Home

Sunday 19 June 2022

கலைக்கு ஓர் அர்த்தம்

 

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் வேலைவாய்ப்பின் காரணமாக சேலத்திலிருந்து சென்னையை நோக்கி வந்த தலைமுறையைச் சேர்ந்தவர் விட்டல்ராவ். ஆனால் வேலைக்கும் அப்பால் கலையிலக்கிய வான்வெளியில் சிறகடித்துப் பறக்கும் விழைவும் விசையும் அவர் மனத்தில் நிறைந்திருந்த காரணத்தால், ஒருபுறம் வேலை பார்த்தபடியே மறுபுறத்தில் அவர் ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயிலத் தொடங்கினார். ஓவியம் அவருடைய விருப்பத்துக்குரிய கலைத்துறைகளில் முதன்மையானதாக இருந்தது.

இரண்டாண்டுகால படிப்பை முடித்து, நல்ல ஓவியர்களில் ஒருவராக அனைவராலும் மதிக்கப்படுவராக உயர்ந்தார். பிற ஓவிய நண்பர்களோடு இணைந்து ஓவியக்கண்காட்சிகளில் தம் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்தார். அதே சமயத்தில் தன் விருப்பத்துக்குரிய மற்றொரு துறையான எழுத்துத்துறையிலும் அடியெடுத்து வைத்தார். 1967இல் ஆனந்த விகடன் இதழில் வெளியான ’வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம்’ என்னும் சிறுகதை வழியாக அவருடைய இலக்கியப்பயணமும் தொடங்கியது. அமுதசுரபி, தினமணிகதிர், தீபம், கணையாழி என எல்லா இதழ்களும் அவருடைய கதைகளை வெளியிட்டு அவரை ஊக்கப்படுத்தின.

எதிர்பாராத வாழ்க்கை இடர்களால் ஓவியத்தில் தொடர்ந்து ஆழ்ந்து ஈடுபட முடியாமல் விலகிய விட்டல்ராவ், இலக்கியத்தையே தன் உலகமாக மாற்றிக்கொண்டார். கடந்த ஐம்பத்தைந்து ஆண்டு காலமாக அப்பயணம் இன்றளவும் தொடர்ந்தபடி உள்ளது. பன்னிரண்டு நாவல்களும் நான்கு குறுநாவல்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பத்து கட்டுரைத்தொகுதிகளும் அவருடைய படைப்புகளாக இதுவரை வெளிவந்துள்ளன.

1976இல் இலக்கியச்சிந்தனை அமைப்பின் சிறந்த நாவலுக்கான விருதை விட்டல்ராவ் எழுதிய ’போக்கிடம்’ பெற்றது. கையெழுத்துப் பிரதியாகவே அனுப்பப்பட்டு விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே இந்த நாவல் நூல்வடிவம் கண்டது. வாழ்வின் நிமித்தமாக மனிதர்கள் இடம்பெயர்ந்து செல்லும் புள்ளியை மையமாகக் கொண்டது இந்நாவல். நாடோடியாக வாழ்ந்த மனிதகுலம் ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கிய பிறகே சமுதாயம் உருவானது என்பது வரலாறு. நிலைத்து வாழ விரும்பும் மனிதர்களுக்கோ, காலூன்றி நிற்க ஒரு போக்கிடம் என்பது மிகமுக்கியமான தேவை.  ஒவ்வொருவரும் தன் போக்கிடத்தை எவ்வாறு கண்டடைகிறார்கள் என்பதை வெவ்வேறு சித்திரங்களின் தொகுப்பாக விட்டல்ராவின் நாவல் அமைந்துள்ளது.

நாவலின் ஒரு தளம் போக்கிடங்களைக் கண்டடைவதில் மனிதர்கள் எதிர்கொள்ளும் துயரத்தையும் சவால்களையும் சித்தரிக்கிறது. மற்றொரு தளமோ, ஓர் ஆணும் பெண்ணும் இயற்கைவிசையான காமத்தாலும் காதலாலும் கருணையாலும்  ஒருவருக்கொருவர் போக்கிடமாக தம் வாழ்க்கையைத் தகவமைத்துக்கொள்ளும் விதத்தையும் சித்தரிக்கிறது. இரு வண்ணங்களை வெவ்வேறு கலவையில்  குழைத்துத் தீட்டிய ஓவியத்தைப்போல, விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவல் அவரை கவனிக்கத்தக்க எழுத்தாளராக்கியது.

