Home

Friday, 24 February 2017

மௌனம் என்னும் புகலிடம்



     ஒரு குடும்பத்தில் தலைவன் பொருள்வயின் பிரிவது தவிர்க்கமுடியாத ஒரு செயல்.  குடும்பம் நடத்தும் ஊரில் ஒரு தலைவனால் தொழில்செய்து சம்பாதிக்கமுடியாத சூழல் சங்க காலத்திலிருந்து இன்றுவரை ஒரு வரலாற்றுச் சங்கிலியாக நீண்டபடியே இருக்கிறது.  தன் உழைப்பையும் அறிவையும் திறமையையும் தாராளமாக வழங்கித்தான் ஒருவனால் பொருளைச் சம்பாதிக்கமுடியும். இப்படி எழுதிச் செல்லும் அளவுக்கு பொருளும் உழைப்பும் எல்லா இடங்களிலும் ஓர் எளிய சமன்பாடாக இருப்பதில்லை.  சில இடங்களில் சொல்லடி பட நேரலாம். சில இடங்களில் கல்லடியும் பட நேரலாம்.  அத்தகு அவமானங்களை உயிருக்குயிரான இல்லறத்துணை நேருக்குநேர் பார்ப்பதை எந்த ஆண்மனமும் ஏற்றுக்கொள்வதில்லை.  எங்கோ கண்காணாத இடங்களில் படும் துன்பங்களையும் அவமானங்களையும் பெரிதாக நினக்காத மனம் தன் உற்ற துணைவி அல்லது பெற்றறெடுத்த தாய் அல்லது பிள்ளைகள் முன்னிலையில் அவற்றை எதிர்கொள்வதை மனம்கூசும் செயலாக நினைக்கிறது.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவே ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான்.  எப்பாடு பட்டாவது பொருளிட்ட ஏதோ ஓர் ஊரும் துணைவியும் பிள்ளைகளும் நிம்மதியாக வாழ இன்னொரு ஊருமாக தன்னுடைய வாழ்வை வடிவமைத்துக்கொள்வது பல ஆண்களுக்கு தவிர்க்க இயலாத முடிவாகவே இருக்கக்கூடும்.  பிரிந்திருக்கும் காலத்தில் ஆண்கள் சம்பாதிக்கும் பொருள் குறைந்த கால அளவுக்கே கஞ்சி குடித்து பசியாறும்படி இருக்கக்கூடும். மனைவி அல்லது பிள்ளைகளின் பசியைக் காணப் பொறுக்காத தலைவன் மறுபடியும் பொருள்வயின் ஊரைவிட்டுச் செல்லக்கூடும்.  முடிவற்ற இத்தொடர்கதையின் அவலம் இலக்கிய வெளிமுழுக்க அடர்ந்திருக்கிறது.

Tuesday, 21 February 2017

தாய்மையின் அழகு



                மானுட வாழ்க்கையைக் குறிக்கும் படிமங்களை தமிழ்க்கவிதைப் பரப்பில் ஏராளமாகக் காணலாம். சிலருடைய கவிதைகளில் அது மகாநதி. சிலருடைய கவிதைகளில் அது மாபெரும் கடல். இன்னும் சிலருடைய கவிதைகளில் அது இனிய தென்றல். வெவ்வேறு தருணங்களில் சுவைத்த வாழ்வின் குணங்களை அவை அடையாளப்படுத்துகின்றன. வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ஒரு சிற்பத்தின் நிழற்படங்களைப்போல.

Sunday, 19 February 2017

ஒற்றைமரம் - சிறுகதை


ஆழ்கவனச் சிகிச்சைப் பிரிவு வளாகத்தைத் தேடி உள்ளே சென்ற இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே திரும்பி படிக்கட்டுகளில்
இறங்கி வருவதை நம்பமுடியாமல் ஆச்சரியத்தோடு பார்த்தான் சிவா. அவன் கைப்பேசியில் பொழுதுபோக்குக்காக ஒலிக்கவிட்ட இசை அதிர்ந்தபடியே இருந்தது.  அதை அணைக்காமலேயே நிமிர்ந்து “என்னடா, போன வேகத்துலயே திரும்பிட்ட? சந்திரிகா இல்லயா?என்று சிரித்துக்கொண்டே கேட்டான். ஒருகணம் அவனை முறைத்துவிட்டு முதுகில் தட்டினேன். 

