Home

Sunday, 2 November 2025

கற்பனையில் எழும் உலகம்

 

சிறார்களுக்கென பாடல்களை எழுதிவரும் இன்றைய தலைமுறையில் குறிப்பிடத்தக்க கவிஞராக குருங்குளம் முத்து ராஜாவைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள் பாடநூல்களில் இடம்பெறவில்லை என்றாலும் இணைய உலகில் வலம் வருகின்றன. அதன் வழியாக எப்போதும் சிறார்களுக்கு நெருக்கமானவராகவே அவர் இருந்து வருகிறார்.

புதிதாக வந்திருக்கும் ‘பூ பூ பூசணி’ தொகுதியில் ஐம்பது பாடல்கள் உள்ளன. பெரும்பாலான பாடல்கள் சிறார்களின் விளையாட்டையும் கற்பனையையும் காட்சிப்படுத்துகின்றன. நம் கண் முன்னால் நிகழ்பவைபோல அப்பாடல்கள் எழுதப்பட்டிருப்பதால், அவற்றை வாசிக்கும்போதே நம்மால் எளிதாக மனத்திரையில் அக்காட்சியை விரித்துப் பார்க்கமுடிகிறது. அக்காட்சிகள் பல நேரங்களில் நம்மையும் குழந்தைகளாக மாற்றிவிடுகின்றன.

மாலை நேரத்தில் வீட்டுத் தோட்டத்தில் பறவைகள் கூடடையத் தொடங்கும் நேரத்தைப்பற்றிய ஒரு பாடல் இத்தொகுதியில் உள்ளது. காக்கை, குருவி, குயில், மரங்கொத்தி என பல வகையான பறவைகள் அந்த மரத்தில் அமர்ந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் தமக்கே உரிய விதத்தில் ஓசையை எழுப்பி கிளைகளில் தாவிக் குதித்து விளையாடியபடி இருக்கின்றன. இக்காட்சியை சிறார்களின் கண்களால் பார்க்கும்போது, அந்தத் தோட்டத்தில் ஒரு பாட்டுப்போட்டி நடப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் கற்பனையே பாட்டுக்கு ஓர் அருமையான தொடக்கத்தை அளித்துவிடுகிறது.

ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு தாளத்தில் குரலெழுப்பி கவனத்தை ஈர்க்கிறது. அப்போது ஏதோ ஒரு பறவையின் சிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு மெல்ல மெல்ல அசைந்தாடி மண்ணை நோக்கி இறங்கி வருகிறது. அக்காட்சியை பறவைகளின் இசைக்கேற்ப நடனமாடிக்கொண்டே இறங்கிவரும் பெண்ணாக குறிப்பிடுகிறார் முத்து ராஜா.

 

இடைவிடாது இசை கூட்டும்

வண்டுகளின் சிறகு

இசையில் நடனமாடி இறங்கும்

உதிர்ந்த ஒற்றை இறகு

 

இறகு தொடர்பாக எழுதப்படும் எந்த வரியைப் படித்தாலும் பிரமிள் எழுதிய ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது’ என்னும் கவிதையை நினைக்காமல் இருக்கமுடியாது. முத்து ராஜாவின் பாடலைப் படிக்கும்போதும் அந்தக் கவிதை வரி நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த இறகை,  இசைக்கு மயங்கி நடனமாடிக்கொண்டே இறங்கும் இறகாக இன்னொரு கோணத்தில் கற்பனை செய்திருக்கிறார் முத்து ராஜா. ஏற்கனவே பறவைகளில் பல்வேறு அமைப்பிலான பாடல்களால் நிறைந்திருக்கும் அச்சூழலுக்கு அந்தக் கற்பனை கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. பாடல் இருக்கும் இடத்தில் ஆடலும் இருப்பது இயற்கை  அல்லவா.

பாடல், ஆடலோடு அந்தக் கற்பனை முடியவில்லை. அதைக் கேட்டும் பார்த்தும் மகிழ்ச்சியடையும் தோட்டத்துப் பூக்களின் பக்கம் நகர்ந்து செல்கிறது. அப்பூக்கள் ஆடல் பாடலில் மயங்கி விழிமூடுவதுபோல தன் இதழ்களை மூடத் தொடங்குகின்றன. அதைப் பார்த்த பறவைகள் அவற்றின் துயிலுக்குத் தொல்லையாக இருக்கக்கூடாதென எண்ணி அனைத்தையும் நிறுத்தி அவையும் தம் கூட்டுக்குத் திரும்பி ஓய்வெடுக்கத் தொடங்குகின்றன. இப்படி ஒரு கவித்துவத்தோடு பாடல்  நிறைவடைகிறது.

’மகிழ்ச்சி இருக்குது மனசுக்குள்ளே’ பாடலை கற்பனையின் உச்சம் என்றே சொல்லவேண்டும். மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் நல்ல தாளக்கட்டோடு அமைந்துள்ளது.

