மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை
வளவ.துரையனுடன் ஒருநேர்காணல்
( வளவ. துரையன் என்கிற புனைபெயரில் எழுதும் அ.ப. சுப்பிரமணியனின் சொந்த ஊர் வளவனூர். வளவனூரை விரும்பி தன் பெயருடன் இணைத்துக்கொண்ட இவரால் தொடர்ந்து வளவனூரில் தங்கியிருக்கமுடியவில்லை. கிருஷ்ணாபுரம் பள்ளியில் ஆசிரியராக இருந்ததால் போக்குவரத்துக்கு வசதியாக கடலூரில் வசிக்கத் தொடங்கி, பணி ஓய்வுக்குப் பிறகும் அவர் வாழ்க்கை கடலூர் முகவரியோடு தொடர்கிறது. கடுமையான நிதிச்சிக்கலைச் சமாளித்து ’சங்கு’ என்கிற பெயரில் ஒரு சிற்றிதழை நடத்தி வருகிறார்.
தொடக்கக்காலத்தில் மரபுக்கவிஞராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும்
இருந்து, நவீன இலக்கிய வாசிப்புக்குப் பிறகு சிறுகதைகளை எழுதத் தொடங்கி நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இரண்டு நாவல்களும் ஒரு மரபுக்கவிதைத்தொகுதியும் வெளிவந்துள்ளன.
இலக்கியப்பேரவை என்கிற பெயரில் ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். மாதம் ஓர் இலக்கியக்கூட்டம் நடத்தி வருகிறார். பயணங்களில் ஆர்வம் உள்ளவர். கடலூரில் உள்ள பல நண்பர்களை ஒருங்கிணைத்து
சில ஆண்டுகளுக்கு
முன்பாக பசுபதிநாத் வரைக்கும் சென்று வந்தார். தன் பயண அனுபவங்களை ஒரு சிறிய நூலாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இலக்கியமும்,
இவருடைய இனிய பழகும் முறையும் கடலூரில் ஒரு பெரிய நட்புவட்டத்தைச்
சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். இளம்வயதில் அண்ணன் என்று அன்போடு அழைத்து இவரோடு இலக்கியம் பேசிய நினைவுகள் இன்னும் என் மனத்தில் நிழலாடுகின்றன. இவருடைய துணைவியார் அலர்மேல்மங்கை. ஓய்வுபெற்ற ஆசிரியை. இவருடைய பிள்ளைகள் அல்லி, முகிலன், எழிலன். மூவரும் திருமணம் முடித்து வெவ்வேறு ஊர்களில் குடியிருக்கிறார்கள். )
கேள்வி:
உங்கள் மாணவப்
பருவ வாழ்வில்
இலக்கியத்துக்கான இடம்
எப்படி உருவானது ?
இலக்கியத்தின்பால் உங்கள்
கவனத்தைத் திசை
திருப்பிய சம்பவம்
அல்லது மனிதர்கள்
பற்றிச் சொல்ல
முடியுமா?
பதில்: நான் படித்த ஜார்ஜ் நடுநிலைப் பள்ளியில் [ இன்றைய கோவிந்தையர் பள்ளியில் ] வாரந்தோறும்
இலக்கிய மன்றம் நடைபெறுவதுண்டு. அதில் தவறாமல் நான் பேசுவேன். நான் அம்மன்றத்தில் செயலாளராக இருந்திருக்கிறேன். எனவே மேடைப்பேச்சு
இயல்பாகவே வந்தது. அது மட்டுமில்லாமல் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு கையெழுத்திதழைத் தொடங்கி நடத்திய அனுபவமும் இருந்தது. நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்குப் படிக்க வந்தபிறகு மாவட்டக் கல்வி அலுவலர் கலந்து கொல்ளும் விழாவில் என்னை இலக்கியத் தலைப்பில் மனப்பாடம் செய்து பேசச் சொன்னார்கள். இலக்கிய ஆர்வத்திற்கு
முதல் காரணமாக எங்கள் எட்டாம் வகுப்புக்குத்
தமிழாசிரியராக இருந்த புலவர் தா.மு. கிருஷ்ணனைச் சொல்லவேண்டும். பள்ளிப் படிப்பு முடிந்த பின் இலக்கிய ஆர்வத்தை வளர்த்த வகையில் எங்கள் ஊரைச் சேர்ந்த இராசாராமனுக்கும் அவர் நடத்திய திருக்குறட் கழகத்துக்கும்
பெரிய அளவில் பங்குண்டு.
