ஒருநாள் நண்பரொருவரைச் சந்திப்பதற்காக வெளியே சென்றிருந்தேன். இருவரும் ஒரு பூங்காவில் உட்கார்ந்து இரண்டுமணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பிறகு அவரை அனுப்பிவைத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். நீண்ட நேரமாகியும் எங்கள் குடியிருப்பு வழியாகச் செல்லக்கூடிய பேருந்து வரவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக மழை வந்துவிட்டது.
தூறலாகத்
தொடங்கிய மழை சட்டென வலுக்கத் தொடங்கியது. பேரோசையுடன் தரையை மோதித் துளைப்பதுபோல
மழை பொழிந்தது. பேருக்குத்தான் அது பேருந்துநிறுத்தமே தவிர, அங்கு நிழற்குடை
எதுவும் இல்லை.. பக்கத்திலேயே ஒரு வணிகவளாகத்தின் முன்புறத்தில் மழையில்
நனைந்துவிடாதபடி தற்காத்துக்கொள்ள ஒரு சிறிய இடம் இருந்தது. அடுத்த கணமே பேருந்துக்குக்
காத்திருந்தவர்கள் அனைவரும் அங்கு ஓட்டமாக ஓடி நின்றோம்.
மழையாக
இருந்தபோதும் வெயில் வெளிச்சமும் விசித்திரமான வகையில் நீடித்திருந்தது.
மழைக்குரிய இருளே இல்லை. ஆயினும் மழை கொட்டியது. மழையின் சத்தத்தைக் கேட்டபடி,
கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து அருவி மாதிரி விழுந்து வழிந்தோடும் நீர்ப்பெருக்கை
வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன்.
எதிர்த்திசையில்
ஒரு பெரிய பங்களா இருந்தது. கண்ணாடி மாளிகையைப்போல பளபளவெனக் காணப்பட்டது. புதிதாகக்
கட்டப்பட்ட கட்டடம். முகப்பிலேயே அதன் பெயர் பெரிய எழுத்துகளில் விளக்குகளாலேயே
வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருவர் கூட அந்தக் கட்டடத்தின் அருகில் ஒதுங்கி
நிற்கமுடியாதபடி மதில் மறைத்து நின்றது..
“இந்த
இடத்துலதான் ஒரு காலத்துல பெரிய தோப்பு இருந்திச்சி. நான் சின்ன பிள்ளையா இருந்த
சமயத்துல நானும் கூட்டாளிங்களும் இங்க வந்து சடுகுடு விளையாடுவோம். கொய்யா மரம்,
பலாமரம்லாம் நிறைய இருக்கும்….” என்று ஒரு பெரியவர் தனக்கு அருகிலிருந்த ஓர்
இளைஞனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவனுக்கு
அந்த உரையாடலில் எவ்விதமான ஆர்வமும் இல்லை. ஆயினும் வெளியே மழை
பொழிந்துகொண்டிருந்தபடியாமல் அவர் சொல்வதைக் கேட்டு தலையசைத்தபடி இருந்தான். நான்
அப்படி ஒரு தோப்பை அந்த இடத்தில் பார்த்ததே இல்லை. நான் பார்க்காத செய்தி என்பதால்
மிகுந்த ஆர்வத்துடன் அவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினேன்.
”ஸ்கூல்
விட்டதும் இங்க வந்துதான் நாங்க எல்லாரும் விளையாடுவோம். நான் படிச்சி முடிச்சி
வேலைக்குப் போகறவரைக்கும் கூட அந்தத் தோப்பு இருந்தது. அதுக்கப்புறம் யாரோ ஒரு
பணக்காரன் அந்தத் தோப்பை வாங்கி தோப்புல இருந்த எல்லா மரங்களையும் வெட்டிட்டு, ஆதர்ஷான்னு
ஒரு பெரிய தியேட்டரு கட்டினான். தெலுங்கு, தமிழ், கன்னடம்னு எல்லா மொழிப் படங்களையும்
காட்டி பணம் சம்பாதிச்சான். எல்லாப் பக்கத்துலேர்ந்தும் படம் பார்க்கறதுக்கு ஜனங்க
வந்து கூட்டம் கூட்டமா நிப்பாங்க…..”
