Home

Monday, 13 July 2015

கனவுகள் அடர்ந்த காடு - விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’

சினிமா என்பது நல்லதொரு கலைவடிவம் என்றொரு கூற்று உண்டு. மாறாக, அதை ஒரு வணிகம் என்று சொல்லக்கூடிய கூற்றும் உண்டு. தொடர்ந்து நகரும் காட்சிகளை மிகச்செறிவாக ஒருங்கிணைத்து உருவாக்கும் சினிமாவில் ஒளி, ஒலி, நடிப்பு, ஒப்பனை, காட்சி, உரையாடல், மெளனம் என எல்லாவற்றையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி ஒரு படைப்பை உத்வேகத்துடன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. அதனால் அதை கலைவடிவம் என்று சொல்வதே பொருந்தும் என்பது முதல் அணியினரின் நிலைபாடு. ஒரு திரைப்படத்தின் தயாரிப்புக்காக ஏராளமான அளவில் பணத்தைச் செலவுசெய்யவேண்டியிருக்கிறது. ஏராளமாக முதலீடு செய்பவர்கள் ஏராளமாக லாபத்தை எதிர்பார்ப்பது இயற்கையானது. தன் லாபம் பாதிக்காதபடி கலையம்சங்கள் இடம்பெறுவதில் அவர்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஒருபோதும் அது தன் எல்லையைத் தாண்டிவிடக்கூடாது. அடிப்படையில் அது ஒரு வணிகம் மட்டுமே என்பது இரண்டாவது அணியினரின் நிலைபாடு. பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மீண்டும்மீண்டும் தம் நேர்காணல்களில்இது ஒரு வணிகம், இது ஒரு வணிகம்என்று அழுத்தம் கொடுத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்விரண்டு கருத்துகளும் தமிழ்ச்சினிமாவின் தொடக்கத்திலிருந்தே நிலவி வந்திருக்கின்றன. கலையாளுமை மிக்க இயக்குநர்களும் கலைவிருப்பம் கொண்ட தயாரிப்பாளர்களும் ஒன்றிணையும் தருணங்களில் கலையொருமை பொருந்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன. மற்ற தருணங்களில் வணிகநோக்கத்தை நிறைவேற்றுகிற திரைப்படங்களே அதிக அளவில் வெளிவருகின்றன. அவற்றை கலையொருமை குறைந்த படங்கள் என்று சொல்லலாம். தமிழில் முதன்முதலாக 1917-ல் மெளனப்படம் எடுக்கப்பட்டு, 1931 முதல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இன்றளவும் அது வெற்றிகரமாக தொடர்ந்தபடி இருக்கிறது.  தமிழ் சினிமாவின் வரலாறு ஒருவகையில் தமிழ் ரசனையின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவக்கூடும். விட்டல்ராவ் எழுதியிருக்கும்தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்அந்தப் பார்வையைத் தொகுத்துக்கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ள முக்கியமான புத்தகமாகும்.

Tuesday, 30 June 2015

பண்ணும் பாடலும்

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இசைக்கச்சேரிகள் நடைபெறும் ராமநவமி நாட்களையும் அனுமன் ஜெயந்தி நாட்களையும் இசையின்பத்தில் திளைக்கும் நாட்கள் என்றே சொல்லவேண்டும். சில இடங்களில் நுழைவுக்கட்டணம் வசூலிப்பார்கள். சில இடங்களில் இலவசமாகவே அனுமதிப்பார்கள். என்னால் எல்லாக் கச்சேரிகளுக்கும் செல்ல முடிந்ததில்லை. அலுவலகம் முடிந்து மாலை நேரங்களில் மட்டும் கலந்துகொண்டு கேட்பதுதான் வழக்கம். பாடல்களில் மயங்கியிருந்த தருணங்கள் எல்லாமே பொன்னான நேரங்கள். ஏதோ ஒரு கை வந்து நம்மை ஏந்திக்கொள்வதுபோல, ஏதோ ஒரு விரல் நீண்டு மென்மையாகத் தொட்டு வருடுவதுபோல, எங்கோ அந்தரத்தில் பறந்துசெல்வதுபோல, எங்கோ ஒரு கடலில் ஆழத்தை நோக்கி இறங்குவதுபோல ஒவ்வொரு கணத்திலும் அந்த அனுபவம் மாறிக்கொண்டே இருக்கும். சுருதி, சுரம், ராகம், தாளம் என எதுவுமே இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால் பாடும் கலைஞர் ஒரு ராகத்தைத் தொட்டு ஆலாபனை செய்யும்போது மழைச்சாரலில் நனைந்ததுபோல இருக்கும். ஒரு சொல்லை விதவிதமாக ஏற்றி இறக்கி குழைந்து நெளிந்து உச்சரிக்கும்போது உள்ளம் உருகிவிடும். கச்சேரியிலிருந்து திரும்பும்போது என் மனத்துடன் ஒட்டிக்கொண்டு வரும் அந்த இனிய அனுபவத்துக்காகவே மீண்டும் மீண்டும் கச்சேரிகளை நாடிச் சென்றுகொண்டே இருக்கிறேன்.

