Home

Wednesday 26 April 2017

அகத்தில் மலரும் தெளிவு - ரா. ஸ்ரீனிவாஸனின் "அசையாச் சிறுகல்"



நாள் முழுக்கப் பார்த்தாலும் இன்னும் கொஞ்சநேரம் பார்க்கலாமே என்று தோன்றவைக்கிற அளவுக்கு அழகு நிறைந்தவை ஹொய்சளர் காலத்துச் சிற்பங்கள்ஒரே ஒரு சதுர அடி பரப்பளவுள்ள கற்களில்கூட கச்சிதமும் நளினமும் சொக்கவைக்கிற அழகும் பொருந்திய சிற்பங்களைச் செதுக்கிவைத்திருக்கிறார்கள்பலவிதமான நிலைகளில் அவர்கள் செதுக்கியருக்கும் நடனநங்கையர்களுடைய தோற்றத்தின் வசீகரத்துக்கு ஈடு இணையே இல்லைமல்லிகார்ஜூனனுக்கும் லட்சுமிநாராயணனுக்கும் எழுப்பப்பட்ட கோயில்களில் கருவறை தவிர வேறொன்றும் வேறுபாடில்லைதூண்களிலும் சுற்றுச்சுவர்களிலும் எங்கெங்கு நோக்கினும் சிற்பங்களே காணக்கிடைக்கின்றனஎன் சுவையை அறிந்துவைத்திருக்கும் நண்பரொருவர் தன்னுடைய கிராமத்தில் உள்ள ஹொய்சளர் காலத்துக்கு கோவிலொன்றை காண்பதற்காக அழைத்துச் சென்றார்


ஏறத்தாழ மாலை மூன்றரைமணிக்கு கோவிலைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கிய நாங்கள் இரவு கவியத் தொடங்கும்வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தோம்ஒருபோதும் ஒரே சுற்றில் பார்த்துமுடிக்க முடியாதவை ஹொய்சளர் கோயில்கள்கிட்டத்தட்ட அறுகோண முக்கோணத்தைப்போல ஆறு முனை விளிம்புகளை உடைய ஒரு விண்மீனின்  அமைப்புடன் தரைமீது ஒரு ஆள் உயரத்துக்கு எழுப்பப்பட்ட மேடை. அதன்மீதுதான் கோயில்.   பொதுவாக ஆறு அல்லது எட்டு அடுக்குகள் காணப்படும்முதல் சுற்றில் படைகளின் வரிசை. குதிரைகளும் யானைகளும் வெவ்வேறு அலங்காரங்களிலும் நிலைகளிலும் நிற்கும். அதற்கடுத்த வரிசைகளில் ஆர்ப்பரிக்கும் படை வீரர்கள். அதற்கும் மேற்பட்ட சுற்றில் நடனநங்கையர்கள்அதற்கும் மேலாக இராமாயண, மகாபாரதக் காட்சிகள். அதற்கும் மேற்பட்ட சிற்பங்கள் இதுவரை பார்த்த சிற்பங்களைவிட ஏறத்தாழ மூன்றுமடங்கு பெரியவை. தெய்வங்களாலும் நடனமங்கையர்களாலும் அச்சுற்று நிறைந்திருக்கும். அடுத்து சற்றே வெளிப்புறம் நீண்ட தளம். அப்புறம் இரண்டு அடுக்குகள்அங்கேயும் சிற்பங்கள்ஒரு சமயத்தில் ஒரு வரிசையைமட்டும் கவனித்துப் பார்ப்பது என்கிற கணக்கில் பார்த்தாலும் ஏறத்தாழ ஆறு அல்லது எட்டு முறை சுற்றி வந்தால்தான் சிற்பங்களைப் பார்த்த மனநிறைவு ஏற்படும்பொழுது சாய்ந்து வானில் முழுநிலா எழுந்ததுநிலவொளி மழையெனப் பொழிந்து அந்தச் சிற்பங்களைத் தழுவியதுசிற்பங்களின் வசீகரம் இப்போது பல மடங்காகப் பெருகியிருப்பதைப் பார்த்தேன்.