நான்
அவர் குறிப்பிட்ட தியேட்டரைப் பார்த்திருக்கிறேன். அத்தியேட்டரில் திரைப்படங்களும்
பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு இருந்த தோப்பைப்பற்றி எதுவும் தெரியாது. அதனால்
அந்தப் பெரியவர் விவரிப்பதைக் கேட்க எனக்கு ஆர்வமாக இருந்தது. அவர்
சொல்வதையெல்லாம் சின்னப்பிள்ளை மாதிரி வாயைப் பிளந்தபடி கேட்கத் தொடங்கினேன்.
“தனியார்
சேனல் வந்து டிவியில படம் காட்ட ஆரம்பிச்சதும் தியேட்டர்ல நடமாட்டம் குறைஞ்சி போச்சி.
எவ்ளோ காலத்துக்கு நஷ்டத்தைத் தாங்கிகிட்டு அவனும் தியேட்டர் நடத்துவான்? அதான்,
வந்த விலைக்கு தியேட்டர வித்துட்டு போயிட்டான்.”
அவர்
சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞனின் முகத்தில் எவ்விதமான எதிர்வினையும்
தெரியவில்லை. ஏதோ கதை கேட்பதுபோல ஒப்புக்கு ம் ம் என்று தலையை அசைத்தபடி
இருந்தான். “காலம் மாறமாற ஒன்னொன்னும் அப்படி மாறித்தானே ஆவணும். வேற என்ன வழி
இருக்குது?” என்று நானாகவே அவரைப் பார்த்துக் கூறிக்கொண்டே உரையாடலுக்குள் நுழைய
முயற்சி செய்தேன்.
அவர்
அப்போதுதான் என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். நானும் அவர் சொன்னதையெல்லாம்
கேட்டுக்கொண்டிருந்ததை அவர் உணர்ந்துகொண்டார். “நம்ம கையில எதுவும் இல்லைங்கறதுதான்
உண்மை. நாம எதையும் நிறுத்தமுடியாது. எல்லாத்தயும் நாம வேடிக்கைதான்
பார்க்கமுடியும்” என்றார்.
என்
குறுக்கீட்டை அவர் விரும்பவில்லையோ என எனக்குச் சங்கடமாக இருந்தது. அவர்
முகக்குறிப்பிலிருந்து எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. “இந்தக்
கட்டடமும் இந்தத் தொழிலும் இன்னும் எத்தனை நாளுக்கு ஓடும்? அதிகபட்சமா அதுவும்
இன்னும் ஒரு நாற்பது வருஷம் தாங்கும். அவ்வளவுதான். அதுக்கப்புறம் இதை
முழுங்கிட்டு இன்னொன்னு புதுசா வரும்” என்றார். பிறகு தன் பொக்கைவாயைத் திறந்து
புன்னகைத்தபடியே “நம்ம வாழ்க்கையே இங்க நிரந்தரமில்லை. இதுல கட்டடத்து ஆயுளைப்
பத்தி சொல்ல என்ன இருக்குது?” என்றார்.
அந்த
உரையாடலின் நிறைவான வாசகத்தைப்போல அவர் அந்த வாக்கியத்தைச் சொன்னார். எதைச் சொல்லி
அடுத்த உரையாடலைத் தொடங்குவது என நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே எங்கள்
குடியிருப்புக்குச் செல்லும் பேருந்து வந்துவிட்டது. எனக்கு வேறு வழி தெரியவில்லை.
அந்தப் பெரியவரிடம் விடை பெற்றுக்கொண்டு, அங்கிருந்து வெளியேறி ஓடி பேருந்தில்
ஏறிவிட்டேன். அவர் சொன்ன ஆயுள் என்ற சொல் என் மனத்தில் பசைபோல ஒட்டிக்கொண்டது.
பேருந்துப்பயணம்
முடியும் வரையில் அந்தப் பெரியவரின் சொற்களே மனத்தில் சுழன்று சுழன்று வந்தன.
மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதுதானே வரலாறு. ஆனால் ஒரு சமூகத்தில்
எழுதப்படும் வரலாற்றில் இந்த அம்சங்கள் இருப்பதில்லை. ஒரு நகரத்தில் மின்சார
நிலையம் எப்போது வந்தது, மின்சார ரயில் எப்போது வந்தது என்பதற்கெல்லாம் இடமிருக்கும்.
