உலகெங்கும் பல நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று பெயர்பெற்ற பிரிட்டனில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவியது என்னும் செய்தி இன்று பலரை வியப்பில் ஆழ்த்தக்கூடும். ஆனால் அதுதான் உண்மை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்னும் வேறுபாடின்றி ஏறத்தாழ முப்பது லட்சம் பேர் வேலையின்றி தவித்தார்கள். அவர்களில் ஒருவர் ரொனால்ட் டங்கன். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சமூக மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தன் இலட்சியக்கனவுகளாகக் கொண்டவர்.