Home

Sunday 7 October 2018

சைக்கிள் - சிறுகதை


மங்கான் தெரு, மாதாகோவில் தெரு, சாமியார் தோட்டம் என மூன்று தெருக்களைக் கடப்பதற்குள் கூடையிலிருந்த பத்து கோழிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. காலையில் பக்கத்து வீட்டு ரேடியோவில் ஏழேகால் மணிக்கு தமிழ்ச்செய்திகள் வாசிக்கிற நேரத்தில் கிளம்பினார்கள். எட்டுமணி சங்கு ஊதுகிற நேரத்துக்குள் வியாபாரமே முடிந்துவிட்டது. “எல்லாமே நீ சைக்கிள் தள்ற ராசிடாஎன்று முத்துசாமியின் முதுகில் தட்டினார் அவன் அப்பா.

கோழி வாங்குவதற்காகச் சென்றிருந்த கிராமத்தில் காலில் கண்ணாடி ஓடு குத்தி அவர் கட்டுப் போட்டுக்கொண்டிருந்த சமயத்தில், ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை முன்னிட்டு, அவருக்குத் துணையாக முதன்முதலாக அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு சென்றான். மிகக்குறைந்த நேரத்தில் அன்று எல்லாக் கோழிகளும் விற்றுவிட்டன. அந்த சந்தோஷத்தில் அவர் வைத்துவிட்ட கைராசிப் பட்டத்துக்காக, ஒவ்வொரு ஞாயிறும் அவன் சைக்கிள் தள்ளவேண்டியிருந்தது. 
செபாஸ்டியன் சொல்தா வீட்டில் முப்பது ரூபாய் விலைசொல்லி இருபத்தைந்து ரூபாய் கணக்கில் மூன்று கோழிகளை விற்றுவிட்டார் அப்பா. அதிகபட்ச லாபம் கிடைத்துவிட்ட உற்சாகம் அப்பாவின் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அவர் முகத்தின் பிரகாசம் பெருகப்பெருக முத்துசாமியின் மனம் பீதியில் அமிழ்ந்தது. அப்படிப்பட்ட சமயங்களில் அவர் கால்கள் தரையிலேயே நிற்காமல் கள்ளுக்கடையை நோக்கித் திரும்பிவிடும் ஆபத்து இருந்தது. என்ன செய்வது என்று புரியாமலேயே ராலே சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தான் முத்துசாமி.
ரெட்டியார் ஓட்டலைக் கடக்கும் சமயத்தில்நில்லுடாஎன்றார் அப்பா. அவசரத்தில் முத்துசாமிக்கு சைக்கிளைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. ஆறேழு அடி முன்னால் சென்றபிறகுதான் நிறுத்தமுடிந்தது.
எதாச்சிம் சாப்புடறியாடா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார். அவசரமாக தலையை அசைத்தபடிவேணாம்பா. ஊட்டுக்கு போயிடலாம்என்றான் அவன். அவர் உடனேஊடுஊடுன்னு எதுக்குடா பறக்கற? ஊட்டுல பொதயலா வச்சிக்கற?” என்று எரிந்து விழுந்தார். எந்த பதிலும் சொல்லாமல் அவன் அவர் கால்களையே பார்த்தபடி நின்றான். ”நிக்கறான் பாரு, நல்லா ஒட்டடக்குச்சிமாரிஎன்று முணுமுணுத்தபடி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டார். அடுத்து சாந்தமான குரலில்ஒன்ன பார்த்தா எஸ்ஸெல்சி படிக்கற பையனாட்டமா தெரியுது? வேகமா ஊதனாவே உழுந்துருவபலக்குது. வயசுப்புள்ள நல்லா சாப்டடாதானடா சத்து வரும்என்றார். ”இல்லப்பா வேணாம்என்று அவன் சொன்னதை அவர் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. சைக்கிளை அவனிடமிருந்து வாங்கி பூட்டி ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டலுக்குள் நுழைந்துவிட்டார். அவருக்குப் பின்னால் செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அவன் ஒரு தோசை சாப்பிடுவதற்குள் ஒரு செட் பூரியையும் ஒரு தோசையையும் ஒரு பிளேட் உப்புமாவையும் அவன் அப்பா சாப்பிட்டுமுடித்து ஏப்பம் விட்டார். “சாப்புடற லட்சணமாடா இது? கோழி சீய்க்கிறமாரி சீச்சிகினே இருந்தா எந்த காலத்துலடா சாப்ட்டு முடிக்கறது?” என்று சொல்லிக்கொண்டே கைகழுவச் சென்றார். மீண்டும் பெஞ்சில் வந்து உட்கார்ந்து ஒரு டீ வாங்கி அருந்தினார். அப்போதுதான் அவன் எழுந்து சென்று கைகழுவிக்கொண்டு திரும்பினான். ஆழ்மனத்தில் அவன் பயம் அப்படியே இருந்தது.
சைக்கிள் பூட்டைத் திறந்ததும் மீண்டும் தள்ளியபடி நடந்தான். ஆஸ்பத்திரி மைதானத்தைக் கடக்கும் சமயத்தில் மீண்டும் நில்லுடாஎன்றார் அப்பா. வழக்கம்போல சிறிது தூரம் முன்னே சென்றபிறகு வண்டியை நிறுத்தினான். ”இங்க எடம் நல்லா இருக்குது பாரு, ஒனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் குடுக்கறேன். வாஎன்று அருகில் வந்தார்.
