ஒரு நல்ல சிறுகதை என்பது அதில் சொல்லப்பட்டதைவிட சொல்லாதவற்றை
நினைத்துக்கொள்ளவும் அந்த நினைவுகளில் தோய்ந்திருக்கவும் ஒரு வாசகனைத் தூண்டும் தன்மையுடையதாக
இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நவீனத்துவத்தின் பார்வை படிந்த சிறுகதை, நவீனத்துவத்துக்கு
முந்தைய காலத்தைச் சேர்ந்த சிறுகதை, குறியீடுகளாலான சிறுகதை, பின்நவீனத்துவத்தின் பார்வையை
முன்வைக்கும் சிறுகதை என எந்தக் காலத்தைச் சேர்ந்த கதையாக இருந்தாலும், அவை சிறந்த
படைப்பாக இருப்பதற்கு இந்தத் தன்மைதான் முக்கியமான காரணம். படிப்பதற்கு மிகமிக எளிமையானவையாக
காட்சியளிக்கக்கூடிய அசோகமித்திரன் கதைகளில் சொன்னதைவிட சொல்லாத பல கூறுகள் அதன் உள்ளடுக்குகளில்
நிறைந்திருப்பதை ஒரு தேர்ந்த வாசகன் உணரமுடியும்.