1981இல் வெளிவந்த விட்டல்ராவின் ’நதிமூலம்’ நாவல் அவரை ஓர் ஆளுமையாக உயர்த்தியது. நீல்சிலை அகற்றும் போராட்டத்தில் தொடங்கி இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரைக்குமான நாற்பதாண்டுகால இடைவெளியை இந்த நாவல் தன் களமாகக் கொண்டிருந்தது. சிதைவும் மீள்கட்டமைப்பும் மாறிமாறி நிகழும் கிட்டாவின் குடும்பவாழ்க்கை, ஓர் இந்தியக் குடும்பத்தின் படிமமாக அமைந்துவிட்டது. பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது நாவலுக்கு இணையான நதிமூலம் தமிழ்நாவல் வரலாற்றில் ஒரு முக்கியமான படைப்பு.

விட்டல்ராவ் பன்னிரண்டு நாவல்களுக்குச் சொந்தக்காரர். ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு களங்களைப் பின்னணியாகக் கொண்டது. ஓவியர்களின் கன்னிமுயற்சிகளைச் சித்தரிக்கும் ’காலவெளி’, நாடகக்கலைஞர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் ’வண்ணமுகங்கள்’, சென்னைவாழ் ஆங்கிலோ இந்தியக் குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் அயல்மாநிலமொன்றில் சந்திக்கும் அன்பின்மையையும் சித்தரிக்கும் ’நிலநடுக்கோடு’, தொழிற்சங்க வாழ்க்கையைச் சித்தரிக்கும் ’காம்ரேடுகள்’ என சொல்லிக்கொண்டே செல்லலாம்.

தமிழ்நாட்டில் வாழ்ந்த, வாழும் சிற்பிகள், ஓவியர்கள், கலைஞர்கள் பற்றிய அறிமுகக்கட்டுரைகளைக் கொண்ட விட்டல்ராவின் ’கலைஇலக்கியச்சங்கதிகள்’ ஒரு முக்கியமான ஆவணம். ஒரு குறிப்பிட்ட கலைஞரைப்பற்றி அறிய விரும்பும் ஒரு வாசகனுக்கு இப்புத்தகம் ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குகிறது. விட்டல்ராவ் எழுதிய ’தமிழகக் கோட்டைகள்’ ஒரு பயணநூலுக்கே உரிய சுவாரசியத்தோடும் வரலாற்றுத்தகவல்களோடும் அமைந்திருக்கும் முக்கியமான ஆவணம். இங்கிலாந்து ஓவியர்களான டேனியல் சகோதரர்களின் ஓவியத்தொகுப்பைக் கண்ணுற்றபோது உருவான மனஎழுச்சியால் விட்டல்ராவ் நம் நிலத்தில் நம்மைச் சுற்றியிருக்கும் கோட்டைகளை நேரில் சென்று பார்த்து பெற்ற அனுபவங்களையும் வரலாற்றுத்தகவல்களையும் படைப்பூக்கம் மிக்க மொழியால் இணைத்து மிகச்சிறப்பான முறையில் எழுதிய படைப்பு.

விட்டல்ரவின் ’வாழ்வின் சில உன்னதங்கள்’ புத்தகம் மற்றொரு சாதனைப்படைப்பு. இந்தப் புத்தக வாசிப்பு அனுபவம், கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இயங்கிய சென்னை நகரத்தின் பல்வேறு தோற்றங்களின் புகைப்படத்தொகுப்பைப் புரட்டிப் பார்க்கும் அனுபவத்துக்கு நிகரானது. சென்னை மூர்மார்க்கெட்டிலும் பிற பகுதிகளிலும் இருந்த பழைய புத்தகக்கடைகளைப்பற்றியும் அங்கே தேடித்தேடி எடுத்துப் படித்த பழைய அரிய நூல்களைப்பற்றியும் பல தகவல்களை இந்தப் புத்தகத்தில் விட்டல்ராவ் பதிவு செய்துள்ளார்.

விட்டல்ராவ் எழுதி, கடந்த ஆண்டில் வெளிவந்திருக்கும் ‘ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்’ புத்தகம் எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய சேலத்தைப்பற்றிய அனுப்பவச்சித்திரங்களைக் கொண்ட தொகுதியாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. வரலாற்றுத்தகவல்களைத் திரட்டித் தொகுத்து எழுதப்பட்ட நூல்களையே படித்துப் பழகிய கண்களுக்கு எளிய மனிதர்களின் அனுபவச்சித்திரங்கள் வழியாக விரியும் மற்றொரு இணைவரலாறு புதிய அனுபவமாக உள்ளது. பல கட்டுரைகளில் ஒரு சிறுவனாக அன்று தான் கண்ட காட்சிகளையும் மனிதர்களையும் ஒரு புனைகதை எழுத்தாளருக்கே உரிய அழகான மொழியோடு விட்டல்ராவ் சித்தரித்திருக்கிறார். இந்தப் பார்வைக்கோணம் இக்கட்டுரைகளுக்கு ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. அவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பக்கம், அவருடைய தன்வரலாற்றுச் சித்திரங்களாகவும், மறுபக்கம் நகரம் சார்ந்த வரலாற்றுச்சித்திரமாகவும் அமைந்துவிட்டன.

