நெருப்பு வளைத்துக்குள்
ஒரு பறவையைப்போல புகுந்து தாவினாள் ராணி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இடது
பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கும் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்துக்கும்
தாவி செருகப்பட்ட அம்புபோல நின்றாள். முதல் சுற்று முடிந்தது. பார்வையாளர்களைப்
பார்த்து இரண்டு கைகளையும் அசைத்தாள். பதற்றமாக இருந்தது. வளையத்தைச் சுற்றி
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு கண்களைக் கூச வைத்தது. ஒவ்வொரு முறையும் அது
தன்னை விழுங்கத் தயாராக வாயைத் திறந்து காத்திருப்பதுபோலவும் அதன் பற்களில்
விழாமல் தப்பித்து வருவதுபோலவும் ஒருகணம் அவளுக்குத் தோன்றியது. சட்டென அவள்
மனத்தில் கசந்துபோன தன் இல்லற வாழ்க்கையின் சித்திரம் எழுந்தது. ஒரு வகையில்
அதுவும் விழுங்கக் காத்திருந்த நெருப்பு வளையம்தான். விழாமல் மீண்ட விதம் அவளுக்கு
ஆச்சரியமாக இருந்தது. அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் விடாமல் கைதட்டிக்
கொண்டிருந்தார்கள்.