 

சோப்பு டப்பாவும் செல்போனாகும்

எங்க கையில – அதில்

செல்ஃபி எடுத்து சிரிச்சிக்குவோம்

பிள்ளைங்க நாங்க

 

பாடலில் தொடக்கப்பகுதியிலே இப்படி  தம்மைத்தாமே அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள் குழந்தைகள். அப்போது தொடங்குகிற அவர்களுடைய கற்பனை சிறுகச்சிறுக வளர்ந்துகொண்டே போகிறது. வெறும் கையில் ஸ்டீரிங் பிடித்து கார் ஓட்டுவது, வீல் இல்லாத காருக்கு காலால் ப்ரேக் போடுவது, மழை பொழிந்தால் சேமை இலையைக் குடையாக விரித்துப் பிடித்துக்கொள்வது, அதன் வலிமை குறையத் தொடங்கியதும் துணியைப்போல அதைத் தலைமீது விரித்துவைத்துவிட்டு நனைந்தபடி வீட்டுக்குத் திரும்பிவருவது, சின்ன சொப்பில் சோறாக்குவது, இலை தழையைப் பிய்த்துப் போட்டு கூட்டு சமைப்பது, மணல்வீடு கட்டுவது என எல்லையற்று விரிகிறது அவர்களுடைய கற்பனை உலகம்.

 

இல்லேன்னு சோர்ந்துபோய்

உட்கார்ந்ததில்ல

மகிழ்ச்சி எல்லாமே இருக்குது

எங்க மனசுக்குள்ள

 

என ஒரு தற்கூற்றோடு முடிவடைகிறது பாடல். மனத்தால் அடையவேண்டிய மகிழ்ச்சியை வெளியே தேடித்தேடி சலித்துத் துன்பத்தில் மூழ்குவதுதான் மனிதகுலத்தின் மாபெரும் பிரச்சினை. குழந்தைகளின்  உலகம் அதைத் தன் கற்பனை வழியாக அழகாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுவிடுகிறது. வளரும் பருவத்தில் அந்தக் கற்பனையை இழக்க இழக்க, அவர்களுடைய துன்பம் பெருகத் தொடங்கிவிடுகிறது. அதுதான் பெரிய துரதிருஷ்டம்.

’சவ்வுமிட்டாய்த் தாத்தா’ பற்றிய பாடல் நல்ல சித்தரிப்போடு அமைந்துள்ளது. தெருமுனையில் சவ்வுமிட்டாய்த் தாத்தா வருவதும் அவருடைய சத்தத்தைக் கேட்டு குழந்தைகள் ஓடோடிச் சென்று அவரைச் சூழ்ந்துகொள்வதும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வியாபாரத்துக்குப் பிறகு இறுதியில் ‘சவ்வுமிட்டாய் கடைகளிலே கிடைக்காதுங்க, தெருவில் வந்தால் மகிழ்ச்சியாக வாங்கித் தின்னுங்க’ என்றொரு அறிவிப்புடன் பாடல் முடிவடைகிறது.

 

பூ பூ பூசணிப்பூ

பூத்திருக்கு கொடியிலே

பூவை எவரும் பறிக்கவேண்டாம்

பிஞ்சு இருக்கும் அடியிலே

 

குட்டி குட்டிப் பிஞ்சுதான்

குண்டு போல பெருத்தது

வெட்டி சாம்பார் வைக்கலாம்

வெப்பம் தணிக்க வல்லது

 

வீட்டு வாசலில் தொங்குது

வீதியில் ஏன் உடையுது?

வேண்டாத வேலையெல்லாம்

யாரு செய்யச் சொன்னது?

 

தொகுப்பின் தலைப்புப்பாடல் தாளத்தோடு பாடும் வகையில் அழகாக அமைந்துள்ளது. பூவைப் பறிக்கவேண்டாம் என பூவுக்காக மன்றாடும் குழந்தையின் குரலுக்கு மட்டுமே வீதியில் பூசணிக்காயை உடைக்கும் செயலைக் கண்டிக்கவும் உரிமை இருக்கிறது. பூவையும் காயையும் பூவாகவும் காயாகவும் மட்டுமே பார்க்கும் குழந்தையின் கண்களை ஏறத்தாழ இறைவனின் கண்கள் என்றே சொல்லவேண்டும்.

’மணி அடிக்கிறாங்க’ என்னும் பாடல் ஒரு கதைக்குரிய தன்மையோடு அமைந்திருக்கிறது.

 

அழைப்புமணி அடிக்கிறாங்க

கதவைத் திறங்க

ஐஸ் வண்டி மணி சத்தம்

காசை எடுங்க

 

என்று தொடங்குகிற அப்பாடல் நம்மைச் சுற்றி தினந்தோறும் நாம் கேட்கும் ஒவ்வொரு மணி சத்தத்தையும் பட்டியலிட்டு, அக்கணத்தில் நாம் செய்யவேண்டியதையும் பட்டியலிட்டபடி நீண்டு போகிறது. இறுதியில்

 

நடுவர் ஒரு மணி அடிச்சா

பேச்சை நிறுத்துங்க – இது

கடகடன்னு கடைசி மணி

வீட்டுக்குப் போங்க

 

என்று குறிப்பிட்டு பாடல் நிறைவடைகிறது. தெரு, கொட்டகை, கோவில், ஸ்டேஷன் என ஒரு சிறுவனின் கற்பனை எங்கெங்கோ அலைந்து சுழன்றாலும் அவன் மனம் எப்படியோ தன்னையறியாமல் பள்ளிக்கூடத்தில் வந்து நின்றுவிடுகிறது. புரிந்துகொள்ளமுடியாத புதிர் இது.