அக்கணத்திலேயே முத்துசாமிக்கு அடிவயிறு கலங்கத் தொடங்கியது. சைக்கிள் கற்கத் தொடங்கிய முந்தைய அனுபவங்கள் எல்லாமே கசப்பானவை. ஏற்கனவே பட்ட காயங்களே இன்னும் ஆறாமல் இருந்தன. மெதுவான குரலில் அப்பறமா கத்துக்கறன்பா. அடுத்த வாரம் ஸ்கூல்ல டெஸ்டுங்க இருக்குது. படிக்கணும்பாஎன்று அவரைப் பார்த்து கெஞ்சினான்.
அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது. என் பின்னாடியே வா. சொல்றேன்என்றபடி அவர் மைதானத்தில் இறங்கி நடந்தார்.
பெடல்ல கால்வச்சி ஏறவே வரமாட்டுது எனக்கு. எனக்கு எதுக்குப்பா சைக்கிள்?”
அது எப்பிடிடா? எதயும் பத்துபாஞ்சி தரம் செஞ்சி பார்த்தாதான்டா வரும். படிக்கற புள்ளதான நீ? வராது வராதுன்னு அபசகுனமா நெனச்சிகினே ஆரம்பிச்சா வாழ்க்கையில எதுதான்டா வரும்?”
பரீட்சைக்கு நெறயா பாடம் இருக்குதுப்பா. வேணாம்பா. சொன்னா கேளுப்பாஅவன் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
தூ, பொட்டயாட்டம் அழுவறான் பாரு. ஆம்பள புள்ளதானடா நீ? ஒரு ஆத்தரம் அவசரத்துக்கு எங்கனா ஓடணும்ன்னா சைக்கிள் தெரிஞ்சிருக்க வேணாமா? நாளபின்ன நீயே கோழி வாங்கியார போவணும்ன்னா, ஊரூரா நடந்தா போவ?”
கோழி யேபாரமே எனக்கு வேணாம்பா.”
யேபாரம் செய்யாம கலெக்டரு வேலைக்கு போவபோறியா?”
இல்லப்பா
என்னடா, இல்ல நொள்ளன்னுட்டு….” அவர் குரல் உயர்ந்தது.
வேணாம்பா, வேணாம்பாஎன அவன் கெஞ்சிய குரல்கள் அவர் காதிலேயே விழவில்லை. ”ஏறி சீட் மேல உக்காருடாஎன்று அவன் முதுகிலேயே அடித்தார். வேறு வழி தெரியாமல் அவன் சைக்கிள் சீட்டில் உட்கார்ந்தான். ஒடுக்கு விழுந்த பாத்திரத்தைத் தட்டி நிமிர்த்துவதுபோல வளைந்த அவன் முதுகில் அடித்தார் அப்பா. சட்டென்று அவன் முதுகில் விறைப்பேறிவிட, ஒரு பாறையை முதுகில் கட்டிவிட்டதுபோல உணர்ந்தான்.
நேரா பாருடா. குனியாம பெடல மிதிஎன்றபடி பின்னால் பிடித்துக்கொண்டே சைக்கிளைத் தள்ளிவிட்டார். மறுகணமே அவன் தோள் ஒருபக்கமாக வளையத் தொடங்கியது.  தோள வளைக்காதஎன்று அழுத்திச் சொன்னபடி அவர் தாங்கி நிமிர்த்திவிட்டார். சமாளித்து சமநிலைக்குத் திரும்பிவந்தபோது வண்டி நின்றுவிட்டது. மீண்டும் பெடலை மிதித்து சைக்கிளை நகர்த்தியதுமே, மறுபடியும் ஒரு பக்கமாகச் சாய்ந்தது உடல்.  பெடலுக்கும் உடலுக்கும் சமநிலை கூடி வரவே இல்லை. அப்பாவின் கட்டுப்பாட்டையும் மீறி கீழே விழுந்துவிட்டான். இடது தோளில் அடி. தோள்பக்கம் சட்டை கிழிந்துவிட்டது. கெண்டைக்கால் சதை பிய்ந்துபோனது. கண்களில் நீர் தளும்பஅப்பா, வேணாம்பாஎன்றா. அவர் அதை காதிலேயே வாங்கவில்லை.
ஏந்து வாடா, சைக்கிள் கத்துக்கும்போது அடிபடறதுலாம் சகஜம்டா. சின்ன வயசுல என் ஒடம்புபூரா காயமாத்தான் இருக்கும், தெரிமா?”
அவர் அவனை மீண்டும் சைக்கிளில் உட்காரவைத்து, கற்பிக்கும் முயற்சிகளில் இறங்கினார். அவனைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிநின்று வேடிக்கை பார்த்தது. அவமானத்தில் அவனால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஒருமணி நேரம். நெற்றி, கை, கால்களில் காயம் பட்டதுதான் மிச்சம். ஏற்கனவே பட்ட காயங்கள் பெரிதாகி ரத்தம் கசிந்தது. மண்ணில் விழுந்துவிழுந்து உடல்முழுக்க புழுதி அப்பியிருந்தது. ஒரு பத்து அடி கூட சுதந்திரமாக சைக்கிளை ஓட்ட அவனுக்கு வரவில்லை.  சரி, போதும் விடு. அடுத்த வாரம் பாத்துக்கலாம்என்று சலித்தபடி அப்பாவே தன் பயிற்சியை நிறுத்திவிட்டார். “நீ என்கிட்ட சரிவரமாட்ட. நம்ம அப்துல்லாகிட்ட சொல்றன். அவன் நாலு நாள்ல ஒனக்கு சொல்லிக்குடுத்துருவான்என்று முணுமுணுத்தார்.