கேள்வி:
நடுத்தட்டினர் அனைவரையும்
ஈர்த்த அறுபதுகளின்
அரசியல் ஈடுபாடு
உங்கள் வாழ்வில்
எவ்விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது?
அன்றைய திராவிட
இயக்கங்களைப் பற்றி
உங்கள் மனப்பதிவு
எப்படி இருந்தது?
பதில்: அறுபதுகளில் இறுதி மூன்றாண்டுகள்
நான் வேலையேதுமின்றித்
திரிந்துகொண்டிருந்தேன். அப்போது நெருங்கிய நண்பர்களாக இருந்த ந.க.காந்தி, சா.வே.இராமச்சந்திரன்,
க.இராமக்கிருட்டிணன், அ.பழனிவேலன் போன்றோர் மூலமாகத்தான் எனக்கு திராவிடஇயக்கம் அறிமுகமாயிற்று. அர. இராசாராமன் எப்போதுமே தன் தரப்பை அதிகமாக வெளிக்காட்டாத
ஓர் இலக்கியவாதி.
அவர் கண்ணதாசனின்
”தென்றல்” பழைய இதழ்களையெல்லாம் படிக்கக்கொடுத்தார். கண்ணதாசனின்
நடையும் அண்ணாவின் பேச்சும் என்னை திராவிட இயக்கத்தின்பால் செலுத்தின. என்னுடைய அப்போதைய நண்பர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தனர். திராவிடம் என்பது மிகவும் கவர்ச்சிகரமான
கோஷமாக இருந்தது. திராவிடம் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மேன்மேலும் வளர்ச்சி அடையும் என்று நம்பியவர்களில்
நானும் ஒருவன். வாழ்வில் கடவுள் மறுப்பு மற்றும் தமிழ் முன்னேற்றம் ஆகிய இரண்டும் மிகமுக்கியமானவை
என்னும் எண்ணமும் தோன்றி வளர்ந்த்தது.
தமிழ்நாட்டில்
அப்போது திரும்பிய பக்கங்களிலெல்லாம் இந்திமொழிப்
பிரச்சினை கொழுந்துவிட்டு
எரிந்துகொண்டிருந்தது. இயல்பாகவே தமிழ்மீது ஆர்வம் கொண்டிருந்த
எனக்கு திராவிடஇயக்கம்
மீது ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் விளையாடிவிட்டு
மாலைவேளையில் கோயிலுக்கு ஒழுங்காகப் போய்வந்துகொண்டிருந்த நான் அப்பழக்கத்தை உடனடியாக உதறிவிட்டேன்.
அரசியலைப் பொருத்தமட்டில்
எங்களுக்கெல்லாம் அண்ணா ஒரு தேவதூதனாகத் தெரிந்தார். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக
எங்கள் ஊரைச் சுற்றியுள்ள இடங்களில் கூட்டம் நடக்கிற சமயங்களில் பயணத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல் போகத்தொடங்கினேன். அவருக்கு அடுத்து அப்போது நாவலர்தான் என்னைக் கவர்ந்த பேச்சாளராக இருந்தார். கலைஞரின் பேச்சில் இருக்கும் காரம் அவர் சொற்பொழிவில்
இல்லாவிட்டாலும் நயம் இருக்கும்.
ஒருமுறை விழுப்புரம் மந்தகரைத்திடலில் நடைபெற்ற கூட்டத்துக்கு நாவலர் பேச வந்திருந்தார். அப்போது ஆனந்தவிகடன்
இதழில் வந்த கழுதை கார்ட்டூனுக்கு அவர் அளித்த விளக்கம் மிகவும் கவர்ந்தது. “அந்தக் கழுதை சாதாரணக் கழுதையல்ல. கோவேறு கழுதை. கோ என்றால் அரசர் என்று பொருள். அதுவும் அரசரும் அரசர்க்கெல்லாம்
சக்கரவர்த்தியான ராஜகோபாலாச்சாரியார் ஏறும் கழுதை. வெற்றிக்கம்பத்தையும் அருகில்தான்
போட்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சநாள்தான்” என்று அவர் நயம்பொங்கப் பேசினார்.
