"பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம்" என அரையும் குறையுமாகத் தெரியும் எழுத்துகளைக் கொண்ட நிறம் மங்கிய ஒரு பலகையைத் தாங்கிய இரண்டு கம்பங்கள்தான் அந்த இடத்தில் முதலில் இருந்தன. இருநூறடி நீளமும் நூறடி அகலமும் கொண்ட அந்த இடம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காததற்கு மூன்று காரணங்கள் உண்டு. அந்த வட்டாரத்துக் கழிவுகளையெல்லாம்
தினந்தினமும் வாகனங்கள் கொண்டுவந்து அந்த இடத்தின் மூலையிலேயே கொட்டிக்கொண்டிருந்தன என்பது முதல் காரணம். அதனால் எழும் துர்நாற்றம் யாரையும் அந்தப் பகுதியையே நெருங்கிச் செல்ல முடியாத ஒன்றாக மாற்றிக்கொண்டிருந்தது. பார்க்கும் இடங்களிலெல்லாம் முட்புதர்களாக அடர்ந்துகிடந்ததும் அதனாலேயே வழிப்போக்கர்களும் மற்றவர்களும் அந்த இடத்தைக் கழிப்பிடமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்ததும் இரண்டாவது காரணம். சின்னஞ்சிறு பிள்ளைகள் விளையாடிக் களிக்க ஏற்றதாக ஊஞ்சல்களும் சறுக்குமரங்களும்
நடையாளர்களுக்கு வசதியாக நிழலடர் ந்த சூழலில் கல் பரப்பப்பட்ட வட்டப்பாதையும்
கொண்ட இரண்டு பூங்காக்கள் அருகிலேயே மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டுவந்தது மூன்றாவது காரணம்.
Friday, 27 November 2015
Thursday, 19 November 2015
பச்சை நிறத்தில் ஒரு பறவை - கட்டுரை
எங்கள் அலுவலக வளாகத்தையொட்டி இருக்கும் பள்ளி விளையாட்டு மைதானம் அளவில் மிகப்பெரியது. ஒருபக்கம் சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடுவார்கள்.
இன்னொரு பக்கத்தில் பெண்களின் பந்துவிளையாட்டு
நடக்கும். வேறொரு மூலையில் வலையைக் கட்டி சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிப் பழகுவார்கள். இன்னொரு மூலையில் உடற்பயிற்சி ஆசிரியரின் வழிகாட்டலின்படி
சிறுவர்கள் கூடைப்பந்து பழகுவார்கள். எந்த நேரத்தில் போய் நின்றாலும் ஏதாவது ஒரு கூட்டம் ஆடியபடியே இருக்கும். மனச்சுமைகளையெல்லாம் மறந்துவிட்டு சிறிதுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு
வரலாம். சிறிய பிள்ளைகள் ஆடுவதையும் ஓடுவதையும் துள்ளுவதையும் கைகொட்டிச் சிரிப்பதையும் பார்த்தபடி நின்றிருந்தாலேயே
போதும். ஒரு மலரைப்போல மனம் தானாக மலரத் தொடங்கிவிடும். ஒரு கணமாவது நம் குழந்தைப்பருவம் நினைவைக் கடந்துபோகும்.
வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்
இந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் நாளன்று சஹகார் நகரில் நண்பர் மகாலிங்கம் ஒற்றை அறையைக் கொண்ட ஒரு புதிய வீட்டைக் கட்டி அதற்கு புதுமனை புகுவிழா நடத்தினார். அது ஒரு வேலை நாள். விடுப்பெடுக்கமுடியாதபடி வேலைகளின் அழுத்தம் இருந்தது. நானும் என் மனைவி அமுதாவும் காலையிலேயே சென்றிருந்தோம்.
முகம்மது அலி, சம்பந்தம், அழகர்சாமி என பல நண்பர்கள் வந்திருந்தார்கள்.
வெங்கட் சாமிநாதன் வருவதாகச் சொல்லியிருந்தார்.
இன்னும் வந்து சேரவில்லை. பார்த்துவிட்டுச்
செல்லலாம் என்பதற்காக நான் காத்திருந்தேன்.
ஒரு சின்ன அலுவலகம் இயங்குவதற்குப்
போதுமான அளவுக்கு மகாலிங்கம் அந்த வீட்டை வடிவமைத்திருந்தார். எஞ்சிய நிலப்பகுதியில்
பலவகையான கீரைப்பாத்திகள்.
பூச்செடிகள். தக்காளி, மிளகாய், வெண்டைச்செடிகள்
வைக்கப்பட்டிருந்தன. மதிலோரம் சின்ன முருங்கை மரம் வைத்திருந்தார்.
தோட்டத்தில் நண்பர்களை நிற்கவைத்து விதவிதமாக படங்களை எடுத்தபடி பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தேன். காலை நேரத்து இளவெயில் படம்பிடிக்க வசதியாக இருந்தது. நேரம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. அவர் வரவில்லை. அங்கிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் எங்கள் அலுவலகம் இருந்தது. பன்னிரண்டு மணிக்குள் வந்துவிடுவேன் என்று அலுவலகத்தில் சொல்லிவைத்திருந்ததால்,
அதற்கும் மேல் காத்திருக்க முடியாமல் என் மனைவியை மட்டும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு நான் கிளம்பிவிட்டேன்.
மாலைவரைக்கும் விழாவில் அவள் பங்கெடுத்துவிட்டு, அதற்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பினாள்.
