இந்திய இலக்கியத்துக்கு கன்னடமொழியின் மாபெரும் கொடை என வசன இலக்கியத்தைக் குறிப்பிடலாம். வசன இலக்கியத்தின் மூலவர்களான பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி ஆகியோர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆயினும் சிவசிந்தனை அனைவரையும் ஒன்றிணைக்கும் கண்ணியாக விளங்கியது. கல்யாண தேசம் அவர்கள் அனைவருக்கும் இயங்குதளமாக அமைந்தது.
அவர்கள் உருவாக்கிய சரண இயக்கம், சிவபக்தியை முன்னிட்டு பிற எல்லா வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைத்தது. நெசவுத்தொழில் செய்பவர், மாடு மேய்ப்பவர், கன்னக்கோல் வைத்து களவுத்தொழில் செய்பவர், தோணியோட்டும் தொழிலாளர், சவரத் தொழிலாளி, செருப்பு தைக்கும் தொழில் செய்பவர், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், படைவீரர்கள் என சமூகத்தில் நிலவிய எல்லாத் தரப்புகளையும் சேர்ந்தவர்கள் தம்மைச் சரணர்களாக அறிவித்துக்கொண்டு ஒருங்கிணைந்தனர்.
மதக்கருத்துகளை விளக்கும் கருவியாக இல்லாமல் அன்றாட உலகியல்
நடப்புகளை முன்வைக்கும் பாடல்களை பக்தியோடு
இணைத்து அவர்கள் எழுதினார்கள். பக்திக்கான இலக்கணத்தை ஒவ்வொருவரும் தனக்கே உரிய தனித்தன்மையோடு
வரையறுத்துக்கொண்டனர். உரையாடல் மொழிக்கு நெருக்கமாக இருக்கும் அந்த வசனங்கள் வெவ்வேறு
உவமைகள் வழியாகவும் எடுத்துக்காட்டுகள் வழியாகவும் உள்ளத்தூய்மையையே பக்திக்கு ஆதாரமாக
முன்வைப்பதை இவ்வசனங்களை வாசிக்கும்போது நாம் உணர்ந்துகொள்ளலாம்.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் கர்நாடகம் என்பது மகாராஷ்டிரம், ஆந்திரப்பிரதேசம்
ஆகியவற்றோடு கூடிய நாடாக இருந்தது. அந்தத் தேசத்துக்கு கல்யாண் நகரம் தலைநகராக இருந்தது.
சாளுக்கிய வம்சத்திடமிருந்த ஆட்சி களச்சூரிய வம்சத்திடம் கைமாறியது. களச்சூரிய வம்சத்தைச்
சேர்ந்த மன்னன் பிஜ்ஜளனும் தொடக்கத்தில் பிற அரசர்களைப்போல ஆட்சி செய்ய விரும்பியவன்தான்.
ஆயினும் பிற எந்த அரசனுக்கும் இல்லாதவகையில், தனக்கு அருகிலிருப்பவர்கள் சொல்லும் கூற்றுகளுக்குச்
செவிமடுக்கும் பொறுமையும் மனமும் அவனுக்கு இருந்தன. அவனுக்கு இடித்துரைக்கும் அமைச்சராக
இருந்தவர் பசவண்ணர். அவருடைய சொற்களைக் கேட்டும் அவருடைய செயல்களை நேருறப் பார்த்தும்
அரசன் மெல்ல மெல்ல மாற்றமடைந்தான்.