சைக்கிளை சோர்வுடன் தள்ளியபடி வீட்டைநோக்கி நடந்துகொண்டிருந்தபோதுநில்லுடாஎன மறுபடியும் அதட்டினார் அப்பா. வழக்கம்போல ஆறேழு அடி முன்னால் சென்றபிறகுதான் நிறுத்தமுடிந்தது.  பீதியோடு அவர்பக்கமாகத் திரும்பினான். அவர் பையிலிருந்து ரூபாய்த்தாள்களை எடுத்து எண்ணி அவனிடம் கொடுத்தார். “எடுத்தும் போயி  ஒங்க அம்மாகிட்ட குடு. நான் அப்துல்லாவ பார்த்துட்டு வரன்என்றபடி எஞ்சிய தாள்களை பைக்குள் வைத்துக்கொண்டு போய்விட்டார்.
உங்கள் அபிமான நவீனா திரையரங்கில் இதயக்கனி இருபத்தைந்தாவது நாளாக வெற்றிநடை போடுகிறதுஎன ஒலிபெருக்கியில் ஒருவர் பேசிக்கொண்டே இருக்க, ஒரு வாகனம் ஆரவாரத்துடன் அந்தத் தெருவுக்குள் நுழைந்தது. வண்டியோடு ஓரமாக ஒதுங்கி, அந்த வாகனத்துக்கு வழிவிட்டான் அவன். “விருந்துக்கு முக்கனி. வினாயகருக்கு விளாங்கனி. குடும்பத்துடன் கண்டுகளிக்க இதயக்கனி. இனிய புதுச்சேரிவாழ் ரசிகப்பெருமக்களே, இன்றே திரண்டு வருகஎன அறிவிப்புக்குரல் முழங்கிக்கொண்டே போனது.
அவன் கோலத்தைப் பார்த்ததுமே அம்மா ஆத்திரத்துடன் திட்டத் தொடங்கினாள். ”அந்த ஆளுக்குத்தான் அறிவில்லன்னா, ஒனக்கு எங்கடா போச்சி புத்தி? சைக்கிளும் வேணாம், ஒரு எழவும் வேணாம்ன்னு சொல்றதுக்கு என்னாடா? வாய்ல கொழுக்கட்டயா வச்சிருந்த?” என்று ஆரம்பித்த வசைகளை அவள் நிறுத்தவே இல்லை. எல்லாப் புண்களையும் கழுவித் துடைத்து, நர்சம்மா வீட்டிலிருந்து டிஞ்சர் வாங்கிவந்து பூசிமுடிப்பது வரை பேசிக்கொண்டே இருந்தாள். அவன் தம்பிகளும் தங்கைகளும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
அவனுக்கு இருக்கற பழக்கத்தயெல்லாம் ஒன்னொன்னா ஒனக்கும் கத்துகுடுத்துட்டுதான் அந்த பேமானி நிறுத்துவான்போல. ஒரு துன்பமா, ரெண்டு துன்பமா, காலம்பூரா இந்த கண்காட்சிதான் எனக்கு. அந்த ஆத்தா என்னைக்குதான் இதுக்கு ஒரு முடிவு வச்சிருக்காளோஎன்று சொன்னபடி மூக்கைச் சிந்தினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
அன்று இரண்டுமணி சங்கு ஊதுகிற சமயத்தில்தான் அப்பா வீட்டுக்கு தள்ளாடியபடி வந்தார். வாசல் படி ஏறமுடியாமல் இரண்டுமுறை தடுமாறி கீழே விழுந்தார். அங்கிருந்தே அவர் வசைகள் தொடங்கிவிட்டன. கையை ஊன்றி படியேறி உள்ளே வந்ததும் சுவரோரமாக படித்துக்கொண்டிருந்த அவன் முதுகில் ஒரு உதை விழுந்தது. “அவன எதுக்கு இப்ப அடிக்கற?” என்று சீறியபடி அம்மா எழுந்துவந்தபோது, அவளுக்கும் அடி விழுந்தது. ஐயோ என்று அலறியபடி கீழே விழுந்த அம்மா, பிடிக்கு அகப்படாத கோழியைப்போல அறைக்குள்ளேயே அங்குமிங்கும் ஓடினாள். பின்பக்கமாக உதைத்து அவளை விழவைத்து அடிக்கத் தொடங்கினார் அப்பா.  மீண்டும்மீண்டும் அடிகள். வசைகள். எதுவும் நிற்கவில்லை. தடுக்கச் சென்ற பிள்ளைகளுக்கும் உதைகள் விழுந்தன. அடிபட்டதில் தம்பியின் உதடு வீங்கிவிட்டது. எல்லாருமே நடுக்கத்துடன் சத்தமாக அலறினார்கள். ”ஊடாடா இது? தூ, சரியான நரகம்என்று காறித் துப்பிவிட்டு அப்பா வெளியே போனார்.