அந்தக் காலத்துப் பேச்சாளர்களில் முக்கியமான ஒருவர் சம்பத். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக எங்கள் சிற்றூருக்கு அருகில் இருந்த சிறுவந்தாடு என்னும் ஊருக்குச் சென்ற நினைவு உள்ளது. அப்போது அவர் காங்கிரசுக்காகப்
பேசினார். சம்பத் பேச்சில் எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசும்போதுகூட நாகரிகம் இருக்கும். ஒருமுறை எங்கள் வளவனூர் துரோபதை அம்மன்கோயில் திடலில் பெரியார் காங்கிரசுக்குப் பிரச்சாரம் செய்யவந்தார். அங்கிருந்தவர்களிடம் அனுமதிகேட்டு
அவர் இருந்த வேனில் ஏறிப்போய்ப் பார்த்தேன். ”வாங்கதம்பி, உட்காருங்க, என்னாபடிக்கிறீங்க” என்றெல்லாம் விசாரித்தார்.
நன்கு படிக்கச்சொன்னார்.
அவர் அப்போது தி.மு.கவை தாக்கிப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவரைப் பார்த்தது ஏதோ ஒரு பெரிய சாகசத்தைச் செய்ததுபோன்ற
உணர்வைத் தந்தது.
எங்கள் வளவனூரில் தி.மு.க. என்றாலே சாமிக்கண்ணுவும்
கிருஷ்ணமூர்த்தியும்தான். அக்ரகாரத்தில்
ஓட்டு கேட்க வரும்போது அவர்கள் என்னையும் அழைத்துப்போவார்கள். 1967ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட
ராமனுக்காக சாமிக்கண்ணு
அவர்களுடன் சைக்கிள்கடை
வெங்கடேசனும் நானும் இரவு மடத்தார்கடைவரை நடந்துசென்று
ஓட்டுகேட்டது இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது.
தென்றல் இதழில் சம்பத்தும் கண்ணதாசனும்
தி.மு.க.வை விட்டு வெளியேறிய சூழல்களைப்பற்றியெல்லாம் இலக்கிய நயத்தோடு கண்ணதாசன் எழுதியிருந்தார்.
அது என்னைக் கவர்ந்தது. கண்ணதாசன் கவிதைகளை ஒரு வேகத்தோடும் வெறியோடும் படிக்கத்தொடங்கினேன். அதன்பிறகுதான்
எனக்கு பாரதி, பாரதிதாசன் அறிமுகமானார்கள்.
எங்கள் பகுதியிலேயே எங்கள் வீட்டுமேலே ஒரு சிறிய தி.மு.க. கொடியைப் பறக்கவிடும் அளவிற்கு திராவிட இயக்கத் தாக்கம் அப்போது இருந்தது.
வானொலியில் 67 தேர்தல் முடிவுகள் வரவர மகிழ்ச்சியில் பூரித்தேன். அண்ணா மறையும்வரை தி.மு.கமேல் குறைகாணவும் மனம்வரவில்லை.
பிறகு, சற்று தெளிவு வந்தபோது தமிழுக்கு இன்னும் இவர்கள் இன்னும் நிறைய செய்திருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. கலைஞரின் மேலாண்மை தி.மு.கவை என் மனத்தைவிட்டு
அகற்றத்தொடங்கியது.
கேள்வி:
ஏறத்தாழ நாற்பதாண்டுகள்
ஆசிரியராகப் பணி
புரிந்திருக்கிறீர்கள்? கற்பிக்கும்
முறைகளில் பல
மாற்றங்கள் இந்த
இடைவெளியில் உருவாகி
இருக்கலாம். நீங்கள்
மாணவராக இருந்த
நாள்களுக்கும் ஆசிரியராகப்
பல நூறு
மாணவர்களை உருவாக்கியிருக்கும்
இன்றைய நாள்களுக்கும்
இருக்கும் வேறுபாடுகளை
நீங்கள் எப்படி
உணர்கிறீர்கள்?
பதில்: நான் மாணவனாக இருந்தபோது நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு மாநில அளவில் இருந்தது. அதன் பாடத்திட்டம் ஆழமாகவும் தரமாகவும் இருந்தது. நான் அத்தேர்வு எழுதித் தேறியவன். பிறகு அத் தேர்வு மாநில அளவில் என்றாகி பிறகு வட்டார அளவு என்றானது. நடுநிலைப்பள்ளிகளுக்கு மட்டும் ஏன் தேர்வு உயர்நிலைப் பள்ளிகளுக்கு இல்லை என்ற கேள்வி எழுந்தபோது அரசு தேர்வையே ரத்து செய்து விட்டது.
