் முடிவையறிய உதவக்கூடிய ஒரு தகவலோடு இந்த உரையைத் தொடங்குகிறேன்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால், பாரதி யாருடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தில், நமக்கு உதவக்கூடிய அந்தத் தகவல் உள்ளது. பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்துவந்த சமயம் அது. ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் மனைவியோடும் மகளோடும் மகளைப் போன்ற யதுகிரியோடும் கடற்கரையில் அமர்ந்து பேசி, பொழுது போக்கி, வேடிக்கை பார்த்து, விளை யாட்டுக் கதைகளைப் பகிர்ந்து, பாடல்கள் பாடி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வழக்கத்தைக் கைக் கொண்டிருந்தார்.