மதியம் எஞ்சியிருந்த சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து தட்டில் வைத்து இரவில் எல்லோருக்கும்  கொடுத்தாள் அம்மா. தம்பிகளும் தங்கைகளும் சாப்பிட்டதும் தூங்கிவிட, முத்துசாமிமட்டும் கேள்விபதில் எழுதிப் பார்ப்பதில் மும்முரமாக இருந்தான். மூலகுளம் அமராவதியில் இரண்டாவது ஆட்டம் சினிமா ஆரம்பிப்பதற்கான அடையாளமாக வினாயகனே பாட்டு ஒலிக்கும் ஓசை கேட்டது.
டேய், பெரியவனேஎன்று அம்மா அழைத்தாள். “என்னம்மாஎன்று முத்துசாமி அவள் பக்கம் திரும்பினான். ஆனால் அவள் எதுவும் பேசவில்லை. நாக்கை சப்புக்கொட்டியபடி தலையை அசைத்துக்கொண்டாள். அவன் மீண்டும்என்னம்மா?” என்றான். “ஒன்னுமில்ல படுஎன்று சொல்லிவிட்டு தூண்பக்கமாக பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள்.  விளக்குத்திரியை சின்னதாக அடக்கிவைத்துவிட்டு அவனும் படுத்துக்கொண்டான். கண்களை மூடியதுமே தூக்கம் வந்துவிட்டது.
கனவில் எங்கோ பட்டாசு வெடிக்கிற சத்தம்போல கேட்டது. லட்சுமி வெடி, தவளகுப்பம் வெடி, யானை வெடி, மிளகாய் வெடி என தெரிந்த வெடிகள் அனைத்தும் மாறிமாறி கனவில் தோன்றிமறைந்தன. காதருகே வெடிக்கும் சத்தம் கேட்டதும் குழம்பி தூக்கம் கலைந்து கண்விழித்தான். ஒரு தவலை உருண்டோடி சுவரில் சத்தத்தோடு மோதி நிற்பதை அவன் கண்கள் பார்த்தன. மறுபக்கத்தில் அம்மாவை அடித்துக்கொண்டிருந்தார் அப்பா. காதால் கேட்கமுடியாத வசைகள். சட்டென்று எழுந்தோடிவேணாம்பா வேணாம்பாஎன்றபடி அவன் அவரைப் பிடித்து இழுத்தான். அதற்குள் தம்பிகள் எழுந்து பீதியில் ஓவென்று சத்தம்போட்டு அழுதார்கள். அம்மாவின் கன்னங்களில் மாறிமாறி ஏழெட்டு முறை அறைந்துவிட்டார் அப்பா. அம்மா நிலைகுலைந்து தரையில் சரிந்தாள். “ஒருநாளாச்சிம் ஒன்கிட்ட மனுசன நிம்மதியா இருக்க முடியுதா? பொம்பளயா நீ?” என்று அவர் போட்ட சத்தத்தில் கூரையே அதிர்ந்தது. கோழிகளை மூடிவைத்திருந்த கூடையை உதைத்துவிட்டு திட்டியபடியே வீட்டைவிட்டு வெளியே போனார். பலவீனமாக கூவியபடி கோழிகள் திசைக்கொன்றாக ஓடின. வெளியே சைக்கிளைத் திறந்து தள்ளிக்கொண்டு செல்லும் சத்தம் கேட்டது.
மறுநாள் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. அதற்கு அடுத்த நாள் பள்ளியில் மாதிரித்தேர்வுகள் தொடங்கிவிட்டன. ஒரு வாரம் அவன் வேறு எதைப்பற்றியும் யோசிக்கமுடியாதபடி பாடங்களில் மூழ்கியிருந்தான். ஒவ்வொருநாளும் சாயங்காலம் விளக்குச்சிம்னிகளைக் கழுவித் துடைத்து மண்ணெண்ணெய் ஊற்றும்போது, அவருடைய சைக்கிள் வந்து வாசலில் நிற்கப் போவதாக நினைத்துக்கொள்வான். அவ்வளவுதான். அப்புறம் பாடங்களின் ஞாபகம் வந்ததும் மறந்துவிடுவான். அப்துல்லா மாமா ஒருமுறை வீட்டுக்கு வந்து விசாரித்தார். அம்மா அழுதபடியே நடந்ததையெல்லாம் சொன்னார்.
இரண்டு நாள் கழித்து அப்பா வீட்டுக்குத் திரும்பிவிட்டார். சைக்கிள் சத்தம் கேட்டு அவன் எழுந்து நின்றான். “இந்தாடா, எடுத்தும் போயி ஒங்கம்மாகிட்ட குடுஎன்றபடி மீன்பறியை கொடுத்தார். பறிநிறைய நீர்சுதும்பு மீன்கள். அடுப்பைப் பற்றவைத்துக்கொண்டிருந்த அம்மாவுக்கு அருகில் வைத்துவிட்டுத் திரும்பினான் அவன்.
அந்த வாரத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கோழி விற்பனைக்கு அவன் சென்றான். முடித்துக்கொண்டு திரும்பும்போது, கறிக்கடைக்குப் பக்கத்தில் அப்துல்லா நிற்பதைப் பார்த்துவிட்டு அப்பாவும் நின்றார். அவரைப்போல அவனால் அவசரமாக நிற்கமுடியவில்லை. சிறிதுதூரம் சைக்கிள் முன்னால் சென்றுவிட பிறகுதான் நின்றான்.