ஆனால் அந்த நிலையங்களுக்காக தம் வசிப்பிடங்களைக் கொடுத்துவிட்டு வெளியேறியவர்களின்
வாழ்க்கையைப்பற்றிய குறிப்புகளுக்கு அதில் இடம் இருப்பதில்லை. ஆனால் அத்தகு குறிப்புகளை,
பேருந்துநிறுத்தத்தில் நின்றிருந்த பெரியவரைப்போல யாரோ ஒருவர் எங்கோ இன்னொருவரிடம்
தம் உரையாடல் வழியாக எடுத்துரைத்தபடி இருப்பார். அச்சிட்ட எழுத்து வரலாறுக்கு
இணையானதாக இந்த உரையாடல் வரலாறுக்கும் இச்சூழலில் இடமிருக்கிறது. ஒவ்வொரு
விடுபடலும் இன்னொருவரால் நிரப்பப்பட்டபடியே இருக்கும்.
விட்டல்ராவின்
உரையாடல்களிலும் வரலாற்றின் ஒழுக்கில் விடுபட்டுப்போனவர்களின் வரலாறு அடங்கியிருக்கிறது
என்பதை எப்படியோ நான் தொடக்கத்திலேயே உணர்ந்துகொண்டேன். ஒரு குறிப்பிட்ட காலம்
வரைக்கும் நான் அவரோடு உரையாடி, அந்நினைவுகளை என் நெஞ்சில் சுமந்துகொண்டு திரும்பி
வருபவனாகவே இருந்தேன். ஏதோ ஒரு நேரத்தில்தான் அவற்றையெல்லாம் பதிவுசெய்து
வைக்கவேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தை இன்றுவரை நிறைவேற்றி வருகிறேன்.
அவருடைய
உரையாடல்கள் ஒரு நூலகத்துக்குச் சென்று புத்தகத்தை
எடுத்துப் படிக்கும் அனுபவத்துக்கு நிகரானது. அவர் உரையாடத் தொடங்கினால் எண்ணற்ற
தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டும் ஆற்றல்
அவருக்கு உண்டு. அவர் வழியாக நான் எண்ணற்ற மனிதர்களைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.
இலக்கியம் சார்ந்தும் வாழ்க்கைப்போக்கு சார்ந்தும் ஏராளமான தகவல்களையும் தெரிந்துகொண்டேன்.
பிறருடன் பகிர்ந்துகொள்ளும் தோறும் அந்த அனுபவம் விரிவடைந்தபடியே செல்லும். காலம்
கடந்த பிறகும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
விட்டல்ராவும் நானும் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் உரையாடுவது
வழக்கம். அந்த உரையாடல் சிற்சில சமயங்களில் ஐந்து பத்து நிமிடங்களிலும் முடிந்ததுண்டு.
சிற்சில சமயங்களில் ஒருமணி நேரம் வரைக்கும் நீண்டதுமுண்டு. அன்றன்றைக்கு அமைகிற சூழலைப்
பொறுத்தது அது. அத்துடன் மாதத்தில் இரண்டு மூன்று முறையாவது விட்டல்ராவின் வீட்டுக்குச்
சென்று அவரோடு உரையாடிக்கொண்டிருப்பதும் உண்டு. பல நேரங்களில் நானும் நண்பர் திருஞானசம்பந்தமும்
சேர்ந்து செல்வோம். அவர் ஊரில் இல்லாத நேரங்களில் நான் மட்டும் சென்று பேசிக்கொண்டிருந்துவிட்டுத்
திரும்புவேன்.
சமீபத்தில் ஓர் உரையாடலில் எங்கள் ஆரம்பப்பள்ளி நாட்களின்
நினைவுகளை மாறிமாறிப் பேசிக்கொண்டோம். நான் படித்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்
மூன்றாம் வகுப்பு வரைக்கும் எனக்கு வகுப்பாசிரியையாக இருந்தவர் நவநீதம் டீச்சர். கண்டிப்பானவர்.