ஓர் ஆவணக்காப்பகத்தின் தகவல்களுக்கு நிகரான தகவல்களைக் கொண்ட ’தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’ விட்டல்ராவ் எழுதிய மற்றொரு சாதனைப்படைப்பு. மெளனப்பட காலத்திலிருந்து தொடங்கி எழுபதுகள் வரையிலான காலகட்டம் வரை  திரைப்படக்கலை தமிழில் வளர்ந்த விதத்தை ஆய்வுப்பார்வையுடன் விட்டல்ராவ் இந்த நூலை எழுதியிருக்கிறார். ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டுக்கே உரிய நுண்தகவல்களோடும் அழகியல் அடிப்படையில் அத்திரைப்படங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் பார்வையாளனின் ரசனையோடும் இப்புத்தகம் அமைந்துள்ளது.

எழுபதுகளில் தென்னிந்தியாவில் தொடங்கிய நவீன திரைப்பட எழுச்சி கன்னட மொழியில் வேரூன்றி வளர்ந்து செழித்த வரலாற்றின் தடத்தை அறிமுகப்படுத்தும் வகையில் விட்டல்ராவ் எழுதிய முக்கியமான புத்தகம் ’நவீன கன்னட சினிமா’.  நவீன கன்னட சினிமா வளர்ச்சிக்காக  பங்காற்றிய இயக்குநர்கள், அவர்கள் இயக்கிய திரைப்படங்கள், நடிகநடிகையர்கள், தொழில்நுட்பம் சார்ந்து பங்காற்றியவர்கள் பற்றிய  ஏராளமான தகவல்களோடு ஒரு கலைக்களஞ்சியமாக விட்டல்ராவ் அப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

எண்பது வயது நிறைவடைந்த விட்டல்ராவ் இன்றும் ஊக்கமுடன் எழுதி வருகிறார். தற்போது அவருடைய மூன்று தொடர்கள் வெவ்வேறு இதழ்களில் வெளிவருகின்றன. சிற்பங்கள் சார்ந்து ‘கலையும் காலமும்’ என்னும் தலைப்பில் பேசும் புதிய சக்தி இதழில் ஒரு கட்டுரைத்தொடரும்  அம்ருதா இதழில் ’தொலைபேசி நாட்கள்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத்தொடரும் வெளிவருகின்றன. தொலைபேசித்துறை வளர்ந்துவந்த தொடக்க காலத்தைப்பற்றிய ஒரு வரலாற்றுச்சித்திரத்தை அவருக்கே உரிய படைப்புமொழியுடன் ஒவ்வொரு அத்தியாயமும் அமைந்துள்ளது. புக்டே என்னும் இணையதளத்தில் இளமைக்காலத்தில் தான் கண்ட திரைப்படங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் அமைப்பில் இந்திய, உலக சினிமாக்களை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் புரிந்துகொள்ள துணைசெய்யும் விதத்தில் ’பயாஸ்கோப்காரன்’ என்னும் தலைப்பில் மற்றொரு கட்டுரையும் எழுதி வருகிறார். வற்றாத ஊக்கத்துக்கும் உற்சாகமான உரையாடலுக்கும் அடையாளமாக வாழ்ந்து வருபவர் விட்டல்ராவ்.

’வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம்’ என்பது விட்டல்ராவ் எழுதிய முதல் சிறுகதை. அர்ப்பணிப்பு மிக்க ஐம்பத்தைந்து ஆண்டுகால மகத்தான பங்களிப்பின் விளைவாக ‘கலைக்கு ஓர் அர்த்தம்’ என்று சொல்லத்தக்க வகையில் விட்டல்ராவின் கலைவாழ்க்கை வளர்ச்சி பெற்று ஒளிர்கிறது. முத்த படைப்பாளரான விட்டல்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வணக்கங்கள்.

 

(தமிழ் இந்து நாளிதழ் – 12.06.2022)