பிரேக் புடிச்சி நிறுத்தாம, ஏன் வண்டிகூடயே ஓடிப் போயி நிறுத்தற?” என்று அப்துல்லா மாமா அவனைப் பார்த்துக் கேட்டார். “அவனுக்கு பிரேக் புடிக்கவும் தெரியாது, சைக்கிள் ஓட்டவும் தெரியாது. வெறும் சோத்துமாடுஎன்று கசப்போடு பதில் சொன்னார் அப்பா. ”அப்படியா?” என்றபடி ஆச்சரியத்தோடு பார்த்தார் அப்துல்லா மாமா.
இவ்ளோ பெரிய பையன் சைக்கிள் ஓட்டலைன்னா எப்பிடிப்பா?. இங்க வா. நான் கத்துக் குடுக்கறன்என்றபடி முத்துசாமியின் அருகில் வந்தார். அவனுக்கு அக்கணமே கைகளும் கால்களும் நடுங்கத் தொடங்கின. “வாப்பா, ஒன்னும் ஆவாதுஎன்றபடி அவனை இழுத்து சைக்கிளில் உட்காரவைத்தபோது, நடுக்கத்தில் கால்களை சரியாக ஊன்றிக்கொள்ளமுடியாமல், சைக்கிளோடு அவன் அவர்மீது சரிய, அவரும் அவனும் ஒன்றாக கீழே விழுந்தார்கள். அவன் உடல் நடுங்குவதைப் பார்த்து, அவருக்கு பயம் வந்துவிட்டது. உடனே, “ஒனக்கு புடிக்கலைன்னா வேணாம், உடு. அதுக்காக ஏன் அழுவற?” என்றபடி அவனை நெருங்கி தோளில் தட்டிக் கொடுத்தார். பிறகு அப்பாவும் அவரும் கடைத்தெரு பக்கம் சென்றுவிட, அவன் சைக்கிளை உருட்டியபடி வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.
பொதுத்தேர்வுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த சமயத்தில், முத்துசாமியின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பழையபடி மோதல் உருவாகிவிட்டது. ஒரே சத்தம். அடி. உதை. கலவரம்.  மீண்டும் அவர் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார்.  தேர்வு எழுதும் பதற்றத்தில் இருந்தான் முத்துசாமி. ஒவ்வொரு பாடத்திலும் எண்பது தொண்ணூறு மதிப்பெண்களாவது பெற்றுவிடவேண்டும் என நினைத்தான். அதிக மதிப்பெண்கள் வைத்திருந்தால்தான், புகுமுக வகுப்பில் ஆசைப்பட்ட பிரிவு கிடைக்கும் என்று சொன்ன தலைமை ஆசிரியரின் எச்சரிக்கை காதுகளில் ஒலித்தபடியே இருந்தது. அம்மாவைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆயினும் அவன் மனத்தில் எதற்கும் இடம் கொடுக்காமல் படிப்பதில்மட்டுமே கவனத்தைச் செலுத்தினான். காலையில் நான்கு மணிக்கு சங்கு ஊதும்போதே எழுந்து படிக்கத் தொடங்கினான். ஒருமுறை படித்ததை பத்து முறை எழுதிப் பார்த்தான். தேர்வுகள் அனைத்தும் முடிந்தபோது ஒரு பெரிய பாரத்தை இறக்கிவைத்ததுபோல இருந்தது.
சாப்பாட்டுச் செலவுக்காக அம்மா காலையில் நர்சம்மா வீட்டில் சமையல் வேலைக்கும் மதிய நேரத்தில் ரைஸ்மில்லில் அரிசி புடைக்கும் வேலைக்கும் சென்றாள்.
இரண்டுநாள் கழித்து மாலை வேளையில் அப்துல்லா மாமா வீட்டுக்கு வந்திருந்தார். முறத்தில் அரிசியைப் பரப்பி கல் பொறுக்கிக்கொண்டிருந்த அம்மா அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றுஏதாச்சிம் சேதி தெரிஞ்சிதாண்ணே?” என்று கேட்டாள். “நானும் போற தெசையிலலாம் விசாரிச்சிகினுதான் போறேன். ஒன்னும் துப்பு கெடைக்கமாட்டுதும்மாஎன்று கவலையோடு சொன்னார் அப்துல்லா மாமா.
சரி உடுங்ணே. எல்லாம் என் தலயெழுத்து
கதிர்காமத்திலேருந்து பத்துக்கண்ணு பக்கம் போவறத பார்த்ததா ஒரு ஆளு சொன்னான். நாளைக்கு போயி பார்க்கலாம்ன்னா, நம்ம கடைப்பையன் நாலு நாள் லீவு போட்டுட்டு போயிருக்கான். என்னா செய்றதுன்னு புரியலை……”
எடத்தபத்தி தகவல இவன்கிட்ட சொல்லுங்கண்ணே. இவன் போயி பார்த்துட்டு வரட்டும்…….”
அவர் திடுக்கிட்டு, “இவனயா…? என்று கேட்டார். “நாலு எடம் திரிஞ்சி பழகனாதான அவனுக்கும் வெளியுலகம் தெரியும்என்றாள் அம்மா. என் தோளைப் பற்றி அவர் பத்துக்கண்ணுக்குச் செல்லும் வழித்தடத்தை விவரித்த பிறகு, “அங்க வீரப்பக்கவுண்டருன்னு ஒருத்தரு பாலத்துக்கு பக்கத்துலயே ஒரு ஓட்டல்கட வச்சிருக்கறாரு. அங்க விசாரிச்சா, விஷயம் தெரியும்என்றார்.