அதே சமயத்தில் சிறார்கள் மீது பாசம் கொண்டவர். ஒருமுறை எனக்குக் காய்ச்சல் வந்து மூன்று
நாட்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லவில்லை. மூன்றாவது நாள் சாயங்காலம் பள்ளிக்கூடம்
விட்டதும் பிற பிள்ளைகள் புடைசுழ எங்கள் வீட்டுக்கு வந்து என் நலம் பற்றி விசாரித்துவிட்டுச்
சென்றார்.
நான் அந்த நிகழ்ச்சியை விட்டல்ராவிடம் சொன்னபோது, அவர் தன்னுடைய
பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்த யூசுப்கான் என்னும் ஆசிரியர் மீது பிள்ளைகள் கொண்டிருந்த
பாசத்தையும் பிள்ளைகள் மீது அவருக்கு இருந்த பாசத்தைப்பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
ஓவியப்பாடத்துக்கு மதிப்பெண் இல்லை என்பதால் ஓவிய வகுப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்த
பிள்ளைகளுக்கு யூசுப்கான் சார் ஓவியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பிள்ளைகளின்
கவனத்தைத் திசைதிருப்பப் பாடுபட்டதையும் யூசுப்கான் சார் ஒவ்வொரு நாளும் ஒட்டுப்போட்டு
தைத்த கோட்டை அணிந்துகொண்டு வருவதைப் பார்த்து மனம் பொறுக்கமுடியாத பிள்ளைகள் ஆளுக்குக்
கொஞ்சம் பணத்தைப் போட்டு அவருக்குப் புதிதாக ஒரு கோட்டு வாங்கிவந்து கொடுத்ததையும்
சொன்னார்.
அவருடைய காலத்தில் யூசுப்கான் சார் போலவும் என்னுடைய காலத்தில்
நவநீதம் டீச்சர் போலவும் இன்றைய காலத்திலும் யாரோ ஒருவர் எங்கோ இருக்கக்கூடும். நீண்டு
செல்லும் கனிவென்னும் ஒரு சரடு காலத்தை ஊடுருவிக்கொண்டு சென்றபடியே இருக்கிறது என்பதையே
அன்றைய உரையாடல் வழியாக நான் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்று புரிந்துகொண்டேன்.
விட்டல்ராவின் உரையாடல்கள் வெறும் தகவல்கள் அல்ல. அக்காலத்து
வாழ்வியல் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் புரிந்துகொள்ள அந்த உரையாடல்கள் ஒரு வாசலாக
அமைந்திருக்கின்றன. உரையாடி முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய பிறகு அல்லது ஏதோ
ஓர் அனுபவத்தின் தொடர்ச்சியாக ஒரு மீள்நினைவாக அவருடைய உரையாடல்களை அசைபோட நேரும்போது
உருவாகும் மனஎழுச்சி மகத்தானதொரு அனுபவம். அப்போது அனைத்தையும் தொகுத்து யோசிக்கும்
தருணத்தில் திரண்டுவரும் கேள்வி அல்லது விடை
ஒரு கவித்துவமான அனுபவம். அவற்றை உணர்த்தவேண்டும் என்பதற்காகவே அவருடன் நிகழ்த்திய உரையாடல்களைத் தனித்தனி கட்டுரைகளாக எழுதவேண்டும்
என்ற எண்ணம் எழுந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய அந்த எண்ணத்தின் விளைவாக
அத்தகு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வெளிவந்தன. இது மூன்றாவது தொகுதி. தன்னுடைய எண்பத்துநான்காவது
வயதில் மின்னிதழில் ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரையைத்
தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் அவருடைய உற்சாகத்தைக் கண்டு நானும் உற்சாகமடைகிறேன்.
