Home

Sunday, 19 September 2021

ஜி.இராமச்சந்திரன்: இலட்சியப்பறவை


1920இல் நாகர் கோவிலில் ஸ்காட் கிறித்துவ உயர்நிலைப்பள்ளியில் படித்துவந்த பதினாறு வயது நிரம்பிய ஒரு மாணவருக்கு பள்ளிக்கூட நூல்களுக்கு அப்பால் யங் இந்தியா பத்திரிகையைப் படிக்கும் பழக்கம் இருந்தது. அதில் தீண்டாமையை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தைப்பற்றி காந்தியடிகள் எழுதும் கட்டுரைக்குறிப்புகளை அந்த மாணவர் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்துவந்தார். திருவனந்தபுரத்தில் தேசியக்கல்வியைப் புகட்டும் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்த அம்மாணவருடைய மாமாவான மார்த்தாண்டன் தம்பியின் நெருக்கத்தால் தீண்டாமை என்னும் சமூகத்தீமையைப்பற்றி ஏற்கனவே அவர் கொண்டிருந்த எண்ணம் காந்தியடிகளின் கட்டுரையைப் படித்ததைத் தொடர்ந்து ஆழமாக வேரூன்றியது.

ஜெயப்பிரகாஷ் நாராயண் : நம்பிக்கையின் சின்னம்

     13.04.1919 அன்று ஜாலியன்வாலாபாக் என்னும் இடத்தில் கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை காரணமின்றி சுட்டுவீழ்த்திய ஜெனரல் மைக்கேல் டயர் என்னும் ஆங்கில அதிகாரி தண்டிக்கப்படவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை எழுப்பியது. ஆனால் பெயரளவில் மட்டும் கண்துடைப்பாக ஒரு விசாரணையை நிகழ்த்திய அரசு 1920இல் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் டயரை விடுவித்துவிட்டது. இதையொட்டி 1920இல் செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாடு அந்த விடுதலையை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தது. தொடர்ந்து நாடு சுயராஜ்ஜியம் அடைந்தால் மட்டுமே   எதிர்காலத்தில் இத்தகு குற்றங்கள் மீண்டும் நிகழாதவகையில் தடுக்கமுடியும் என்றும் நாட்டின் கெளரவத்தை நிலைநாட்டமுடியும் என்றும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார் காந்தியடிகள்.

Sunday, 12 September 2021

பேறு பெற்ற இலைகள் - புத்தக அறிமுகம்

 

     கேட்டுக்கேட்டுப் பழகிய கைவிடப்பட்டவர்களின் குரலாகவோ, ஏமாந்தவர்களின் குமுறலாகவோ, சீற்றம் கொண்டவர்களின் அறைகூவலாகவோ, சாபமாகவோ, அழுகையாகவோ இல்லாத ஒரு புத்தம்புதிய குரலாக இருக்கிறது,   விஜயானந்தலட்சுமியின் கவிதைக்குரல். அது உடன்பாட்டு வெயில்தொகுதியெங்கும் குயிலோசையென சீராக ஒலித்தபடி இருக்கிறது. அந்தக் குரல்  வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களில் கண்ட காட்சிகளை முன்வைக்கிறது. தான் அடைந்த பரவசத்தைப் பகிர்ந்துகொள்கிறது. தனக்குள் எழும் பெருமூச்சையும் கேள்விகளையும் முன்வைக்கிறது. குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் கூட எடுத்துரைக்கிறது. கச்சிதமான கவிமொழியில் அனைத்தையும் நவீனவாழ்வின் தரிசனங்களாகவும் சாரமாகவும் உருமாற்றிக் காட்டுகிறது. அதுவே விஜயானந்தலட்சுமியின் முதன்மைச்சிறப்பு. சங்கச்செய்யுளின் சாயலில் மிக எளிமையான அழகுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் விஜயானந்தலட்சுமியின் தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் தேடலையும் பார்க்கமுடிகிறது. நவீன தமிழ்க்கவிதையுலகில்  சிறப்பானதோர் இடம் விஜயானந்தலட்சுமிக்காகக் காத்திருக்கிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

சித்தலிங்கையாவுக்கு அஞ்சலி

 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழிலக்கியச் சூழலில் தலித் இலக்கியச் செயல்பாடுகள் தீவிரமடையத் தொடங்கின. அதைப்பற்றிய உரையாடல்கள் எல்லா இடங்களிலும் நிகழ்ந்தன. 1991இல் கோமல் சுவாமிநாதனைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான சுபமங்களா பல எழுத்தாளர்களுடைய விரிவான நேர்காணல்களைப் பிரசுரித்தது. எழுத்தாளர்களை ஒரு கருத்தியல் தரப்பாக தமிழ்ச்சூழலில் அந்த நேர்காணல்கள் முன்னிறுத்தின. வாசிப்புப்பழக்கம், எழுத்துக்கான களத்தேர்வு, மொழியின் பயன்பாடு, இளமைக்கால வாழ்க்கை, பிடித்த படைப்புகள், பிடித்த ஆளுமைகள் சார்ந்து ஒவ்வொரு எழுத்தாளரிடமும் கேட்கப்பட்ட கேள்விப்பட்டியல் வெவ்வேறு விதமாக இருந்தாலும் தலித் இலக்கியம் பற்றிய ஒரு கேள்வி மட்டும் அந்த நேர்காணல்களில் பொதுவாக இருந்தது. தலித் இலக்கியம் பற்றிய எழுத்தாளர்களின் எண்ணங்களைத் தொகுத்தளிப்பதன் வழியாக அதைப்பற்றிய வரையறையை செழுமைப்படுத்த முடியும் என்று கோமல் நம்பினார். மராட்டிய மொழியில் தலித் இலக்கியம், கன்னட மொழியில் தலித் இலக்கியம் போன்ற கட்டுரைகளை, அம்மொழியுடன் தொடர்புடைய  நண்பர்கள் வழியாகப் பெற்று அவ்வப்போது சுபமங்களாவில் வெளியிட்டார். நாளடைவில் இலக்கியச் சந்திப்புகளில் தலித் இலக்கியம் பற்றிய உரையாடல் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியது.