சிவபக்தியை முன்வைத்து எல்லாத் தரப்பு மனிதர்களையும் ஒருங்கிணைத்த
பசவண்ணர் உடலுழைப்பை முதன்மையாகக் கொண்ட நிலையை உருவாக்கினார். ’அனைவரும் உழைக்கவேண்டும்,
செய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதவேண்டும், தொழிலில் ஒருபோதும் மேல், கீழ் பார்க்கக்கூடாது,
எந்தத் தொழிலிலும் அதிக பலனை எதிர்பார்க்கக்கூடாது, உழைப்பின் வழியாக மட்டும் கிடைக்கும்
பொருளை வைத்துத்தான் உணவுக்கான வழியைத் தேடிக்கொள்ள வேண்டும்’ ஆகியவற்றை சரணர்கள் பின்பற்ற
வேண்டிய வாழ்க்கை இலக்கணங்களாக பசவண்ணர் வகுத்தளித்தார். அதுவே அவரைப் பின்பற்றிய சரணர்களின்
வாழ்க்கை முறையாக மாறியது.
உழைப்பில்லாத
பக்தன் அரசன்
உழைப்பில்லாத
மகேசன் அரக்கன்
உழைப்பில்லாத
பூசாரி பரதேசி
உழைப்பில்லாத
லிங்கத்தை உடையவன் பாவி
உழைப்பில்லாத
சரணன் முட்டாள்
உழைப்பில்லாத
லிங்க ஐக்கியம் நகைப்புக்கிடமளிக்கும்
கூடலசங்கமதேவா
என்பது சென்னபசவண்ணன் என்பவர் எழுதிய வசனமாகும்.
உழைப்பின் காரணமாக செல்வம் பெருகுவதையும் நாட்டின் தகுதி உயர்வதையும்
கண்ட அரசன் பிஜ்ஜளன், பசவண்ணர் சொற்களை ஏற்றுக்கொண்டான். கர்நாடகத்துக்கு கல்யாண் போன்ற
தலைநகரம் அதற்கு முன்பும் இருந்ததில்லை. அதற்குப் பின்பும் இருந்ததில்லை. பிஜ்ஜளன்
போன்ற அரசனும் கூட அதற்கு முன்பும் தோன்றியதில்லை. பின்பும் தோன்றியதில்லை. அந்த நூற்றாண்டை
ஒரு மறுமலர்ச்சிக்காலம் என்றே சொல்லவேண்டும். அதன் விளைவாக உருவானதுதான் வசன இலக்கியம்
பசவண்ணரின் சமகாலத்தைச் சேர்ந்ததாகவும் அதற்குப் பிறகான காலத்தைச்
சேர்ந்ததாகவும் ஏறத்தாழ இருபத்தோராயிரம் வசனங்கள் கிடைத்திருக்கின்றன. இருநூறுக்கும்
மேற்பட்ட வசனகாரர்கள் அம்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.
வசன இலக்கியத்தின் உருவாக்கம் குறித்த இந்தத் தகவல்களின் பின்னணியோடு
படிக்கத் தொடங்கினால், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வெளிவந்திருக்கும்
‘யாருக்கும் யாரும் இல்லை’ தொகுதியை வாசகர்கள் இன்னும் நெருக்கமாக உணர்ந்துகொள்ள முடியும்
என்பதால் சற்றே நீண்ட குறிப்பை எழுதவேண்டியதாயிற்று.
இத்தொகுதியில் சுகுமாரன் நூறு வசனங்களை மொழிபெயர்த்திருக்கிறார்.
சமய அடையாளம் துறந்த வசனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து சமூகப்பண்பாட்டுச் சலனங்களைப்
பதிவு செய்திருக்கும் வசனங்களைத் தேடித்தேடிக் கண்டடைந்து மொழிபெயர்த்திருக்கிறார்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வெட்டவெளி வார்த்தைகள் என்னும் தலைப்பில் சாகித்திய
அகாதமி வழியாக வெளிவந்த வசனங்களின் தொகுப்பிலும் அவர் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டவர்.
