தினத்தந்தி நாளேட்டில் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளரான ஐ.சண்முகநாதன் தனது 90வது வயதில் 03.05.2024 அன்று இயற்கையெய்தினார். பதினெட்டு வயதில் தினத்தந்தி அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த சண்முகநாதனை, வழக்கமான பணிநிறைவுக்காலத்துக்குப் பிறகு அவருடைய இறுதிக்காலம் வரைக்கும் தினத்தந்தி நிர்வாகம் தன் குழுமத்தில் ஒருவராகவே மதிப்புடன் வைத்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களில் கூட இப்படி பத்திரிகையாசிரியர் ஒருவரை ஒரு பத்திரிகை நிறுவனம் கொண்டாடியிருக்குமா என்பது ஐயத்துக்குரிய செய்திதான். அந்த அளவுக்கு நிறுவனத்தின் மீது பற்றுள்ளவராக சண்முகநாதனும் அவர்மீது பற்றுள்ளவர்களாக நிறுவனத்தினரும் நடந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு விதையை மண்ணில் ஊன்றி முளைக்கவைத்து, செடியாக்கி, மரமாக்கி, ஓங்கி உயர்ந்து நிற்கவைப்பதுபோல தினத்தந்தியின் திருச்சி பதிப்பை மக்கள் நெஞ்சில் நிலைநிறுத்திவர் சண்முகநாதன்.