மறுநாள் காலையில் உப்புப் போட்டு கலக்கிய நீராகாரத்தை வயிறுநிறைய குடித்துவிட்டு பத்துக்கண்ணுக்கு நடந்து சென்றான் முத்துசாமி. அந்த ஓட்டல் கடைக்காரர் அப்பாவைப் பார்த்து ஒரு மாதத்துக்கும் மேல் இருக்கும் என்று சொன்னார். பத்துக்கண்ணு மதகிலிருந்து பிரிந்து வரும் கால்வாய் ஓரமாக சிறிது நேரம் உட்கார்ந்து, ஜரிகைப்புடவைபோல மின்னியபடி ஓடும் தண்ணீரையே பார்த்தான். பிறகு, தண்ணீரில் இறங்கி, முகம் கைகால் கழுவிக்கொண்டு, நாலைந்து வாய் அள்ளிப் பருகிவிட்டு திரும்பி நடந்தான். அம்மா அவன் முகத்தைப் பார்த்தே எல்லாவற்றையும் புரிந்துகொண்டாள். ஏமாற்றத்தில் அவள் கண்கள் வறண்டுவிட்டன.  
வீட்டுக்கு அருகிலிருந்த நூலகத்திலேயே நாள்முழுக்க இருக்கத் தொடங்கினான் அவன். அங்கே வரக்கூடிய எல்லாச் செய்தித்தாள்களையும் வார மாத இதழ்களையும் ஒன்றுவிடாமல் படித்தான். அதுமட்டுமில்லாமல், யாரும் சொல்லாமலேயே தினமும் நூலகத்தைப் பெருக்கி, ஜன்னல் கம்பிகளில் படிந்திருந்த அழுக்கைத் துடைப்பதையும் குடத்தில் தண்ணீர் நிரப்பிவைப்பதையும் தன் வேலையாக நினைத்துச் செய்தான். நூலகப் பணியாளர் அவன்மீது மிகவும் அன்பு காட்டினார். அவன் உறுப்பினரல்ல என்றபோதும் பல புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்க அனுமதித்தார். எப்போதாவது சில மாலைநேரங்களில் நூலகத்தைப் பூட்டும்போது, அவர் அவனுக்கு நாலணாவோ எட்டணாவோ கொடுத்துவிட்டுச் சென்றார். அந்தக் காசில் பொட்டுக்கடலையும் வெல்லமும் வாங்கிவந்து தம்பிதங்கைகளோடு சேர்ந்து சாப்பிட்டான் அவன்.
அப்துல்லா மாமா திடீர்திடீரென வந்து லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், தேங்காதிட்டு, தவளக்குப்பம் என அப்பா செல்லும் இடங்கள்பற்றிய தகவல்களைச் சொல்லிவிட்டுச் செல்வதும், அடுத்த நாளே நம்பிக்கையோடு அவன் நடந்துசென்று பார்த்துவிட்டுத் திரும்புவதும் பழகிவிட்டது. எந்த இடத்திலும் ஒரு சின்ன தகவல்கூட கிடைக்கவில்லை.
தேர்வுமுடிவு வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. அவன் மனம் பதற்றத்தில் அலைமோதியது. அப்துல்லா மாமா வீட்டுக்கு வந்து காளாப்பட்டிலிருந்து நம்பகமான ஒரு தகவல் கிடைத்துள்ளதாக சொன்னார். அய்யனார் கோவில் தெரு மூலையில் ஒரு கறிக்கடையில் விசாரிக்கும்படி சொன்னார்.
அடுத்தநாள் காலையிலேயே முத்துசாமி கிளம்பிச் சென்றான். அந்த இடத்துக்குச் செல்ல மூன்றுமணிநேரத்துக்கும் மேல் நடக்க வேண்டியிருந்தது. கறிக்கடைக்காரரிடம் விசாரித்ததும்ராமலிங்கம் பையனா நீ? என்று கேட்டார் அவர். அவன் மெதுவாக தலையைசைத்தான். தராசுக்கல்லை தட்டில் வைத்துவிட்டு அவனுக்கு அருகில் வந்தார். “ரெண்டுமாசமா ஆளே வரலையே தம்பி. ஏதாச்சிம் ஒடம்புகிடம்பு சரியில்லாம போயிருக்கும்ன்னு நெனச்சன். நீ இப்படி திடுதிப்புனு வந்து நிக்கறத பார்த்தா எனக்கே பயமா இருக்குதேஎன்று சொன்னபடி கடை மூலையில் சுவரோடு சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த ஒரு சைக்கிள் பக்கமாகச் சென்று பெருமூச்சோடு நின்றார். சில கணங்களுக்குப் பிறகுதான் அவன் அந்த சைக்கிளைக் கவனித்தான். அது அவன் அப்பாவின் சைக்கிள்.  நாளைக்கு வந்து எடுத்துகினு போறேன் பாய்னு அவன்தான் இங்க நிறுத்திட்டு போனான்என்று சொல்லிக்கொண்டே வந்தவர் நாக்கை சப்புக்கொட்டியபடிகடசியில இப்பிடி செய்வான்னு தெரியாம போச்சேஎன்று சொல்லிவிட்டு நிறுத்தினார். மீண்டும் தராசுத்தட்டின் பக்கம் வந்து குடத்திலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்துப் பருகினார்.