அப்போது கிடைத்த அனுபவம் அவரை வசனங்களோடு நெருக்கமாக உணரச் செய்ததால் இப்போது மீண்டும்
ஒரு தொகுதியை உருவாக்கியிருக்கிறார். தமிழ்ச்சூழலில் இதுவரை பலரும் அறியாத கங்காம்பிகா,
கொக்கவ்வா, காளவ்வா, மாதார தூளய்யா, லிங்கம்மா, மோளிகெ மகாதேவி, மாதார சென்னய்யா, சத்யக்கா, அம்பிகர செளடய்யா போன்ற பலரையும் முதன்முறையாக
அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
சந்திரன்
உதிக்கையில் பொங்குகிறது சமுத்திரம்
சந்திரன்
தேய்கையில் வற்றுகிறது
சந்திரனை
ராகு மறைத்த போது
புலம்பியதா
சமுத்திரம்?
சமுத்திரத்தைக்
குறுமுனி குடித்தபோது
சந்திரன்
தடுக்க வந்ததா?
யாருக்கும்
யாருமில்லை
கெட்டவர்க்கு
உறவுமில்லை
ஐயா,
கூடலசங்கம தேவா
உலகுக்கு
உறவு நீயே
இது பசவண்ணரின் வசனம். எல்லாத் தருணங்களிலும் எல்லோருக்கும்
உறவு எனத் திகழ்பவனாக இறைவனை மையப்படுத்துகிறது இவ்வசனம். இந்த உறவை நம்பி மானுடர்
பேணி வளர்ப்பதற்கு இந்த உலகில் எதுவும் தடையில்லை என்னும் சமூக உண்மையையும் போகிற போக்கில்
நுட்பமாக உணர்த்திவிட்டுச் செல்கிறது.
ஒரு செய்தியை வாயால் சொல்வது எளிது. அதை உணர்ந்துகொள்வதுகூட
எளிது. ஆயினும் செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. காரணம் நம்முடைய மனப்பழக்கம். காலம்காலமாக
ஒரு சங்கதிக்குப் பழகிய மனத்தைத் திசைதிருப்பி வேறொரு திசைக்குத் திருப்புவது மிகவும்
கடினமானது. அப்படிப்பட்ட மனத்தை வெல்லும் ஆற்றலை அடைவதுதான் நம் பிறவியின் நோக்கமாக
இருக்கவேண்டும் என்பது பசவண்ணரின் ஆவல். மனப்பழக்கத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது பசவண்ணர்
‘பல்லக்கு ஏறிய நாய்போல கண்டால் விடாது முந்தைய பழக்கம்’ என்றொரு உவமையைச் சொல்கிறார்.
அதைப் படிக்கும்போது தலையில் ஓங்கி ஒரு குட்டு வைப்பதுபோல உள்ளது.
ஏற்கனவே நிறைந்து வழியும் கோப்பையில் புதிதாக எதையும் ஊற்றிவிட
முடியாது என்னும் உண்மையை நாம் பல உவமைக்கதைகள் வழியாகப் படித்திருப்போம். அறிந்ததினின்று
நாம் விடுதலையடையாமல் புதிய ஒன்றை நாம் ஒருபோதும் அறிந்துகொள்ளவே முடியாது.
ஒரு வசனத்தில், அக்கமகாதேவி ஒரு புதிரைப்போல ஒரு கேள்வியை எழுப்பி
அந்த உண்மையை நம்மை அழகாக உணரச் செய்கிறார். சென்னமல்லிகார்ஜுனனின் குணநலன்களைப்பற்றி
எடுத்துரைப்பதுபோலத்தான் அந்த வசனம் சம்பிரதாயமாகத் தொடங்குகிறது. உள்ளூர மனமும் உடலும்
உருகாதவர்களின் அபிஷேகத்தை அவன் ஏற்பதில்லை. அவர்கள் வைத்து வழிபடும் பூக்களையும் அவன்
ஏற்பதில்லை. அவர்கள் பூசும் சந்தனத்தையும் அவன் ஏற்பதில்லை. இப்படி ஒவ்வொன்றாக அவன்
ஏற்பதற்கு வாய்ப்பில்லாத பல செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார் அக்கமகாதேவி. இறுதியில்
‘என்னிடம் எதுவும் இல்லை, நான் எதையும் வைக்கவும் இல்லை’ என்னும் பொருள்படும்படி ‘என்னிடம்
இருப்பது என்னவென்று என் கைத்தலத்தில் வந்தமர ஏற்றாய்?’ என்று சென்னமல்லிகார்ஜுனனையே
கேட்டு முடிக்கிறார். தன் மனத்தை அவர் வெற்றிடமாக வைத்திருக்கிறார், அவ்வெற்றிடத்தையும்
அவனுக்கு அளிக்க அவர் எந்தத் தடையுமில்லாமல் இருக்கிறார் என்பதுதான் காரணம் என்பதை
வாசகர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் முடிவடைகிறது அவ்வசனம்.