Thursday, 25 June 2015

கலையைத் தேடி வந்த கௌரவம்

தேசிய அளவில் மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படும் ஞானபீட விருது நம் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தனுக்குத் தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஞானபீட விருதைப் பெற்ற சிவராம காரந்த், தகழி சிவசங்கரன் பிள்ளை, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், மகாஸ்வேதா தேவி, குர் ஆதுலின் ஹைதர், நிர்மல் வர்மா போன்ற மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தனுடைய பெயரும் இடம்பெறுவது தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயமாகும். 

அடித்தட்டு மக்களுடைய வாழ்வியக்கங்களின் சித்திரங்களை எழுத்தில் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவருடைய எழுத்தும் உரையாடலும் விவரணை முறையும் அந்த அழகியல் தன்மைகளைக் கொண்டவையாகவே விளங்குகின்றன. பிச்சைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், ஆண்டிகள், சாமியார்கள், சாப்பாட்டுச்சுமை தூக்கிகள், தள்ளுவண்டிக்காரர்கள், மேஸ்திரிகள், சித்தாள்கள், விடுதிகளில் வேலை செய்பவர்கள், விலைமாதர்கள், நாடகக்காரர்கள், போதையில் திளைப்பவர்கள் என வாழும் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களுடைய வாழ்வியக்கச் சித்திரங்களையே ஜெயகாந்தன் தன் படைப்புகளில் தீட்டி வைத்திருக்கிறார். இவர்கள் வாழும் வேட்கை கொண்டவர்கள். பெரிதும் படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுடைய கருத்தியல்களையும் விழுமியங்களையும் கதைகள் மூலம் கண்டடைய முயற்சி செய்தவர் ஜெயகாந்தன். 

Tuesday, 16 June 2015

மறைந்துபோன வரலாறு

நண்பரொருவருடைய வீட்டில் சில மாதங்களுக்கு முன்பாக திருடு நிகழ்ந்துவிட்டது. அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம். அலங்கோலமாகக் கலைந்து கிடந்தது அவர் வீடு. களவுபோன பொருட்களின் விவரங்களை விசாரித்து பட்டியல் தயாரித்து அப்போதுதான் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள் காவலர்கள். அந்தப் பட்டியலில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் முதல் குழந்தைக்கு பால் கொடுக்க உதவும் ஃபீடிங் பாட்டில்வரை இருந்தது. பெரிய பொருட்கள் களவாடப்பட்டதைக்கூட பொறுமையாகப் படித்த நண்பர்கள் ஃபீடிங் பாட்டில்  பெயரைப் படித்ததும் மனம் குமைந்து பேசினார்கள். “அயோக்கிய நாய்ங்க, அயோக்கிய நாய்ங்கஎன்று ஆத்திரத்துடன் திரும்பத் திரும்பச் சொன்னார் ஒருவர். ”குழந்தைக்கு பால் குடுக்கற பாட்டல்னு கூட நெனச்சிப் பார்க்கலையே அவனுங்க. சரியான மிருகமா இருப்பானுங்க போலஎன்பதையே வேறுவேறு சொற்களில் தம் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டார் இன்னொருவர். திருடுவதற்கு என வந்துவிட்டவனுக்கு அந்த எண்ணமெல்லாம் ஏன் வரப் போகிறது? குழந்தைக்குப் பயனளிப்பது, பெரியவர்களுக்குப் பயனளிப்பது என பிரித்துப்பிரித்துப் பார்த்தா திருடமுடியும்? திருடனுக்கு எல்லாப் பொருட்களும் திருடத்தக்கவையே. அத்தருணத்தில் மனச்சாட்சிக்கு இடமே இல்லை என்று சொன்னேன் நான். “ஆமா, அப்படி திருடித் தின்னறத விட எங்கயாவது போய் சாணிய தின்னுட்டு சாவலாம்என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு காறித் துப்பினார் நண்பர்.