’நானும் கூட பறக்கணும்’ நல்லதொரு கற்பனை நிறைந்த பாடல்.

 

சிறகு இரண்டு எனக்கும் கூட முளைக்கணும்

நான் பறவைபோல சொய்ங்க்ன்னு பறக்கணும்

 

என்று புன்னகையோடு தன் விருப்பத்தைப் பட்டியலிடத் தொடங்குகிறாள் ஒரு சிறுமி. பறந்து சென்றால் பச்சைக்கிளியையும் குயிலையும் சந்தித்து உரையாடலாம் என அச்சிறுமி கற்பனை செய்துகொள்கிறாள். பிறகு’ பறந்து பறந்து ஊரின் அழகையெல்லாம் பார்க்கவேண்டுமென்று நினைக்கிறாள். மலையுச்சிக்குச் செல்வதையும் மேகத்துக்குள் நுழைவதையும் நினைத்துக்கொள்கிறாள். இப்படி அவளுடைய கற்பனை நீண்டுகொண்டே செல்கிறது. இறுதியில் ‘பழுத்த பழத்தை கொத்தாம பறிக்கணும், அதை பசியோடு இருக்கும் குழந்தை மடியில் பத்திரமா போடணும்’ என்று கேட்டுக்கொள்கிறாள்.

’படித்தால் என்ன நடக்கும்?’ இன்னொரு நல்ல பாடல். ஒரு தோட்டத்தில் உட்கார்ந்து படித்த யாரோ ஒருவர் தன் புத்தகத்தை மறதியாக அங்கேயே விட்டுச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்கு  கோழி, குரங்கு, நாய், எலி, வண்ணத்துப்பூச்சி என எல்லாமே ஒவ்வொன்றாக வருகிறது. ஒவ்வொன்றும் அப்புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்குகிறது. புத்தக வாசிப்பு அவருடைய சிந்திக்கும் திறனையே மாற்றியமைத்துவிடுகிறது.

 

நாய் ஒன்று புத்தகத்தை

மோப்பம் பிடித்து படித்தது – அது

வாலைக் குழைத்து ஆட்டாமல்

நன்றி நன்றி என்றது

 

எலி ஒன்று புத்தகத்தை

எடுத்துப் புரட்டிப் பார்த்தது

விரட்டி வந்த பூனையை

எதிர்த்து கேள்வி கேட்டது

 

இப்படி ஒவ்வொரு உயிரினத்தின் சிந்திக்கும் ஆற்றலையும் செயல்பாடுகளையும் புத்தக வாசிப்பு மாற்றி அமைத்துவிடுகிறது. ஒரு விளையாட்டுக்கதை போன்ற விவரணைகளோடு பாடல் இருந்தாலும், புத்தக வாசிப்பு எத்தகு மாற்றங்களை இம்மண்ணில் ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இரு டப்பாக்களை முன்வைத்து முத்து ராஜா எழுதியிருக்கும் பாடல் இத்தொகுதியின் மிகச்சிறந்த பாடல் என்று சொல்லலாம். எந்த விளக்கமும் தேவையற்ற விளையாட்டுப் பாடல் அது.

 

சின்ன டப்பா பெரிய டப்பா

சேர்ந்து கடைக்குப் போனதாம்

சின்ன டப்பா அது நிறைய

சீனி வாங்கி மூடுதாம்

பெரிய டப்பா மாவு நிரப்பி

பின்னாலேயே ஓடுதாம்

வீட்டுக்குப் போய் மாவு சீனி

சேர்த்துக் கொட்டிக் கலக்குதாம்

பலகாரம் செய்து தின்னு

டப்பாங்குத்து ஆடுதாம்

 

குழந்தைகளின் உள்ளத்தில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் கற்பனையை எளிதாகத் தொடும் அளவுக்கு குழந்தைகளின் உலகத்தைப்பற்றி நன்கு அறிந்தவராக இருக்கிறார் முத்து ராஜா. அந்த உலகத்தில் ஒருவராக தன்னையும் கரைத்துக்கொள்ளும் ஆர்வமும் அவருக்கு இருக்கிறது. தன் மனத்திலெழும் காட்சிக்கு உகந்த வகையில் தாளக்கட்டோடு கூடிய வரிகளை அவரால் எழுதவும் முடிகிறது. அந்த அறிவும் அனுபமும் நம் சூழலில் அவரைச் சிறந்த பாடலாசிரியராக வடிவமைத்துள்ளன.

 

(பூ பூ பூசணி. சிறார் பாடல்கள். குருங்குளம் முத்து ராஜா. மேஜிக் லாம்ப், 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி -2. விலை. ரூ.140)

 

(புக் டே – இணையதளம் – 31.10.2025)