என்ன, சைக்கிள எடுத்துகினு போயிடறியா?” கறிக்கடைக்காரர் அவனைப் பார்த்துக் கேட்டதும் முத்துசாமி தலையசைத்தான். பூட்டியிருந்த சைக்கிளை அவரே தூக்கிவந்து வாசலில் வைத்தார். பிறகு கடைப்பையனை அழைத்து அதே தெருவில் இருந்த சைக்கிள் கடைக்காரரை அழைத்து வரும்படி சொல்லியனுப்பினார். அருகில் கிடந்த ஒரு துணியை எடுத்து, அழுக்கடைந்துபோயிருந்த சைக்கிளை அவன் துடைத்தான்.
சைக்கிள் கடைக்காரர் வந்ததும் கறிக்கடைக்காரர் விஷயத்தைச் சொன்னார். அவர் சைக்கிள் பூட்டை ஒருகணம் உற்றுப் பார்த்தார். பிறகு பையிலிருந்த கம்பியை எடுத்து பூட்டின் துவாரத்தில் மெதுவாக நுழைத்து நெம்பினார். மறுநொடியில் க்ளக் என்னும் சத்தத்தோடு பூட்டு திறந்துகொண்டது. இரண்டு பேருக்கும் நன்றி சொல்லிவிட்டு, அவன் சைக்கிளை தள்ளினான்.
ஓட்டிகினு போ தம்பிஎன்றார் கடைக்காரர். அவன் திரும்பி கூச்சத்தோடு, “எனக்கு ஓட்டத் தெரியாதுஎன்று சொன்னான். அதிசயமான காட்சியொன்றைப் பார்ப்பதுபோல அவர் அவனை ஒருகணம் பார்த்துவிட்டு, பிறகு ஒரு சின்ன புன்னகையோடுசரி, பார்த்து போஎன்றார்.
முத்துசாமி சொன்ன செய்தியைக் கேட்டு அம்மா சில கணங்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டாள். அன்று இரவு அவள் சாப்பிடாமலேயே படுத்துக்கொண்டதைக் கவனித்தான் முத்துசாமி. அவளை நெருங்கி ஆறுதல் சொல்கிற துணிச்சலில்லாமல் ஏதோ குருட்டு யோசனைகளில் மூழ்கியபடி தூங்கிவிட்டான்.
தேர்வுமுடிவுகள் வந்துவிட்டன. அறுநூறுக்கு நானூற்றி தொண்ணூறு வந்திருந்தது. ரைஸ்மில்லுக்குச் சென்று அம்மாவிடம் சொன்னான். அம்மா அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவள் முகம், தலைமுடி, கழுத்து முழுக்க தங்கத்துகள்கள்போல தவிடு படிந்திருந்தது.  பக்கத்தில் அரிசி புடைத்துக்கொண்டிருந்த பெண்களைப் பார்த்துஎன் பையன்என்று சொன்னாள். முந்தானையின் முடிச்சை அவிழ்த்து பத்து பைசாவை எடுத்து, “இந்தா, போய் சாக்லேட் வாங்கிக்கஎன்று கொடுத்தாள்.
புகுமுக வகுப்பில் க்ரூப் கிடைக்கும் என்று எல்லோருமே  சொன்னார்கள்.  தாகூர் கலைக்கல்லூரியில் விண்ணப்பம் வாங்கச் சென்ற நண்பர்களோடு ஒருநாள் முத்துசாமியும் சென்றான். போகும் வழிமுழுக்க ஒரே பேச்சுதான். எல்லோரிடமும் எதிர்காலம்பற்றிய கனவுகள் நிறைந்திருந்தன. எஞ்சினீயர் கனவு, டாக்டர் கனவு. பேங்க் ஆபீசர் கனவு. அவனைத் தவிர எல்லோரும் விண்ணப்பம் வாங்கினார்கள். ஒரு விண்ணப்பம் இருபது ரூபாய்.  ஏன்டா, நீ வாங்கலை?” என்று கேட்டான் ஒருவன். “நாளைக்கி வாங்குவேன்என்றான் முத்துசாமி.
அம்மா ஒவ்வொரு நாளாக தள்ளித்தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தாள். அவள் கேட்டிருந்த எந்த இடத்திலும் பணம் புரட்டமுடியவில்லை. கடைசி நாள் வரைக்கும் அவள் கையில் ஒரு ரூபாய்கூட சேரவில்லை. எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் நூலகர் இருபது ரூபாய் கொடுத்து, “ஓடு, ஓடு காலேஜ்க்கு ஓடுஎன்று அனுப்பிவைத்தார். விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை எழுதி, சான்றிதழ்களை இணைத்துக் கொடுத்தபிறகுதான் அவனால் இயல்பாக மூச்சுவிட முடிந்தது.
பத்து நாட்களில் பதில் வந்துவிட்டது. வியாழக்கிழமை அன்று நேரில் சான்றிதழ்களோடு வந்து கட்டணம் செலுத்திவிட்டு க்ரூப்பில் சேர்ந்துகொள்ளும்படி எழுதியிருந்தது. ”எவ்ளோ கட்டணுமாம்?” என்று கேட்டாள் அம்மா. “தொண்ணத்தியஞ்சு ரூபாஎன்றான். “இன்னும் நாலு நாள் இருக்குதே. மலையையே பொரட்டிரலாம். கவலப்படாதஎன்றாள் அவன் அம்மா.