திரும்ப மனமில்லாமல் வீட்டுக்குத் திரும்பி நடந்தோம்அப்போது விம்மும் குரலில் நண்பர் சொன்னார்.  "நான் மிகச்சிறிய வயதிலிருந்தே இந்தக் கோயிலைப் பார்த்து வருகிறேன். இதே கல்யானைமீது ஏறி விளையாடியிருக்கிறேன்எண்ணூறு ஆண்டு பழைமையான கோயில் என்றெல்லாம் அப்போது நினைத்துப் பார்த்ததில்லைஎங்கள் வீட்டு வாழைத் தோட்டம், சோளக்கொல்லை போல இதுவும் எங்களுக்குச் சொந்தமானது என்கிற நினைப்புதான் எனக்குள் இருந்தது. இன்னும் நான்கு வருடங்களiல் பணியிலிருந்து ஓய்வடைந்துவிடுவேன். அதற்கப்புறம் பத்தோ, இருபதோ ஆண்டுகள் என் வாழ்வு. நான் ஆடி மகிழ்ந்த கோயில் தளத்தில் வேறு சில கால்கள் அப்போது ஆடிக்கொண்டிருக்கும்." சொல்லி முடித்துவிட்டு சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு திடுமென தனக்குள்ளேயே அசைபோடுகிறவர்போல அமைதியான குரலில் "பருகித் தீராத இந்த இயற்கையின் அழகை காலமெல்லாம் பருகிப்பருகி இன்பத்தில் திளைக்கட்டும் என்றே இந்தச் சிற்பங்களை வடித்துவைத்திருக்கிறான் போலும் மனிதன்" என்றார். நிலவும் பனியும் பொழிந்த அக்கணம் அது மாபெரும் சத்தியம் என்பதை என் மனம் உணர்ந்தது.

காலையையும் மாலையையும் மேகங்களையும் மரங்களையும் இயற்கையெழிலையும் இந்தச் சிற்பங்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன என்ற சொற்கள் எனக்குள் மிகப்பெரிய மனவிரிவை உருவாக்கினசிற்பங்கள் மட்டுமல்ல, பாறைகள்கூட இந்த வானத்தையும் மேகத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பாறையும் ஆழ்ந்த மௌனத்தில் திளைத்தபடி இயற்கையைத் தொழுகின்றன என்று எனக்குள்ளாகவே ஒருமுறை சொல்லிக்கொண்டேன். பிறகு, நண்பரிடமும் சொன்னபோது ஆமாம் ஆமாம் என்று பரவசத்துடன் தலையசைத்தார். நாம் சுவைஞர்கள் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லைசிற்பங்கள், பாறைகள், குன்றுகள், மரங்கள் என நம்மைச் சூழ்ந்து நிறைந்துள்ள ஒவ்வொன்றும் மாபெரும் சுவைஞர்கள் என்பதிலும் ஐயமில்லை என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

இந்த அனுபவத்துக்கு நிகரான ஒரு சித்திரம் ரா.ஸ்ரீனிவாசனின் "அசையாச் சிறுகல்" என்னும் கவிதையில் தீட்டிக் காட்டப்பட்டுள்ளதுசூரியன் உதிக்கும் வேளைகடலோரம்அலைகளிடையே செந்நிறத்தில் ஒரு கணம் தகதகத்து கடல்மட்டத்திலிருந்து மேலெழுந்து உருண்டு நிறம்மாறி நிறம்மாறி நகர்கிறான் சூரியன்சூரியோதயக் காட்சியில் மனம் பறிகொடுத்து நிற்கிறான் ஒருவன்அவனுக்கருகே புல்வெளியில் ஒரு கல் கிடக்கிறதுமுதல் பார்வையில் அது எப்படியோ தவறி விழுந்து கிடக்கிற கல்லாகத் தெரிகிறதுமறுபார்வையில் சூரியோதயத்தின் வசீகரத்துக்கு வசப்பட்டு லயித்து நிற்கிற ஒன்றாகத் தெரிகிறதுஆனந்தம் நிரம்பிய மனத்துடன் அவன் நகர்ந்தாலும். நகராது அங்கேயே நிற்கிறது கல்அனைத்தையும் மறந்தும் துறந்தும் ஆழ்ந்த தியான நிலையில் ஒன்றிக் கிடக்கிறதுநம் சுவையுணர்வைவிட அதன் சுவையுணர்வும் ஆழ்ந்த தியான உணர்வும் எவ்வளவோ உயர்ந்ததுஅசையாச் சிறுகல் மட்டுமல்ல, அசைக்கப்பட்டாலும்கூட தியான நிலை பிசகாத சிறுகல்.