Friday, 3 February 2017

பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ - குணா.கவியழகனின் ’விடமேறிய கனவு’


முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன. சீனப்புரட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் தொடர்ந்து அந்நாடுகளில் நிலவிய கடுமையான கண்காணிப்புகளையும் மீறி புரட்சியின் விளைவுகளைப்பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மானுடத்தின் உலராத கண்ணீர்த்தடத்தை அடையாளப்படுத்தியபடி இருக்கின்றன. ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தவைத்த போர்களும் புரட்சிகளும் அதிகாரத்தை அடைந்துவிட்டால் வெற்றியின் வரலாறாக மாறிவிடும். அதிகாரத்துக்கு அடிபணிந்துவிடும்போதோ அல்லது தன்வசம் இருக்கும் அதிகாரத்தை இழந்துவிடும்போதோ, அனைத்தும் தோல்வியின் வரலாறாக மாறிவிடும். உலகம் உருவான காலத்திலிருந்து மீண்டும்மீண்டும் நிகழும் மாறாத உண்மை இது.

Monday, 30 January 2017

சாம்ராஜின் சிறுகதைகள் - இழந்தவர்களின் உலகம்



சமீப காலத்தில் சிறுகதைகளை எழுதி வருபவர்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக எழுதிவரும் முக்கியமான படைப்பாளி சாம்ராஜ். இதற்கு முன்பு தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வந்த அனுபவத்தில் அவருக்கு மிக இயல்பாகவே படைப்புமொழி கைகூடி வந்திருக்கிறது. ஒரு படைப்பில் எந்த அம்சம் முன்வைக்கப்பட வேண்டும், எந்த அம்சத்தை மறைக்கவேண்டும், எது இலைமறை காயென இருக்கவேண்டும் என்னும் தெளிவையும் அவர் அடைந்திருக்கிறார். பத்து சிறுகதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கும் அவருடைய முதல் தொகுதி அவருடைய வரவை அழுத்தமாகப் பதிவு செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.

Tuesday, 17 January 2017

குழந்தைகளின் பொன்னுலகம் - தங்கப்பாவின் ‘பூம்பூம் மாட்டுக்காரன்’



தமிழ்ச்சூழலில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மரபுப்பாவலராக ஊக்கமுடன் இயங்கிவரும் தங்கப்பா தொடக்கக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்கான பாடல்களையும் எழுதி வருகிறார். எங்கள் வீட்டுச் சேய்கள் அவருடைய தொடக்கக் காலத்தொகுதிகளில் மிகமுக்கியமானது. குழந்தையோடு குழந்தையாக வாழ்ந்த அனுபவங்களை அத்தொகுதியில் நாம் காணலாம்.

இயற்கைக்காட்சிகளின் சொல்லோவியத் தொகுப்பு - தங்கப்பாவின் ‘காரும் கூதிரும்’




குறுந்தொகையைப்பற்றி நானும் நண்பரொருவரும் ஒரு மாலையில் உரையாடிக்கொண்டிருந்தோம். பேச்சு நீண்டுநீண்டு குறுந்தொகையிலிருந்து ஆளுக்கு சில வரிகளை நினைவிலிருந்து சொல்ல முயற்சி செய்வதில் வந்து முடிந்தது. கணநேர யோசனைக்குப் பிறகு கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே, கன்றும் உண்ணாது கலத்திலும் படாது, கையில் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் என நண்பர் வேகவேகமாக ஒரு பத்து வரிகளைச் சொன்னார். என் பங்குக்கு நானும் சிறுகோட்டுப் பெரும்பழம், செம்புலப்பெயல்நீர், யாருமில்லை தானே கள்வன், பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியல், நோக்கிநோக்கி வாள் இழந்தனவே என சில வரிகளை முன்வைத்தேன். அப்படிச் சொல்ல முடிந்ததில் இருவரும் மகிழ்ச்சியுற்றோம். படித்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் எப்படி அந்த வரிகள் மனத்தில் தங்கியிருக்கின்றன என்றொரு கேள்வி எழுந்தது. சொற்கள் அடுக்கப்பட்டிருந்த முறையும் சொன்ன விதமுமே மிகமுக்கியக் காரணங்கள் என்பதை அக்கணத்தில் கண்டடைந்தோம்.