தன் மனப்போக்கைச் சித்தரிக்கும் வகையில் அக்கமகாதேவியே எழுதிய
இன்னொரு வசனத்தையும் சுகுமாரன் இத்தொகுதியில் மொழிபெயர்த்திருக்கிறார். அது இன்னும்
வெளிப்படையாகவும் சுவையாகவும் அமைந்திருக்கிறது.
பசியே
நீ நில்லு நில்லு
தாகமே
நீ நில்லு நில்லு
உறக்கமே
நீ நில்லு நில்லு
காமமே
நீ நில்லு நில்லு
குரோதமே
நீ நில்லு நில்லு
மோகமே
நீ நில்லு நில்லு
லோபமே
நீ நில்லு நில்லு
மதமே
நீ நில்லு நில்லு
மாச்சரியமே
நீ நில்லு நில்லு
நான்
சென்னமல்லிகார்ஜுனனுக்கு
அவசர
ஓலை எடுத்துச் செல்கிறேன்
வணக்கம்
இவ்வசனத்தில் தன்னைத்தானே தற்படமாக தீட்டிவைத்திருக்கிறார் அக்கமகாதேவி.
தன் மனத்தில் எதற்கும் இடமளிக்காமல் ஓடிக்கொண்டே இருப்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அக்கமகாதேவியின் சொல்லை அல்லமப்பிரபு வேறொரு விதமாக தன் வசனங்களில்
எடுத்துரைக்கிறார். இறைநம்பிக்கை என்பது இறையை உணர்வதால் உருவாகி நீடித்திருக்கும்
ஒருவகை உணர்வு. அந்த உருவாக்கத்துக்கு வேறெதுவும் பின்னணிக்காரணமாகவோ உந்துசக்தியாகவோ
இருக்கக்கூடாது. அப்படி ஒன்று இருப்பின், அது போலியாகவே இருக்கும். இறைநம்பிக்கை என்பது
ஏதோ ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காக அமையும் புகலிடமல்ல, அவனை நம்பி அவனோடு இருப்பதற்காக
வருபவர்களுக்கு மட்டுமான புகலிடமாகும்.
கள்ளனுக்கஞ்சி
காட்டுக்குள் புகுந்தால்
புலி
தின்னாமல் விடுமா?
புலிக்கு
அஞ்சி புற்றுக்குள் நுழைந்தால்
பாம்பு
கொத்தாமல் விடுமா?
மரணத்துக்கஞ்சிப்
பக்தனானால்
கர்மம்
தின்னாமல் விடுமா?
இவ்வாறு,
சாவின் வாய்க்குக் கவளமாகும் வேடதாரிகளை
என்னென்பேன்
குகேஸ்வரா?
தேவரதாசிமய்யா என்னும் வசனகாரரும் பக்திக்கான அடிப்படையை வரையறுக்கும்
போக்கில் புரிந்துகொள்ளாத பக்தியைச் சுட்டிக் காட்டுகிறார்.