Labels:
அஞ்சலி,
கட்டுரை,
வெங்கட் சாமிநாதன்
Thursday, 29 October 2015
தாமரை இலையின் தத்துவம் - கட்டுரை
கடந்த ஆகஸ்டு மாதத்தோடு நான் வேலைக்கு வந்து இருபத்தியேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்கத்தில் புதுச்சேரியில் ஓராண்டையும் பிறகு ஆந்திரத்தில் இரண்டு ஆண்டுகளையும் அதைத் தொடர்ந்து இருபத்திநான்கு ஆண்டுகளைக் கர்நாடகத்திலும் கழித்திருக்கிறேன்.
இந்த இடைவெளியில் பல ஊர்களில் பலவிதமான அதிகாரிகளிடம் வேலைபார்த்த அனுபவமுண்டு. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. சில அனுபவங்கள் மேன்மையானவை. சில அனுபவங்கள் மறக்கமுடியாத வடுக்களையும் வலியையும் தந்தவை. இன்னும் சிற்சில அனுபவங்கள் கசப்பையே பரிசாக வழங்கியவை. எழுதத் தொடங்கினால் ஒவ்வொன்றையும் ஒரு கதையாகச் சொல்லலாம்.
நெஞ்சை நிரப்பிய பாடல்கள் - கட்டுரை
ஜெய்ப்பூரிலிருந்து தொடர்வண்டியில்
திரும்பிக்கொண்டிருந்தேன். ஐந்து நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்த ராஜஸ்தானத்தின்
இடங்களனைத்தும் சின்னச்சின்னக்
காட்சிகளாக மனத்துக்குள் நகரத் தொடங்கின. அரண்மனைகள், இடிந்த கோட்டைகள், பசுமை அடர்ந்த மலைச்சிகரங்கள், ஏரிகள், சமண ஆலயங்கள், பாலைவனம் என அனைத்துமே பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களாக மனத்தில் பதிந்துகிடந்தன. அடுத்தடுத்து மலைச்சிகரத்தையும் பாலைவனத்தையும்
பார்த்த அனுபவம் ஒரு கனவுக்காட்சியைப்போல இருந்தது. சிகரத்தை நினைத்தபோது அதன்மீது நெளிந்தலையும் துண்டுத்துண்டு
வெண்மேகங்களும் அவற்றையொட்டிப்
பரவி நீண்டு விரிவடையும் நீலவானமும் அவற்றின் ஆழமான பின்னணியும் மிதந்துவந்தன. பாலைவனத்தை நினைத்தபோது மஞ்சளும் வெண்மையும் கலந்த மினுமினுப்பான நீண்ட மணற்பரப்பும் எங்கெங்கும் படர்ந்திருக்கும் வெறுமையும் மிதந்துவந்தன. ஆழமான வானமும் வெறுமையான மணற்பரப்பும் ஒரேவிதமான பரவசத்தையும் பீதியையும் ஒருங்கே ஊட்டுவதை அக்கணத்திலும் என்னால் உணரமுடிந்தது. என்னவென்று சொற்களால் வடிக்கமுடியாத ஒருவித வலியும் நெகிழ்ச்சியும் வேதனையும் கவிந்தன. கண்களை மூடியபடி வெகுநேரம் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
Tuesday, 13 October 2015
சந்திப்பு
பழைய சென்னைச்சாலை என்பது அல்சூர் எரியிலிருந்து தொடங்குகிறது. அதன் வெவ்வேறு இடங்களிலிருந்து கிளைப்பாதைகள் நீண்டு ஆதர்ஷா திரையரங்கின் முன்னால் சந்தித்துக்கொள்ளும். அந்தப் பாதைகளுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தால் ஏறத்தாழ ஒரு முக்கோணத்தைப்போல இருக்கும். சென்னைச்சாலையிலிருந்து நினைத்த பாதையில் வாகனங்கள் பிரிந்து நினைத்த திசையில் பறந்துபோகும். சாலைப்போக்குவரத்தைப் பொறுத்தமட்டில்
வசதிகள் அதிகமாக உள்ள இடம்தான் நாளடைவில் நெரிசலில் பிதுங்கிக் குழம்பித் தடுமாறும் இடமாக மாறும் என்ற எழுதாத விதிக்கு ஆதர்ஷா சாலைகளும் ஒருநாள் பலியாகின. உடனடியாக அக்கிளைப் பாதைகள் ஒருவழிப்பாதையாக
அறிவிக்கப்பட்டன.
Labels:
Paavannan,
short story,
சந்திப்பு,
சிறுகதை
சாவை வென்ற வீரர்
பெங்களூரின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று விமானநிலைய வீதியில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனை. எட்டுமாடிக் கட்டிடம். எல்லா நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள இடம். அதன் அவசர சிகிச்சைப் பிரிவின்முன் எப்போதும் ஐம்பது பேராவது கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ரத்த தானத்துக்காக மூன்றுமுறைகளும்
நோய்வாய்ப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பதற்காக சில முறைகளும் அங்கு சென்றதுண்டு. தற்செயலாக பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்த ஒரு தருணத்தில் நீண்ட விரிப்புகளையும்
மெத்தென்ற இருக்கைகளையும்
கொண்ட பெரிய கூடமொன்றைப் பார்த்தேன். சுவர்களில் ஆறேழு ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. பழைய காலத்துச் சிகிச்சை முறைகளைச் சித்தரிக்கும் காட்சிகள். எல்லாமே அறுவை மருத்துவம் தொடர்பானவை. மயக்கமருந்தே இல்லாமல் நடக்கும் அறுவை சிகிச்சைகள் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஒரு பல்லை எடுப்பதற்குக்கூட மயக்கமருந்து கொடுத்துவிட்டு சிகிச்சை செய்கிற காலம் இன்று. புதுமையின் விளிம்பில் நின்றுகொண்டு அந்தக் காலத்தை என்னால் கற்பனைகூட செய்துபார்க்க இயலவில்லை.
Labels:
கட்டுரை,
சாவை வென்ற வீரர்
Subscribe to:
Posts (Atom)