Tuesday, 19 May 2015

என்றென்றும் இருக்கும் ஜெயகாந்தன்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து தினமும் அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் நேரம் மாறிவிடும். ஆண்டு இலக்கை நோக்கி ஓடும் இறுதியோட்டத்தின் விளைவு அது. வழக்கமாக ஏழு அல்லது ஏழரைக்குள் மாறிவிடும். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தொடர்கதை.  வந்ததும் ஒரு குளியல். சிற்றுண்டி. திரும்பிவிடுவேன். இந்த மார்ச் வாரங்களில் அது ஒன்பது அல்லது ஒன்பதரையாக காலையில் படிக்காமல் விட்ட தினசரிகளின் கட்டுரை வாசிப்பு. திரும்பிப் பார்த்தால் சுவர்க்கடிகாரம் பத்தரை அல்லது பதினொன்றைக் காட்டும். ஏப்ரல் பிறந்து நாலைந்து நாட்களில் வழக்கமாக அந்தப் பரபரப்பெல்லாம் அடங்கிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வாரம் கடந்துபோய்விட்ட நிலையிலும் பரபரப்பு ஓயவில்லை. மனத்தில் வேலையைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லை. அப்படி ஒரு ஓட்டம். எட்டாம் தேதியன்றும் தாமதமாகத் திரும்பி, தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகும்போது கடிகாரம் பதினொன்றைக் காட்டியது.
மிதமிஞ்சிய சோர்வில் படுத்த ஐந்து நிமிடங்களுக்குள் உறக்கம் வந்துவிட்டது. உறக்கத்தில் திடீரென கைப்பேசி மணி ஒலித்தது. என் மனைவி எடுத்துப் பேசுவதும் பதில் சொல்வதும் அரைமயக்கத்தில் எங்கோ கனவில் கேட்பதுபோலக் கேட்டது. அவள் என் அருகில் வந்து நின்று, தயங்கி நின்றிருக்கும்போதே நான் என் விழிகளைத் திறந்துஎன்ன?” என்று கேட்டேன். அவள் தயங்கிஎழுத்தாளர் ஜெயகாந்தான் செத்துட்டாராம்என்று சொன்னாள். வேகமாக பதறி எழுந்து உட்கார்ந்தேன்.யாரு பேசனாங்க? என்ன சொன்னாங்க?” என்றேன்.சம்பந்தம் சொன்னாருஎன்று பதில் சொன்னாள். நான் உடனே அவர் எண்ணை அழைத்து விசாரித்தேன். அவருக்கு சென்னை நண்பர்கள் செய்தி அனுப்பியதைச் சொல்லிவிட்டுஉங்களுக்கு தெரியுமான்னு கேக்கறதுக்குத்தான் போன் செஞ்சேன்என்றார்.  ”இல்லை, எனக்குத் தெரியாது. நீங்கதான் மொதமொதல்ல சொல்றிங்கஎன்றேன்.

ஒரு கலைஞனின் கதை - சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’