கிழிந்த
கோணியில் ஒருவன் நெல்லை நிரப்பினான்
தீர்வைக்குப்
பயந்து இரவெல்லாம் நடந்தான்
நெல்லெல்லாம்
போய் மிஞ்சியது கோணிப்பை
பலவீனன்
பக்தி இதுதான் பார், ராமநாதா
ஒவ்வொரு வசனகாரரும் பக்திக்கென ஓர் இலக்கணத்தை வரையறுத்துச்
சொல்கின்றனர். சொல்லழகாலும் உவமை அழகாலும் படிம அழகாலும் ஒவ்வொன்றும் ஒருவிதமாகத் தோற்றமளித்தாலும்
அடிப்படையில் அவை அனைத்தும் ஒரே உண்மையையே பறைசாற்றி நிற்கின்றன. பற்றற்று இருப்பது,
ஏற்றத்தாழ்வின்றி பிறருடன் இணைந்திருப்பது, ஒரே எண்ணத்துடன் இருப்பது ஆகியவை மட்டுமே
பக்திக்கான வழி என்பதுதான் அந்த உண்மை.
எல்லா வசனங்களையும் மிஞ்சும் வகையில் சித்தராமா என்பவர் எழுதிய
ஒரு வசனத்தையும் சுகுமாரன் இத்தொகுதியில் மொழிபெயர்த்திருக்கிறார். கல்யாண தேசத்துக்கே
வராத வசனகாரர் அவர். மகாராஷ்டிரத்தில் பிறந்த ஊரான சோனாலிகெ என்னும் சிற்றூரிலேயே தொண்டாற்றி
மறைந்தவர். வாசிப்பின் வழியாகவே அல்லமப்பிரபுவின்
தத்துவ விளக்கத்தைப் பயின்று தெளிவு பெற்று ஈசனின் பாதையில் மக்கள் சேவையில் ஈடுபட்டு
வாழ்ந்தவர்.
ஒரு கோழி
கூவுகிறது பகலிரவு பாராமல்
அதை அறியார்
மனிதர் கூட்டம்
அறிந்தால்
பவபந்தமில்லை
மறந்தால்
பிறப்பு இறப்புக்கு எல்லையுமில்லை
கபில
சித்த மல்லிகார்ஜுனா
கோழியின் குரலை இறைவனின் அழைப்பாக அறிந்துகொள்ளக்கூட ஞானமில்லாதவர்களாக
வாழும் மனித வாழ்க்கையை இதைவிட மென்மையாக இன்னொருவர் இடித்துரைத்துவிட முடியாது. காலுக்குக்
கீழேயே புதையல் இருந்தும், புதையல் எங்கோ இருக்கிறது எனத் தேடி ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டே
இருப்பவர்களாக இருக்கிறோம் நாம். பொருளில்லாத இந்த வாழ்க்கையைத்தான் நாம் அனைவருமே
பொருள் நிறைந்த ஒன்றாக நினைத்து வாழ்ந்துவருகிறோம் என நினைக்கும்போது மனம் கூசுகிறது.
கவித்துவமான அத்தகு சுடர்மிகுந்த வரிகள் இத்தொகுதியில் மாணிக்கப்பரல்களென பல இடங்களில்
அடங்கியிருக்கின்றன.
சுகுமாரனின் மொழிபெயர்ப்பு இத்தொகுதியை மனத்துக்கு நெருக்கமாக
உணரச் செய்கிறது. தமிழ் வாசக உலகம் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. அழகான
ஓவியங்களோடும் நல்ல வடிவமைப்போடும் சிறப்பான முறையில் இத்தொகுதியை வெளியிட்டிருக்கும்
பரிசில் புத்தக நிலையத்தின் பணி பாராட்டுக்குரியது.
(யாருக்கும் யாரும் இல்லை. கன்னட வசன கவிதைகள்.
தமிழில்: சுகுமாரன், பரிசில் புத்தக நிலையம், 47, பி1 பிளாட், முதல் தளம், தாமோதர்
ப்ளாட், ஐஸ்வர்யா அடுக்ககம், ஓம் பராசக்தி தெரு, வ.உ.சி.நகர், பம்மல், சென்னை
-600106. விலை. ரூ.150)
(புக் டே – இணைய தளம் - 27-10.2025)
