’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்டிருப்போம். நாமே பல இடங்களில் நம்மை அறியாமல் பழக்கத்தின் காரணமாகச் சொல்லியிருக்கவும் கூடும். ஆனால் உறவு வகைகளிலும் நட்பு வட்டாரங்களிலும் பொதுவாக துயரங்களைப் பகிர்ந்துகொள்கிற அளவுக்கு ஒருவரும் இன்ப நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொள்வதில்லை என்பதுதான் எதார்த்தம். அதற்கு, தன் இன்ப நினைவுகள் பிறருடைய நெஞ்சில் காரணமில்லாத ஏக்கங்களையும் ஏமாற்ற உணர்வுகளையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை கூட ஒருவேளை காரணமாக இருக்கக்கூடும்.