கல்லை ஒரு பார்வையாளனாக மாற்றி தன்னோடு நிற்க வைத்துக்கொள்கிற கவித்துவம் இக்கவிதைக்க வெற்றியைத் தேடித் தருகிறதுஅவன் தினந்தோறும் கடற்கரைக்குச் சென்று சூரியோதம் பார்த்துத் திரும்பக் கூடியவனாக இருக்கக்கூடும்தமக்குக் கிடைத்திருக்கும் நற்பேற்றை நினைத்துநினைத்து அவன் ஆனந்தத்தில் திளைத்திருக்கக்கூடும்மனிதச் சுவடே இல்லாத அந்த அதிகாலை வேளையில் தங்கச் சக்கரமாக அலைமீது உருண்டுவரும் சூரியனின்  தோற்றத்தை தான்மட்டுமே காண்கிற ஒரு களிநடனமாக அவன் நினைத்திருக்கலாம்அப்போது தற்செயலாக அருகில்  கிடந்த கல்லைப் பார்த்த கணம் அவன் எண்ணங்கள் அடியோடு மாறியிருக்க வேண்டும்அதனால்தான் மறுநாள் காலையில் அவன் போய்  கடற்கரையருகே நின்றதும் அங்கிருக்கும் கல் தனக்கு முன்னதாக சூரியோதயக் காட்சிக்காக வந்து காத்திருப்பதாகத் தோன்றுகிறதுஏதோ ஒரு சில நிமிடங்கள் நின்று சூரியோதயத்தைப் பார்த்துவிட்டு திரும்புகிற தனக்கே இத்தனை ஆனந்தமென்றால் காலமெல்லாம் ஒரே இடத்தில் இருந்து சூரியனின் முழு அழகையும் அள்ளியள்ளி உண்டபடி இருக்கிற கல்லின் ஆனந்தத்துக்கு எல்லையே  கிடையாது என தோன்றியிருக்கலாம்எல்லையற்ற பேரின்பத்தில் திளைத்து தியானத்தில் மூழ்கிய அந்தக் கல்லின்முன் தன்னை எளியவனாக உணர்ந்து தெளிவடைகிறது மனம்புறஉலகில் தெளிவை ஏற்படுத்தும் சூரியோதயம் அகஉலகிலும் தெளிவை வழங்குகிறது.

*

அசையாச் சிறுகல்

ரா.ஸ்ரீனிவாஸன்

உதயத்திற்கு முன்பு அங்கிருக்கும் என்னருகில்
சிறுகல் எனக்கு முன்னதாக
நேற்றும் இன்றும்

பாறையிலிருந்து வெட்டுப்பட்டது
என்பதுபோல ஒழுங்கற்ற ஓரங்களுடன்
புல்விரிப்பின்மீது அசைவற்று

எழுச்சிக்கு முன்னால் வானில் வரைந்த
வர்ணங்கள் கரைய
வங்கக்கடலில்
துளித்துளியாக
எழுந்தது வட்டப்பிழம்பாய் தங்கப்பரிதி

கடலும் மணற்கரையும் கவியானும்
அந்தச் சிறுகல்லும்
நனைந்தோம் காண்

கிட்டியதை எண்ணி
விரைவில் விட்டுச் சென்றேன் கடற்கரையில்
அசையாச் சிறுகல் தியானத்தைத் தொடர

*

எண்பதுகளின் இறுதியில் தெரியவந்த முக்கியக் கவிஞர்விருட்சம் வெளியீடாக வெளிவந்த "ரா.ஸ்ரீனிவாஸன் கவிதைகள்" பரவலான வகையில் வாசகர்களைக் கவர்ந்த தொகுதியாகும்அளவான சொற்களாலும் மௌனம் மிகுந்த இடைவெளிகளாலும் வாழ்க்கைச் சித்திரங்களைத் தீட்டுவதில் இவருடைய கவிதைகளுக்கு முக்கியமான பங்குண்டு.  "கணத்தோற்றம்" இவருடைய இன்னொரு தொகுதி.