என் ஆசிரியப்பணியின் கடைசிக்காலங்களில் செயல் வழிக்கற்றல் என்பதைக் கொண்டு வந்தார்கள். அதில் புத்தகம் பின்னுக்குத்தள்ளப்பட்டது. மாணவர்களுக்கு
வாசிப்புப் பயிற்சியே இல்லை என்றாகிவிட்டது. எல்லாமே செயல் என்றாகி கற்றல் போய் விட்டது. மேலும் முதல் வகுப்பில் அ ஆ என்று தொடங்குவதற்குப்
பதிலாக ப ட என்று தொடங்கச் சொன்னார்கள் . மொத்தத்தில் எந்த ஆட்சி வந்தாலும் முதலில் மாற்றம் செய்வது கற்பிக்கும்
முறையில்தான் என்று சொல்லலாம்.
நான் மாணவனாக இருந்த போது எட்டாம் வகுப்பில் படித்த செய்யுள் பகுதிகளை இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கிறார்கள்
என்றால் வேறுபாட்டைப்
புரிந்து கொள்ளுங்கள்.
அதே சமயத்தில் அப்போது பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் கற்ற அறிவியல், கணக்குப் பாடங்கள் இப்போது ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே ஆழமான அளவில் கற்பிக்கப்படுகின்றன. மொழிப்பாடம்
மட்டும் மேம்போக்காக
இருந்தால் போதும் என்கிற எண்ணம் அரசுக்கே இருக்கிறது. காலத்தின் கொடுமை என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.
கேள்வி:
அறுபதுகளில் உருவான
ஆசிரியர்களில் தொண்ணூறு
விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள்
நல்ல வாசகர்களாகவும்
எழுதும் பயிற்சி
உள்ளவர்களாகவும் இருந்தார்கள்.
இன்றைய ஆசிரியர்களிடையேயும்
அத்தகு ஆர்வம்
இருக்கிறதா? இல்லை
என்பது உங்கள்
எண்ணமானால் எந்தக்
காரணத்தால் அது
வற்றிப்போனது என்று
நினைக்கிறீர்கள்?
பதில்: அறுபதுகளில் ஆசிரியர்களை உருவாக்கியவர்கள்
சிறந்த இலக்கிய ஆர்வம் உடையவர்களாகவும் தரமான மொழிப்பயிற்சி உடையவர்களாகவும் இருந்தார்கள்.
பொதுவாகவே அறுபதுகளின்
சூழல் மொழியார்வமும்
புதிய மறுமலர்ச்சிக்
கருத்துகள் உண்டாவதற்குக்
காரணமாகவும் இருந்தது. எழுத நிறைய இதழ்கள் இருந்தன. முக்கியமாக தொலைக்காட்சி
போன்ற நம் நேரத்தைக் கொலைசெய்யும் ஊடகங்கள் இல்லை. இன்றைக்கு ஆசிரியர்களிடையே
பொருள் முக்கியம் என்றாகிவிட்டது. இலக்கியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு என்று எண்ணத் தொடங்கி விட்டார்கள்.
கேள்வி:
இலக்கியப் பயிற்சி
ஆசிரியராகப் பணியாற்றும்
ஒருவருடைய வாழ்வில்
எத்தகைய விளைவுகளை
உருவாக்க முடியும்
என்பதை உங்கள்
பணி வாழ்வை
வைத்துச் சொல்லுங்கள்?
பதில்: என் பள்ளிவாழ்வில் மாணவர்களுக்கும்
இலக்கிய ஆர்வம் ஊட்ட வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. வெள்ளிக் கிழமை தோறும் மாணவர்களை மேடையேற்றிப் பேசவைத்தது பல இலக்கியப் பேச்சாளர்களைக் கொண்டு வந்து இலக்கிய ஆர்வத்தை ஊட்டவைத்தது.
என் தனிப் பட்ட வாழ்வில் இலக்கியம்தான் பல அறநெறிகளைப்
பின்பற்ற தூண்டுகோலாக
இருந்தது. படி படி என்று என்னைத் தூண்டிப் படைப்பாற்றலை வளர்த்தது. ஒரு கையெழுத்திதழ் நடத்த வேண்டும் என்ற எண்ணம் வர வழி வகுத்தது. பள்ளியிலும் மாணவர்கள் எழுத “ வளர்ச்சி “ என்னும் கையெழுத்திதழ் தோன்ற வழிவகுத்தது.
