சமீபத்தில் கி.ராஜநாராயணனின் மறைவையொட்டி அவருடைய சிறுகதைகளை ஒருசேர மீண்டும் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் கூட சலிக்காத வகையில் கதைகள் அனைத்துமே கட்டுக்கோப்பாக இருந்தன. தாத்தையா நாயக்கர், அண்ணாரப்பக்கவுண்டர், மொட்டையக்கவுண்டர், பாவய்யா, கோமதி செட்டியார், கோனேரி, பேச்சி, பூமாரி என வகைவகையான மனிதர்களைப்பற்றிய கதைகளைப் படிக்கப்படிக்க ஆச்சரியமாகவே இருந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளில், ஒரு பத்து முறையாவது இக்கதைகளை வெவ்வேறு தருணங்களில் படித்திருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுசாகப் பார்ப்பதுபோலவே இருப்பதை உணர்கிறேன். நவீன சிறுகதைகளில் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் பிறழுறவு, துரோகம், வஞ்சம், வன்மம், இருள் ஆகியவற்றைப் படித்ததால் அடைந்த சலிப்பை அந்த மீள்வாசிப்பு முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டது. அந்த மானுடச் சித்திரங்களால் அன்று மனம் நிறைந்துவிட்டது.