மறுநாள் நர்சம்மா வீட்டில் சமைத்துவிட்டு திரும்பிய அம்மாவின் முகம் களையிழந்து காணப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகுபோய் அப்துல்லா மாமாவ கூட்டிகினு வா, ஓடுஎன்றாள். ”எதுக்குமா?” என்று கேட்டான். “போய் வாடா, சொல்றேன்என்று அவன் வாயை அடைத்துவிட்டாள் அம்மா. ஒரு மணி நேரம் கடைத்தெருவில் தேடித் திரிந்து அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அவரிடம் முத்துசாமிக்கு கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொன்னாள் அம்மா. பிறகு, “செலவுக்கு பணம் வேணும்ண்ணா. எப்படியாவது நீங்க அந்த சைக்கிள வித்துக் குடுக்கணும். ரொம்ப அவசரம்என்றாள்.
அவருக்கு அதிர்ச்சியில் பேச வரவில்லை. “அவன் எப்பனாச்சிம் திரும்பி வந்து யேபாரத்துக்கு வேணும்ன்னு சொன்னான்னா, என்னம்மா செய்யறது?” என்று கவலையோடு கேட்டார்.
போய் மூணுமாசமாவுது. பொண்டாட்டி புள்ளைங்க என்ன செய்வாங்கன்னு கொஞ்சம் கூட கவல இல்லாம போயிட்டாரு. இனிமேல, அவரு வந்தா என்னா, வரலைன்னா என்னா? அவர பத்தி நாம எதுக்குண்ணே கவலப்படணும்?” என்றபடி அம்மா தலையைக் குனிந்துகொண்டாள்.
இரண்டே நாளில் சைக்கிள் விற்ற பணத்தோடு வந்தார் அப்துல்லா மாமா. ”இந்தாம்மா, நூத்தி பத்து ரூபா. இவ்ளோதாம்மா கெடச்சிதுஎன்றார். “பெரியவன்கிட்டயே குடுங்கண்ணேஎன்று அவன் பக்கமாக கைகாட்டிவிட்டாள் அம்மா. அவர் கொடுத்ததை வாங்கி மடித்து பைக்குள் வைத்தான் முத்துசாமி. “அதான்டா ஒனக்கு மூலதனம். வச்சி புத்தியா பொழச்சிக்கோஎன்றாள் அம்மா.
அவன் கல்லூரிக்கு நடந்துசெல்ல ஆரம்பித்தான். போக ஆறுமைல். வர ஆறுமைல். கூட்டம்கூட்டமாக மாணவர்கள் சைக்கிள்களில் போனார்கள். அவன் அமைதியாக சாலையோரம் நடந்துசென்றான்.
விதவிதமான சைக்கிள்களைப் பார்க்கப்பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை எப்படி ஓட்டுகிறார்கள் என்பது அதைவிட பெரிய ஆச்சரியமான விஷயமாக இருந்தது. ஒன்றிரண்டு நண்பர்கள் அவனுக்கு சைக்கிள் பயிற்சியைக் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் அவனுக்கு அதில் துளியும் ஆர்வமில்லாததால் மறுத்துவிட்டான். அப்போதெல்லாம் எல்லா நினைவுகளையும் உடைத்துக்கொண்டு அப்பாவின் நினைவும் அவரிடம் அடிபட்ட நினைவுகளும் தோன்றித்தோன்றி அவனை அலைக்கழித்தன. ஞாபகங்களின் சுமையைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் அந்த விஷயத்தை ஒருநாள் அம்மாவிடம் சொன்னான். அப்போது அவள் இரவு கஞ்சிக்காக, முறத்தில் அரிசியை வைத்துக்கொண்டு கல் பொறுக்கிக்கொண்டிருந்தாள்.
அந்த கருமாந்தரம் புடிச்ச ஆளு செஞ்ச அனத்தத்துக்கு அளவே இல்ல. அவன நெனச்சிகினே இருந்தா ஒரு வேலையும் உருப்படாது. சைக்கிள் ஓட்டத் தெரியலைன்னா ஒன்னும் குடிமுழுவிப் போவாது. ஒழுங்கா மனச திருப்பு. நமக்கு கீழ இருக்கறதுங்கள எப்படி கைதூக்கி உடலாம்ன்னு யோசனை பண்ணு. அதான் முக்கியம்.” அரிசியை கிளறியபடியே ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்திநிறுத்திச் சொன்னாள். அவள் கருத்த முகம் எரிவதுபோல இருந்தது.
சரிம்மா
சாலையில் ஒரு சைக்கிள் செல்லும் மணிச்சத்தம் கேட்டது. அந்த ஓசை அவன் மனத்தை கடந்து செல்ல, அவன் தன் அம்மாவின் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.
ஓடிப்போன ஆளவிட உயிரோட இருக்கறவங்க முக்கியம். எப்பவும் அது ஞாபகத்துல இருக்கட்டும். புரிதா?” என்றாள் அம்மா. அவன் தலையை அசைத்தான்.



(2014 இல் ஆனந்தவிகடன் இதழில் வெளியான சிறுகதை)