1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக  நூலகத்தில் உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கவும் படிக்கவும் பகல்நேரத்தைச் செலவிடவேண்டிய நெருக்கடி இருந்ததால் இரவு நேரப் பணியே எனக்கு வசதியாக இருந்தது. திருமணமான குடும்பஸ்தர்கள் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இரவுநேரப் பணிகளை மாற்றிக் கொடுத்து உதவுவார்கள். என்னோடு நசீர் என்கிற நண்பரும் இரவுப்பணிக்கு வருவார்.  அவர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலைப் பட்டத்துக்காக படித்துக்கொண்டிருந்தார். பகலில் கல்லூரி, இரவில் பணி என்பது அவர் வழி. என் தமிழிலக்கிய நாட்டம் அவருக்குப் பிடித்திருந்தது. அவருடைய ஆங்கில இலக்கிய நாட்டம் எனக்கும் பிடித்திருந்தது. நான் எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அவர் தனக்குத் தெரிந்த ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருநாள் சோமர்செட்மாம் எழுதியநிலவும் ஆறு நாணயங்களும்என்கிற நாவலை எடுத்துவந்து, ‘ரொம்ப முக்கியமான நாவல். படிச்சிப் பாருங்கஎன்றார்.பால் காகின்னு ஒரு முக்கியமான ஓவியர் பாரீஸ்ல இருந்தார். வான்காவுடைய நண்பர். அவருடைய வாழ்க்கையை அடிப்படையா வச்சி இத எழுதியிருக்கார்என்று கூடுதல் தகவலையும்

அளித்தார். வான்காவின்  சுயசரிதையானவாழும் விருப்பம்புத்தகத்தை அப்போதுதான் படித்து முடித்திருந்தேன். அதனால் நசீர் கொடுத்த கூடுதல் குறிப்பு, அப்புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. விட்டுவிட்டு, ஒரு வார காலத்தில் அதைப் படித்து முடித்தேன். தரகனாகவும் ஓவியனாகவும் வாழ்கிற ஒரு மனிதன், ஒரு கட்டத்தில் ஓவியனாகமட்டுமே வாழ்வது என்று குடும்பத்தைத் துறந்து வெளியேறி அடையும் வெற்றிகளையும் தோல்விகளையும் அவமானங்களையும் சிரமங்களையும் தொகுத்து முன்வைத்திருந்த அந்தப் படைப்பு என்னை மிகவும் கலங்கவைத்துவிட்டது. கலையைப் பின்தொடர்ந்து செல்லும் கலைஞனுக்கு இப்படி ஒரு சிக்கலான வாழ்வா என்று நினைத்து நிலைகுலைந்திருந்தேன். நசீருடன் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்.உலகம் முழுக்க கலையை வாழவைக்க, கலைஞர்கள் இப்படி வாழ்ந்து வதைபட்டிருக்கிறார்கள்என்று நாக்கைச் சப்புக்கொட்டியபடி சொன்னார் அவர். மேலும், ‘நம் பாரதியார், புதுமைப்பித்தன்னு எழுத்துக்கலைஞர்கள் சந்தித்த வாழ்க்கை நெருக்கடிகள்போல, நெருக்கடிக்கு ஆளான ஓவியக் கலைஞர்கள் உலகம் முழுதும் இருக்கிறார்கள்என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

Tuesday, 12 May 2015

நெஞ்சையள்ளும் குருவாசகக்கோவை

வழக்கமாக நடைப்பயிற்சிக்கு நான் செல்லும் பூங்காவுக்கு அருகில் பழைய செய்தித்தாட்களையும் புத்தகங்களையும் வாங்கி விற்கக்கூடிய கடையொன்று உள்ளது. அதை நடத்தி வருபவர் ஒரு கன்னடியர். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அகராதியை மலிவான விலைக்கு அவர் எனக்குக் கொடுத்தார். அன்றுமுதல் எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் உருவாகிவிட்டது.  
போன வாரம் ஞாயிறு அன்று மாலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு சிறிது நேரம் அவருடைய கடைக்குச் சென்று  வழக்கம்போல உரையாடிகொண்டிருந்தேன். அவர் எடைக்கு வாங்கிய புத்தகங்களின் குவியல் கடைவாசலில் இருந்தது. அதை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துவிட்டு பக்கத்திலேயே அடுக்கி வைத்தபடி இருந்தேன். எல்லாமே கன்னட, தெலுங்கு புத்தகங்கள். சில தமிழ், வங்கமொழிப் புத்தகங்களும் இருந்தன. தன் மேசையில் இருந்த புத்தக அடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை இழுத்து, “இந்தாங்க, இத பாருங்க. தமிழ் புஸ்தகம்தான். ஒங்களுக்குப் புடிக்குமேன்னு எடுத்து வச்சேன்என்றபடி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார் அவர்.