Home

Monday, 19 July 2021

வெளிச்சத்தைத் தேடும் ஆவல் - கட்டுரை

  

சமீபத்தில் கி.ராஜநாராயணனின் மறைவையொட்டி அவருடைய சிறுகதைகளை ஒருசேர மீண்டும் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் கூட சலிக்காத வகையில் கதைகள் அனைத்துமே கட்டுக்கோப்பாக இருந்தன. தாத்தையா நாயக்கர், அண்ணாரப்பக்கவுண்டர், மொட்டையக்கவுண்டர், பாவய்யா, கோமதி செட்டியார், கோனேரி, பேச்சி, பூமாரி என வகைவகையான மனிதர்களைப்பற்றிய கதைகளைப் படிக்கப்படிக்க ஆச்சரியமாகவே இருந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளில், ஒரு பத்து முறையாவது இக்கதைகளை வெவ்வேறு தருணங்களில் படித்திருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுசாகப் பார்ப்பதுபோலவே இருப்பதை உணர்கிறேன். நவீன சிறுகதைகளில் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் பிறழுறவு, துரோகம், வஞ்சம், வன்மம், இருள் ஆகியவற்றைப் படித்ததால் அடைந்த சலிப்பை அந்த மீள்வாசிப்பு முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டது. அந்த மானுடச் சித்திரங்களால் அன்று மனம் நிறைந்துவிட்டது.

Monday, 12 July 2021

திருநீறு பூசிய முகம் - கட்டுரை

 

இரண்டு ஊர்களுக்கிடையிலான கேபிள் பாதையை நாம் நினைத்த நேரத்தில் தொடங்கிவிட முடியாது. அதற்கு முன்பு செய்துமுடிக்க வேண்டிய சில வேலைகள் உண்டு. பெரும்பாலும் சாலையை ஒட்டியே கேபிள் பாதை அமைவதால், சாலைத்துறையினரை அணுகி வேலையைத் தொடங்குவதற்குரிய அனுமதியைப் பெறவேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, கிராம பஞ்சாயத்து நிர்வாகம் என பல்வேறு வகையான நிர்வாகங்களின் கீழ் சாலை பிரிந்திருக்கும். ஒவ்வொரு நிர்வாகத்தின் எல்லைக்குள் அடங்கிய பாதையின் நீள விவரங்கள் அடங்கிய குறிப்புகளோடு அவர்களை அணுகினால் மட்டுமே அதைப் பெறமுடியும். அதற்குப் பிறகு  வாகனங்களின் தினசரி இயக்கத்துக்கு இசைவாக எரிபொருளை கடனுக்கு வழங்கும் நிலையத்தை முடிவு செய்யவேண்டும். எல்லாவற்றையும் விட பள்ளம் தோண்டுவதற்குத் தேவையான ஊழியர்களைத் திரட்டுவது முக்கியமான வேலை.

செல்வராஜ் : சிறுகதைகளின் ரசிகர்

  

திண்ணை இணைய இதழில் 2002-2003 காலகட்டத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்றொரு தொடரை எழுதிவந்தேன். மொத்தம் நூறு அத்தியாயங்கள். நூறு இதழ்களில் அவை தொடராக வெளிவந்தன. தொடரின் முதல் நாலைந்து அத்தியாயங்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே என்னோடு மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டு ஒரு வாசகர் பாராட்டி எழுதினார். அவர் நண்பர் செல்வராஜ். அவருடைய சொந்த ஊர் சிதம்பரம்.

சித்தலிங்கையா : நட்பார்ந்த கைகளும் புன்னகையும்

 

1982இல் கர்நாடகத்தில் ஹொஸபேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்கு காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்திவந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்கிய நாலைந்து நாட்களிலேயே எனக்கு நண்பராகிவிட்டார். அவருக்கு நாடகங்கள் மீது தணியாத ஆர்வமிருந்தது.  ஒருநாள் நான் முன்வரிசையில் இருந்த ஒரு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பின்வரிசை மேசையைச் சுற்றி ஆறேழு இளைஞர்கள் உட்கார்ந்துகொண்டு ஒரு பாட்டின் வரிகளை ஒருமித்த குரலில் பாடிப்பாடி பயிற்சி செய்தார்கள். எல்லோருமே குருஷாந்தப்பாவின் நண்பர்கள்.

Sunday, 4 July 2021

எழுதாத வரலாறு - சர்வோதயத் தொண்டர் க.மு.நடராஜனுக்கு அஞ்சலி


2018ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அதற்குப் பிறகு, அதுவரை படிக்காமல் வைத்திருந்த புத்தகங்களையெல்லாம் எடுத்துவைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினேன்.  அந்த வரிசையில் லா.சு.ரங்கராஜனை தொகுப்பாசிரியராகக் கொண்டு மகாத்மா காந்தி படைப்புகள் என்ற பொதுத்தலைப்பில்  வெளிவந்திருந்த ஐந்து தொகுதிகளைப் படித்துமுடித்தேன். காந்தியடிகள் என்னும் மகத்தான ஆளுமையைப் பற்றிய சித்திரங்கள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. அவற்றின் வழியாக இந்திய சுதந்திரப் போராட்டக்  காட்சிகளை  என்னால் காணமுடிந்தது. அதன் விளைவாக அவ்வப்போது ஒருசில கட்டுரைகளை எழுதினேன்.

ஒரு பழைய நாவலும் ஒரு புதிய நாவலும் - கட்டுரை

 

ஆர்.ஷண்முகசுந்தரம் என்னும் நாவலாசிரியர் 1960இல் எழுதி வெளிவந்த நாவல் அறுவடை. கீரனூர் வட்டாரத்தில் பெரிய பண்ணையாராக இருக்கும் சின்னப்ப முதலியாரின் கதைதான் நாவலின் உள்ளடக்கம். பண்ணையார் நல்ல ஊக்கமுள்ள உழைப்பாளி. தொடங்கும் ஒவ்வொரு செயலையும் வெற்றிகரமாக முடிக்கும் வேகம் நிறைந்தவர். சாதாரணமான வேலங்காட்டை மிகக்குறைச்சலான  விலைக்கு வாங்கி கிணறு வெட்டி பாசனம் செய்து நான்கே ஆண்டுகளில் பூவும் பிஞ்சுகளும் காய்களுமாக காய்த்துக் குலுங்கும் பருத்தித் தோட்டமாக மாற்றிக்காட்டும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அந்த உழைப்பாளி அடையாளம் அவருடைய ஒரு பக்கம் மட்டுமே. மற்றொரு பக்கத்தில்  அவர் பெண்சபலம் நிறைந்தவர். தன் ஒரு பக்க வெற்றியால் இன்னொரு பக்க கேவலங்களைப் பொருட்படுத்தாமல் தன் போக்கில் வாழ்கிறார் அவர்.

சித்தலிங்கையா : நினைவில் நிலைத்திருக்கும் ஆளுமை

 

11.06.2021 அன்று தமிழுலகம் நன்கறிந்த கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா தன் அறுபத்தேழாவது வயதில் தீநுண்மி தொற்றின் காரணமாக இயற்கையெய்தினார். அரசு மரியாதையோடு அவருடைய இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. அவருடைய மறைவையொட்டி இந்தியப் பிரதமர், கர்நாடகத்தின் முதல்வர், அமைச்சர்கள், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலித் அமைப்பினர், சமூக ஆய்வாளர்கள், பல்வேறு கட்சியினர் என அனைவருமே இரங்கல் செய்தி விடுத்தனர்.