Home

Showing posts with label திண்ணை இணைய இதழ். Show all posts
Showing posts with label திண்ணை இணைய இதழ். Show all posts

Sunday, 25 August 2024

நீதிக்குத் தவித்த நெஞ்சம்

 

நாம் படிக்கும் புத்தகங்கள் பலவிதமானவை. சில புத்தகங்கள் வாழ்வனுபவங்களின் இனிமையான நினைவுகளை முன்வைப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் கரடுமுரடான பக்கங்களையும் அவற்றை வெல்லும்பொருட்டு மானுடன் எடுக்கும் முயற்சிகளையும் சித்தரிப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் புதிர்களை விடுவித்துக்காட்டும். வேறு சில புத்தகங்கள் வரலாற்றின் பின்னணியில் மனிதகுலம் சந்தித்த ஏற்றங்களையும் தாழ்வுகளையும் தொகுத்துக்காட்டி சில மதிப்பீடுகளை வாசகர்கள் மனத்தில் உருவாக்க முயற்சி செய்யும். இன்னும் சில புத்தகங்கள் வாசகர்களை உடனடியாக பதற்றம்கொள்ளச் செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பாத்திரங்களின் வலியையும் வேதனையையும் தாமும் உணர்ந்து துக்கத்தில் ஆழ்த்தும். மீளாத் துயரிலிருந்து மானுடனை மீட்டெடுப்பதற்காக உருவான அரசியல் அமைப்பும் நிர்வாகமும் மற்ற வேறுவேறு துறைகளும் எதிர்மறையான விதத்தில் அதே மானுடனை புழுவினும் கீழாக மதித்து நசுக்கி தான்தோன்றித்தனமான விதத்தில் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதைப் படம்பிடித்துக் காட்டும். பேராசிரியர் டி.வி.ஈச்சரவாரியார் மலையாளத்தில் எழுதி, தமிழில் குளச்சல் மு.யூசுப் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘ இறுதியாகக் குறிப்பிட்ட வகையைச் சார்ந்த புத்தகமாகும்.

ஏணிப்படிகளில் ஒரு பயணம்

  

வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பைத் தேடி சிற்றூரிலிருந்து பெருநகரைநோக்கி வந்த இரண்டு நண்பர்களைப்பற்றிய கதையாக விரிவடைந்திருக்கிறது பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’. தொட்டதும் அல்லது தட்டியதும் திறந்துவிடும் கதவுகளாக வாய்ப்புகள் யாருக்கும் அமைந்துவிடுவதில்லை. தவமாய்த் தவமிருந்து ஒரு கதவின் திறத்தலுக்காக காலம் முழுக்க அலைய வேண்டியிருக்கிறது. செல்லும் இடங்களிலெல்லாம் மூடிய கதவுகளையே கண்டுகண்டு மனம் சலித்துப் போகிறவர்கள் உண்டு. எப்போதோ ஒருமுறை அபூர்வமாகத் திறக்கும் கதவுகள் வேண்டப்பட்ட ஒரு சிலரைமட்டுமே உள்ளே அனுமதித்துக்கொண்டு மீண்டும் மூடிக்கொள்கின்றன. 

உறைதலும் உயிர்ப்பித்தலும்


கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் இயங்கிவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இரா.முருகன். பல சிறுகதைகள்மூலம் இலக்கிய உலகில் ஏற்கனவே அழுத்தமான தடங்களைப் பதித்தவர். கணிப்பொறி உலகைச் சார்ந்தவர். உலகில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி பலவிதமான அனுபவங்களைப் பெற்றவர். இணைய தளங்களில் இவர் பகிர்ந்துகொள்ளும் பலவிதமான அனுபவக்குறிப்புகள் வாசகவரவேற்பைப் பெற்றவை. இவர் ஏற்கனவே எழுதிய “அரசூர் வம்சம்” என்னும் நாவல் இணைய தளத்திலேயே தொடராக வெளிவந்தது. “மூன்று விரல்” நாவலும் இணைய தளமொன்றில் தொடராக இடம்பெற்று இப்போது நூல்வடிவில் பிரசுரமாகியிருக்கிறது.

Wednesday, 15 July 2020

மாற்றமும் மாற்றமின்மையும் - கட்டுரை



நாவலின் தொடக்கத்தில் நாடு சுதந்திரமடைந்த தகவலும் அதற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலின் தகவலும் பாத்திரங்களின் உரையாடல்களின் வழியாக முன்வைக்கப்படுகின்றன. அழகிரிப்பகடை தன் இரண்டுவயது மகளோடும் முதல் மனைவியோடும் துரைச்சாமிபுரத்திலிருந்து மணலு¡த்துக்குக் குடியேறிய காலகட்டம் அது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக் காலம் நகர்ந்து செல்வதை வெவ்வேறு மாற்றங்களின் ஊடாக உணர்த்தி, இறுதியில் தாயைப் பறிகொடுத்துவிட்டு தனிமையில் வந்து நிற்கிற பேரப்பிள்ளை சுடலையை எடுத்து வளர்த்து பள்ளிக்குப் படிக்க அனுப்புகிற காலகட்டத்தோடு படைப்பு நிறைவெய்துகிறது.