கேள்வி:
ஆரம்பத்தில் எத்தகைய
நூல்களைப் படிப்பதில்
உங்கள் கவனம்
இருந்தது?
பதில்: எங்கள் வீட்டில் எப்போதும் குமுதம், கல்கண்டு ஆகிய இரண்டு இதழ்களையும் வாங்குவார்கள்.
அதிலிருந்துதான் என் வாசிக்கும் பழக்கம் தொடங்கியது. அதிலும் கல்கண்டு இதழில் வந்த தமிழ்வாணனின் துப்பறியும்
கதைகளைவிட குமுதத்தில்
வந்த சாண்டில்யனின்
தொடர்கதைகள் என்னைக் கவர்ந்தன. அவற்றில் வரும் கதாநாயகனின் சாகசங்கள் ஒவ்வொரு இக்கட்டிலும் மாட்டிக்கொண்டு அவன் தப்பிப்பது எல்லாம் அந்த வயதில் மிகவும் பிடித்திருந்தது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது முதலில் சாண்டில்யனின்
‘கன்னிமாடம்’ படித்தேன். பிறகு அவருடைய தொடர்கதைகள்
வரவர எல்லாவற்றையும்
படிக்கநேர்ந்தது.
அப்புறம் சில காலம் கழித்து சிரஞ்சீவி, மேதாவி ஆகியோரின் நாவல்களை விரும்பிப் படிக்கத் தொடங்கினேன். அப்போது மாதம் ஒரு நாவல் வரும். அதன் விலை ஒரு ரூபாய். அப்போது அது ஒரு பெரிய தொகை. எனவே பத்து பேர் சேர்ந்து ஆளுக்குப் பத்துபைசா போட்டு மாதம் ஒரு நாவல் வாங்கி எல்லாரும் படிப்போம். பத்து மாதம் ஆனவுடன் அந்த நாவல்களை சீட்டு குலுக்கிப்போட்டுப் பிரித்துக்கொள்வோம். இந்தக் காலக்கட்டத்தில்
என் தந்தையார் என்னை நூலகத்திற்கு அழைத்துப்போகத்
தொடங்கினார். அங்கே எனக்கு ஒரு புதிய உலகம் தெரிந்தது. எந்தவித வேறுபாடுமின்றி பல எழுத்தாளர்களையும் வாசிக்கத் தொடங்கினேன்.
பல வார மற்றும் மாத இதழ்கள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை படிக்கும் பழக்கம் வளர ஆரம்பித்தது.
கேள்வி:
எப்பொழுது எழுதத்தொடங்கினீர்கள்?
பதில்: எப்பொழுது என்பதைச் சரியாகச் சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவிற்குச்
சொல்லலாம் என நினைக்கிறேன். ஆறாம்வகுப்பு படிக்கும்போது
எங்கள் வீட்டில் வாங்கிவந்த தினத்தந்தியிலிருந்து முக்கியச்செய்திகள் என்று நான் நினைப்பவற்றை ஒரு குறிப்பேட்டில்
எழுதி அதை கைவேலை வகுப்பில் சகமாணவர்களுக்குப் படிக்கக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அதில் பெரும்பாலும் கொலை மற்றும் கொள்ளைபற்றிய செய்திகளே அதிகம் இருக்கும். அந்த வயதில் அவற்றின்மீது மிக ஆர்வமாக இருந்தது. பிறகு எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு கையெழுத்திதழ் தொடங்கினேன். அதில் காதுகளில் இதுவரை கேட்ட கதைகளை எழுதி நண்பர் வட்டாரத்தில் சுற்றுக்குவிட்டேன். ஓசை நயமுள்ள பாடல்களை அதிகம் எழுதத் தொடங்கினேன். ஒரு சில சரித்திரக்கதைகளை எழுத முயற்சி செய்தேன். அவை சாண்டில்யனின் பாதிப்போடு இருப்பதாக சில ஆசிரியர்கள் கூறினார்கள்.