Thursday, 2 September 2021

திரை - சிறுகதை

 சூரியன் மறைந்து சரியத் தொடங்கிய வேளையில் காலணிகள் அழுத்தமாகப் பதிந்து நெருங்கி வரும் ஓசை கேட்டது. தலையைத் திருப்பி ஓசை வந்த திசையில் பார்க்க முயன்றான் துரியோதனன். பிடறி நரம்புகள் முறுக்கிக் கொண்டதில் வலி தாளாமல் உதட்டைக் கடித்தான். அதற்குள் நெருங்கி வந்துவிட்ட அஸ்வத்தாமன் அவன் தோள்களைப் பற்றினான். வலியில் சரிந்த துரியோதனனின் கண்களைச் சில கணங்களுக்கு மேல் பார்க்க இயலாமல் பதற்றத்துடன் துரியோதனாஎன்றபடி தரையில் உட்கார்ந்தான். புன்னகையுடன் நீ பிழைத்திருக்கிறாயா அஸ்வத்தாமா?” என்று கேட்டான் துரியோதனன்.

 

பிரிவு - சிறுகதை


சுகர் தன்னைவிட்டுப் பிரிவது உறுதி என்று புலப்படத் தொடங்கியதும் மனம் நொறுங்கிய வியாசர் கொழுகொம்பற்ற கொடிபோலத் துவண்டு சரஸ்வதி நதிக்கரையில் உட்கார்ந்திருந்தார். அவர் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கெங்கும் கவிந்திருந்த இருள் மட்டும்தான். நதிக்கு மறுபுறம் மலைச்சிகரமொன்று நின்றிருந்தது. வாழைப்பூமொக்கு போன்ற அதன் உச்சியின் பின்புறத்திலிருந்து நிலா ஊர்ந்து வரத் தொடங்கியது. அதற்கு முந்தைய தருணம் வரைக்கும் சிகரத்தின் மடியிலும் தோளிலும் விளையாடிய நிலா அது. இப்போது சிகரத்தைத் துறந்து மேகவெளியில் உருளத் தொடங்கியது. வியாசருக்கு மறுபடியும் சுகரின் ஞாபகம் வந்தது. அவனும் பிரிந்துவிட்டால் இந்தப் பரந்த உலகில் தான் மட்டும் தனிமையில் வீசப்பட்டுவிடுவோம் என்ற பிரமை எழுந்தது. சுகரைப்பற்றி இனி நினைக்கக்கூடாது என்று அந்நொடி முடிவு செய்தார் வியாசர். மறுநொடியே சுகரின் முகம், சுகரின் சிரிப்பு, சுகரின் பிஞ்சுக் கை, சுகரின் ஒளிவீசும் கண்கள் என அடுத்தடுத்து எல்லாமே மனத்தில் விரிந்தன. அவனைப்பற்றிய நினைவுகள் அவரைப் பாடாய்ப்படுத்தின. அவன் நாளை தன்னுடன் இருக்கமாட்டான். தன்னிடமிருந்து விலகி நெடுந்தூரம் சென்று விடுவான் என்கிற ஒரு குரல் சதாநேரமும் ஒலித்தபடி இருந்தது. அக்குரலை மறுத்து அவனை எப்படியும் தடுத்துவிடலாம் என்று அவர் மனம் நம்பியது. இது எல்லாம் கனவு. அவன் பிரியப் போவதும் இல்லை. நான் கெஞ்சப் போவதும் இல்லை என்றெல்லாம் இருந்தால் எவ்வளவு நல்லது என்று நினைத்துப் பார்த்தார் வியாசர்.

Saturday, 28 August 2021

இயற்கையும் மனிதனும் – தங்கப்பாவின் தமிழாக்கப் பாடல்கள்

 

 எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம் படைப்பு முயற்சிகளோடு கூடவே தமக்குப் பிடித்த படைப்புகளைப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். தமிழில் பாரதியார் முதல் புதுமைப்பித்தன் வரை இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டவர்களே. நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தம் வாழ்வனுபவத்தைக் கலையுணர்வோடு மரபுக்கவிதை வடிவில் முன்வைத்துவரும் ம.இலெ.தங்கப்பா தம் இளமைக்காலம் முதல் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கவிதைகள் கனவுகள் என்கிற பெயரில் வெளியாகியுள்ளன.