இத்தொகுதி அவருக்கு நான் அளிக்கும் அன்புப்பரிசு. இத்தொகுதியை மிகச்சிறந்த முறையில்
நூலாக வெளிக்கொண்டு வந்திருப்பவர் நண்பர் நடராஜன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இத்தொகுதியில்
அடங்கியுள்ள எல்லாக் கட்டுரைகளையும் ஒரு தொடர் போல ஒவ்வொரு மாதமும் அம்ருதா இதழ் வெளியிட்டு
வாசகர்களிடையில் விரிவான வகையில் அறிமுகம் கிடைக்க உதவியது. எழுத்தாளர் திலகவதிக்கும்
தளவாய் சுந்தரத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடித்ததுமே
வழக்கம்போல முதல் வாசகியாகப் படித்து வந்தவர் என் மனைவி அமுதா. விட்டல்ராவின் உரையாடல்கள்
அவருக்குப் புதிதல்ல. விட்டல்ராவ் எங்கள் வீட்டுக்கு வரும் சமயங்களில் அவரும் உரையாடல்களில்
பங்கெடுத்துக்கொண்டதுண்டு. அவர் விவரிக்கும் அனுபவங்களை அவரும் நேரிடையாகவே கேட்டிருக்கிறார்.
என்னுடைய எல்லா முயற்சிகளிலும் எனக்கு உற்ற துணையாக இருக்கும் அமுதாவுக்கு என் இனிய
அன்பு.
என் மனைவியைப்போலவே எல்லாக் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக
வாசித்தவன் என் நெருங்கிய நண்பன் பழனி. பல கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் விட்டல்ராவின்
இளமைக்காலத்துச் சித்தரிப்புகள் பல நேரங்களில் எங்கள் பள்ளிக்கால அனுபவங்களை அசைபோட்டு
உரையாட ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன. பழைய நினைவுகளை அசைபோடும்போது நெஞ்சில்
நிறையும் இனிமைக்கு அளவே இல்லை. அவனுக்கும்
என் அன்பு.
இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஒருகணம்
என் மனத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் முகம் எனக்குள் திரண்டு வந்து நின்றது.
அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரைச் சந்தித்து பலமுறை உரையாடியிருக்கிறேன். அவையனைத்தும்
என் வாழ்வில் இனிய கணங்கள். அவரோடு உரையாடிய அனுபவங்களின் அடிப்படையில், அவரும் விட்டல்ராவைப்போலவே
தன் இளமைக்காலத்து அனுபவங்களையும் பழகியவர்களின் நினைவுகளையும் கூர்மையான அவதானிப்புடன்
பேசுபவர் என்பதை இப்போது ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்கிறேன். அந்தப் புரிதலின்
அடிப்படையிலேயே அவரைப்பற்றிய நினைவு வந்துவிட்டது. அசோகமித்திரனின் நெஞ்சில் நடிகர்
திலீப்குமார் பற்றிய நினைவுக்கும் இடமிருந்தது. எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றிய
நினைவுக்கும் இடமிருந்தது. அவரே பல தருணங்களில் ஏராளமான அத்தகு நினைவுக்குறிப்புகளை சின்னச்சின்ன கட்டுரைகளாக
எழுதி வெளியிட்டார்.
விட்டல்ராவும் அசோகமித்திரனும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே
மிதிவண்டிகளில் பயணம் செய்து பல திரைப்படங்களுக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகச்
சென்று வந்தவர்கள். அதைப்பற்றி விட்டல்ராவே பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவருடைய
நெஞ்சில் அசோகமித்திரனுக்கென ஒரு தனியிடம் உண்டு என்பதை நான் அறிவேன். நண்பர் விட்டல்ராவும்
நானும் நிகழ்த்திய உரையாடல்கள் இப்படி நூல்வடிவம் பெறுவதைப் பார்க்க நேர்ந்தால் அசோகமித்திரன்
என்ன நினைப்பார் என்பது எனக்குள் சுவாரசியமான ஒரு கேள்வியாக இருக்கிறது. ஒரு சின்ன
புன்முறுவலோடு “நல்லா செஞ்சிருக்கே, இவனே” என்று
சொல்லியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.
இப்படியெல்லாம் நினைத்துக்கொள்வதை நான் விட்டல்ராவிடம் தெரிவித்தேன். ஒருகணம் கூட யோசிக்காமல்
அவரும் “ஆமாமாம். அப்படித்தான் சொல்லியிருப்பார். அப்படி சொல்றதுதான் அவர் பாணி” என்றார்.
விட்டல்ராவுக்கும் எனக்கும் நண்பரான மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு இப்புத்தகத்தைச்
சமர்ப்பணம் செய்வதில் மிகவும் மனநிறைவடைகிறேன்.