எனவே கவிதைகளின்பக்கம்
அதிகக் கவனம் செலுத்தினேன். பதினோராம் வகுப்புவரை அந்த இதழ் ‘கதைக்கொத்து’
என்னும் பெயரில் வந்துகொண்டிருந்தது. புனைபெயர்கள்மீது
காதல் இருந்த காலம் அது. எனவே கதைப்பித்தன் என்ற பெயரையும் வைத்துக்கொண்டேன். பள்ளி இறுதி வகுப்பு முடித்து வளவனூர் திருக்குறட்கழகத் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் நான் முழு எழுத்தாளனானேன் எனச் சொல்லலாம். அதில் அர. இராசாராமனோடு
அப்போதிருந்த எல்லா நண்பர்களுக்கும் பங்கு உண்டு. எல்லாருமே எழுத்தாளர்கள். அனவைருமே நிறைய எழுதினோம். எழுதவேண்டும்
என்பதற்காகவே பல கையெழுத்திதழ்கள் தொடங்கப்பட்டன. நான் அர. இராசாமனை சிறப்பாசிரியராக்
கொண்டு ‘சங்கு’ என்னும் இதழ் ஆரம்பித்தேன்.
அதில் பல காலகட்டங்களில் துரை.தமிழ்த்தம்பி,
தி.பழநிச்சாமி, இராசு. துரைக்கண்ணன், ஆகியோர் உறுப்பாசிரியராக இருந்தார்கள். ந.க. காந்தி செங்காந்தள்
என்னும் இதழைத் தொடங்கினார். சா.வே.இராமச்சந்திரன் பாறை என்னும் கவிதை இதழைத் தொடங்கினார்.
அர.இராசாரமன் அறிமுகப்படுத்திய மரபுப்பயிற்சியின் விளைவால் வெண்பா, ஆசிரியப்பா, விருத்தங்கள்
பழக்கமாயின. மாதம் ஒரு கவியரங்கமும் அதில் பாடப்படும் கவிதைகளை அப்பொழுதே விமர்சிப்பதும் ஒரு நிகழ்ச்சியாக
வைத்திருந்தோம். திண்டிவனத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ’குயில்’, திருச்சியிலிருந்து வந்த ’கவியுகம்’, கோவேந்தனின் ’கவிஞன்’ ஆகியவற்றில் எனது கவிதைகள் வரத்தொடங்கின. எனது பெரும்பாலான
மரபுக்கவிதைகள் தெசிணி நடத்திய ‘கவிதை’ என்னும் இதழில்தான் வெளிவந்தன என்பதைக் குறிப்பாகச் சொல்லவேண்டும்.
கேள்வி:
கதை எழுதும்
ஆர்வம் எப்போது
வந்தது?.
பதில்: ஆசிரியப் பயிற்சிப்பள்ளியில் ஆண்டுவிழாவில்
நடத்த ஒரு நாடகம் எழுதச்சொன்னதுதான் அதற்குக் காரணமாகும். ஓர் இளவரசியின்மீது
ஆசைப்பட்டு கொடூர மனங்கொண்ட முகலாயமன்னன் அவள் நாட்டின்மீது படையெடுப்பதாகவும், அவளோ நாட்டைக் காக்க தன் மார்பகங்களை அறுத்து அவனுக்குப் பரிசாக அனுப்புவதாகவும் ஒரு கதை எழுதினேன். ’பரிசு வந்திருக்கிறது’ என்னும் தலைப்பில் அக்கதை நாவலர் நெடுஞ்செழியன்
இரண்டாவது முறை ஆரம்பித்து நடத்திய ‘மன்றம்’ இதழில் வந்தது. இதுதான் அச்சில் வெளிவந்த என் முதல் கதை. தொடர்ந்து அரு.ராமநாதன் நடத்திய ’காதல்’ இதழில் ஒரு கதை வெளிவந்தது. ”வாத்துமேய்ப்பவள்”
என்னும் அக்கதை தன்னைக் காதலித்துக் கெடுத்து, குழந்தையையும் கொடுத்த ஒரு பணக்கார இளைஞனை வாத்து மேய்க்கும் ஒரு சாதாரணமானவள்
பழி வாங்கும் கதையாகும். திருமணம் செய்ய மறுத்த அவனை நகரத்தில் பார்க்கும்போதெல்லாம் அனைவர் முன்னிலையிலும் குழந்தையைக் காட்டி ”இதுதான் உன் அப்பா” என்று அவள் சொல்வதுபோல்
செல்லும். அதன்பிறகு ஒரு பத்தாண்டுகள் கதை எழுதாமல் மரபுக்கவிதைகள் எழுதிவந்தேன்.
என்னுடைய ஒரு மரபுக்கவிதைத் தொகுப்புதான் வெளிவந்துள்ளது.
இன்னும் மூன்று தொகுப்புகள் கொண்டுவரக்கூடிய அளவிற்குக் கவிதைகள் உள்ளன. தொண்ணூறுகளில்
நவீன இலக்கியம் அறிமுகமான பிறகு என் எழுத்தின் கருப்பொருளே மாறிவிட்டது.
சிற்றிதழ்கள் வாசிப்பு அதிகமாகியது. சிறுகதையின் வடிவம் கைக்குள் வசப்பட்டது. தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் “சுகன்” என் சிறுகதைகளை நிறைய வெளியிட்டதால் என் எழுத்தின் மீது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. தற்பொழுது நான்கு சிறுகதைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
கேள்வி:
ஆசிரியப்பணியை ஏன்
தேர்ந்தெடுத்தீர்கள்?
பதில்: ஆசிரியப்பணியை நான் தேர்ந்தெடுத்தேன்
என்பதைவிட அப்பணிதான் என்னைத் தேர்ந்தெடுத்தது என்று சொல்லவேண்டும். மே 1965—இல்நான்பள்ளியிறுதிமுடித்தேன். சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக்கில் அது திறந்து ஆறு மாதம் கழித்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனக்குப் படிக்க இடம்கிடைத்தது.
அங்கு சென்று சேர்ந்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது. நடத்தும் பாடங்கள் ஒன்றுமே புரியவில்லை. கூடப்பயின்றவர்கள் “இவ்வளவுநாள்
கழித்து சேர்ந்து இருக்கிறாயே, எப்படி உன்னால் படிக்கமுடியும்” என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இரண்டுநாள் மட்டும் அதில் இருந்தவன் உடனே விலகி வீட்டுக்கு வந்துவிட்டேன். 1966-ஆம்ஆண்டு மின்துறையில்
தற்காலிக எழுத்தராக ஒர் ஆறுமாதம் விழுப்புரத்தில்
பணிபுரிந்தேன். அதில் பணியில் இருக்கும்போதே நிரந்தர எழுத்தர் பணிக்கு ஆள்எடுத்தார்கள்.
அதற்காக திருச்சிக்கு
நேர்முகத்தேர்விற்குச் சென்றவனுக்கு
சரியான சிபாரிசு இல்லாதால் கிடைக்கவில்லை. பிறகு ஒரு மூன்றாண்டுகள் கிரிக்கெட்விளையாடுதல், கடைத்தெரு வெங்கடேசன் மிதிவண்டிக்கடையில் உட்கார்ந்து
பொழுதுபோக்குதல் என்று இருந்தபோது திருக்குறட்கழக நண்பர்கள் தொடர்பு ஏற்பட்டதும் வாழ்க்கை திசைமாறியது. அப்போது என் அண்ணனும் ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிநீக்கத்திற்கு
ஆளாகி வீட்டிற்கு வரநேர்ந்தது. என்னுடைய இலக்கிய மற்றும் அரசியல் பணிகளுக்கு என் வீட்டில் எந்தத் தடங்கலும் செய்யாவிட்டாலும் என்னுடைய எதிர்காலத்திற்கு வழிவகுக்க வேண்டிய பொறுப்பு என் தந்தைக்கு இருந்தது. எனவே என்னை ஆசிரியர் பயிற்சியில் சேர்க்க எண்ணினார்கள். என்னோடு பள்ளியில் படித்தவர்கள் எல்லாரும் கல்லூரிகளில்
சேர்ந்துவிட நானும் எதிலாவது சேர்ந்துவிட எண்ணினேன். அப்போதெல்லாம் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அப்போது இருந்த கிருஷ்ணமூர்த்தி
என்னும் பள்ளி ஆய்வாளர் உதவி செய்ய வடலூர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் இடம் கிடைத்தது. ஆக பல திசைகள் சென்று கடைசியில் தானாகவே ஆசிரியர் பணியில் விழுந்தாலும்
அப்பணிதான் எனக்கு ஏற்றது என்று சேர்ந்தவுடனேயே
எனக்குப் புரிந்துவிட்டது.
பணிக்காலம் முழுதும் மிக மனநிறைவுடன் இடையே சில மனவருத்தங்கள் வந்தாலும் பணிசெய்தேன் என்பதைக் குறிப்பிட்டுச்
சொல்லித்தானாகவேண்டும்.
(தொடரும்...)
(பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு முன், 27.10.2013 அன்று, திண்ணை இணைய இதழில் வெளிவந்த நேர்காணல்)